தொடக்கம்   முகப்பு
பரத்தை
37
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
நயந்தோர் உண்கண் பசந்து, பனி மல்க
வல்லன் வல்லன் பொய்த்தல்;
தேற்றான், உற்ற சூள் வாய்த்தல்லே.
தலைமகளைச் சூளினால் தெளித்தான் என்பது கேட்ட காதல் பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது. 7

 
38
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும்
தண் தளிர் வௌவும் மேனி,
ஒண் தொடி முன்கை, யாம் அழப் பிரிந்தே.
தலைமகன் மனைவயிற் போகக் கருதினான் என்பது சொல்லிய தன் தோழிக்குப் பரத்தை சொல்லியது. 8

 
39
அம்ம வாழி, தோழி! ஊரன்
வெம் முலை அடைய முயங்கி, நம் வயின்
திருந்து இழைப் பணைத்தோள் நெகிழ,
பிரிந்தனன் ஆயினும், பிரியலன் மன்னே.
ஒரு ஞான்று தலைவன் தன் மனைக்கண் சென்றது கொண்டு, 'அவன் பெண்மை நலம் எல்லாம் துய்த்துக் காதல் நீங்கிப் பிரிந்தான்' என்பது தலைவி கூறினாள் எனக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, தன் தோழிக்குச் சொல்லியது.

 
40
'அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
ஒண் தொடி முன்கை யாம் அழப் பிரிந்து, தன்
பெண்டிர் ஊர் இறைகொண்டனன்' என்ப
கெண்டை பாய்தர அவிழ்ந்த
5
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே.
உலகியல் பற்றித் தலைவன் தன் மனைக்கண் ஒரு ஞான்று போனதே கொண்டு, 'அவ்வழிப் பிரியாது உறைகின்றான்' என்று, அயற் பரத்தையர் பலரும் கூறினார் என்பது கேட்ட காதல்பரத்தை, அவர் பாங்காயினார் கேட்ப, தன் தோழிக்குச் சொல்லியது

 
77
அம்ம வாழியோ, மகிழ்ந! நின் மொழிவல்:
பேர் ஊர் அலர் எழ, நீர் அலைக் கலங்கி,
நின்னொடு தண் புனல் ஆடுதும்;
எம்மொடு சென்மோ; செல்லல், நின் மனையே.
முன் ஒரு ஞான்று தலைவியோடு புனலாடினான் எனக்கேட்டு, ' இவனுடன் இனி ஆடேன்' என உட்கொண்ட பரத்தை, ' புதுப்புனல் ஆடப் போது' என்ற தலைமகற்குச் சொல்லியது. 7

 
78
கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளி
மதில் கொல் யானையின், கதழ்பு, நெறி வந்த,
சிறை அழி புதுப்புனல் ஆடுகம்;
எம்மொடு கொண்மோ, எம் தோள் புரை புணையே.
இதுவும் அது. 8

 
79
'புதுப் புனல் ஆடி அமர்த்த கண்ணள்,
யார் மகள், இவள்?' எனப் பற்றிய மகிழ்ந!
யார் மகளாயினும் அறியாய்;
நீ யார் மகனை, எம் பற்றியோயே?
தன்னோடு கூடாது தனித்துப் புனலாடுகின்றான் எனக் கேட்டு, தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை தானும் தனியே போய்ப் புனலாடினாளாக, அவளை ஊடல் தீர்த்தற் பொருட்டாகத் தலைமகன் சென்று, தான் அறியான் போல நகையாடிக் கூறிக் கைப்பற்றி

 
81
குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை
அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும்,
மலர் அணி வாயில் பொய்கை, ஊர! நீ
என்னை 'நயந்தனென்' என்றி; நின்
5
மனையோள் கேட்கின், வருந்துவள் பெரிதே.
தன்னைக் கொடுமை கூறினாள் தலைமகள் என்பது கேட்ட பரத்தை, தலைமகன் வந்து தன்மேல் அன்புடைமை கூறினானாக, அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. 1

 
86
வெண் தலைக் குருகின் மென் பறை விளிக் குரல்
நீள் வயல் நண்ணி இமிழும் ஊர!
எம் இவண் நல்குதல் அரிது;
நும் மனை மடந்தையொடு தலைப்பெய்தீமே.
'புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்' என்பது அறிந்த பரத்தை அதற்குப் புலந்து, தலைமகற்குச் சொல்லியது. 6

 
87
பகன்றைக் கண்ணி பல் ஆன் கோவலர்
கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்
யாணர் ஊர! நின் மனையோள்
யாரையும் புலக்கும்; எம்மை மற்று எவனோ?
தலைமகள் தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட காதல்பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, தலைமகனோடு புலந்து சொல்லியது. 7

 
88
வண் துறை நயவரும் வள மலர்ப் பொய்கைத்
தண் துறை ஊரனை, எவ்வை எம் வயின்
வருதல் வேண்டுதும் என்பது
ஒல்லேம் போல், யாம் அது வேண்டுதுமே.
தலைமகனை நயப்பித்துக் கொள்கையில் விருப்பு இல்லாதாள் போல, அவ்வாறு கோடலையே விரும்புவாள், 'அது தனக்கு முடியாது' எனத் தலைமகள் புறனுரைத்தாள் எனக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார்க்குச் சொல்லியது. 8

 
89
அம்ம வாழி, பாண! எவ்வைக்கு
எவன்? பெரிது அளிக்கும் என்ப பழனத்து
வண்டு தாது ஊதும் ஊரன்
பெண்டு என விரும்பின்று, அவள்தன் பண்பே.
'தலைமகன் தலைமகளைப் போற்றி ஒழுகாநின்றான்' என்பது கேட்ட காதல்பரத்தை அவன் பாணனுக்குச் சொல்லுவாளாய் அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. 9

 
90
மகிழ்நன் மாண்குணம் வண்டு கொண்டனகொல்?
வண்டின் மாண்குணம் மகிழ்நன் கொண்டான்கொல்?
அன்னது ஆகலும் அறியாள்,
எம்மொடு புலக்கும், அவன் புதல்வன் தாயே.
தலைமகன் தன் மனைக்கண் சொல்லாமல் தான் விலக்குகின்றாளாகத் தலைமகள் கூறினாள் என்பது கேட்ட காதல் பரத்தை தலைமகன் கேட்குமாற்றால் அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. 10

 
121
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
முண்டகக் கோதை நனைய,
தெண் திரைப் பௌவம் பாய்ந்து நின்றோளே!
பரத்தை தலைமகற்குச் சொல்லியது; 'பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையோடு கூடி மறைந்து ஒழுகாநின்றான்' என்பது அறிந்து தலைவி புலந்துழி, 'இத் தவறு என் மாட்டு இலை; நீ இப் புலவியை நீக்க வேண்டும்' என்று தோழிக்குத் தலைமகன் கூற, புலவ

 
122
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
ஒள் இழை உயர் மணல் வீழ்ந்தென,
வெள்ளாங் குருகை வினவுவோளே! 2

 
123
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
ஒண் நுதல் ஆயம் ஆர்ப்ப,
தண்ணென் பெருல் கடல் திரை பாய்வோளே! 3

 
124
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
வண்டற் பாவை வௌவலின்,
நுண் பொடி அளைஇக் கடல் தூர்ப்போளே! 4

 
125
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
தெண் திரை பாவை வௌவ,
உண்கண் சிவப்ப அழுது நின்றோளே! 5

 
126
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
உண்கண் வண்டினம் மொய்ப்ப,
தெண் கடல் பெருந் திரை மூழ்குவோளே! 6

 
127
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
தும்பை மாலை இள முலை
நுண் பூண் ஆகம் விலங்குவோளே! 7

 
128
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
உறாஅ வறு முலை மடாஅ,
உண்ணாப் பாவையை ஊட்டுவோளே! 8

 
129
,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,
(இந்தப் பாடல் கிடைக்கப்பெறவில்லை) 9

 
130
,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,
(இந்தப் பாடல் கிடைக்கப்பெறவில்லை) 10

 
மேல்