தொடக்கம் முகப்பு
நெய்தல்
 
101
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! உதுக் காண்
ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று, நின் மகள்
பூப் போல் உண்கண் மரீஇய
5
நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே.
அறத்தோடு நின்ற பின்னர் வரைதற் பொருட்டுப் பிரிந்த தலைமகன் வரைவோடு புகுந்தவழித் தோழி செவிலிக்குக் காட்டிச் சொல்லியது. 1

 
102
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்
நீல் நிறப் பெருங் கடல் புள்ளின் ஆனாது,
துன்புறு துயரம் நீங்க,
இன்புற இசைக்கும், அவர் தேர் மணிக் குரலே.
இதுவும் அது. 2

 
103
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
இவட்கு அமைந்தனனால் தானே;
தனக்கு அமைந்தன்று, இவள் மாமைக் கவினே.
அறத்தொடு நின்ற தோழி, வதுவை நிகழாநின்றுழி, தாய்க்குக் காட்டி உவந்து சொல்லியது. 3

 
104
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்ப்
பலர் மடி பொழுதின், நலம் மிகச் சாஅய்
நள்ளென வந்த இயல் தேர்ச்
செல்வக் கொண்கன் செல்வனஃது ஊரே.
புதல்வற் பெற்றுழித் தலைமகன் மனைக்கண் சென்ற செவிலிக்கு, முன்பு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவன் ஊர் நன்மை காட்டிச் சொல்லியது. 4

 
105
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! முழங்குகடல்
திரை தரு முத்தம் வெண் மணல் இமைக்கும்
தண்ணம் துறைவன் வந்தென,
பொன்னினும் சிவந்தன்று; கண்டிசின் நுதலே.
அறத்தொடு நின்ற பின் வேண்டுவன தருதற்குப் பிரிந்த தலைமகன் வரைவொடு வந்துழி, தலைமகள் நுதற்கண் முன்புள்ள பசப்பு நீங்கும் வண்ணம் தோன்றிய கதிர்ப்புக் காட்டி, செவிலிக்குத் தோழி சொல்லியது. 5

 
106
அன்னை, வாழி!வேண்டு, அன்னை! அவர் நாட்டுத்
துதிக்கால் அன்னம் துணை செத்து மிதிக்கும்
தண் கடல் வளையினும் இலங்கும் இவள்
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே.
அறத்தொடு நின்ற தோழி அது வற்புறுப்பான் வேண்டிச் செவிலிக்குச் சொல்லியது. 6

 
107
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! என் தோழி
சுடர் நுதல் பசப்பச் சாஅய், படர் மெலிந்து,
தண் கடல் படு திரை கேட்டொறும்,
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே.
தோழி செவிலிக்கு அறத்தொடுநிலை குறித்துக் கூறியது. 7

 
108
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! கழிய
முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன்
எம் தோள் துறந்தனன்ஆயின்,
எவன்கொல் மற்று அவன் நயந்த தோளே?
அறத்தொடுநிலை பிறந்த பின்னும் வரைவு நீடிற்றாக, 'மற்றொரு குலமகளை வரையும் கொல்?' என்று ஐயுற்ற செவிலி, குறிப்பு அறிந்த தோழி அவட்குச் சொல்லியது. 8

 
109
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நெய்தல்
நீர்ப் படர் தூம்பின் பூக் கெழு துறைவன்
எம் தோள் துறந்த காலை, எவன்கொல்
பல் நாள் வரும், அவன் அளித்த பொழுதே?
அறத்தொடு நின்ற பின்பு வரைவான் பிரிந்த தலைமகன் கடிதின் வாராதவழி, ஐயுற்ற செவிலி, 'அவன் நும்மைத் துறந்தான்போலும்; நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?' என்றாட்குத் தோழி சொல்லியது. 9

 
110
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னை
பொன் நிறம் விரியும் பூக் கெழு துறைவனை
'என்னை' என்றும், யாமே; இவ் ஊர்
பிறிது ஒன்றாகக் கூறும்;
5
ஆங்கும் ஆக்குமோ, வாழிய, பாலே?
நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10

 
111
அம்ம வாழி, தோழி! பாணன்
சூழ் கழிமருங்கின் நாண் இரை கொளீஇச்
சினைக் கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே
5
அருந் தவம் முயறல் ஆற்றாதேமே?
'இற்செறிப்பார்' எனக் கேட்ட தலைமகள் வரையாது வந்து ஒழுகும் தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது. 1

 
112
அம்ம வாழி, தோழி! பாசிலைச்
செருந்தி தாய இருங் கழிச் சேர்ப்பன்
தான் வரக் காண்குவம் நாமே;
மறந்தோம் மன்ற, நாணுடை நெஞ்சே.
களவு நீடுவழி, 'வரையலன்கொல்?' என்று அஞ்சிய தோழிக்குத் தலைமகன் வரையும் திறம் தெளிக்க, தெளிந்த தலைமகள் சொல்லியது. 2

 
113
அம்ம வாழி, தோழி! நென்னல்
ஓங்குதிரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு,
ஊரார், 'பெண்டு' என மொழிய, என்னை,
அது கேட்டு, 'அன்னாய்' என்றனள், அன்னை;
5
பைபய 'எம்மை' என்றனென், யானே.
வரையாது வந்து ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்ப, 'நெருநல் இல்லத்து நிகழ்ந்தது இது' எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 3

 
114
அம்ம வாழி, தோழி! கொண்கன்
நேரேம் ஆயினும், செல்குவம் கொல்லோ
கடலின் நாரை இரற்றும்
மடல்அம் பெண்ணை அவனுடை நாட்டே?
இடைவிட்டு ஒழுகும் தலைமகன் வந்து சிறைப்புறத்தான் ஆனமை அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் தோழிக்குச் சொல்லியது. 4

 
115
அம்ம வாழி, தோழி! பல் மாண்
நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய
தண்ணம் துறைவன் மறைஇ,
அன்னை அருங் கடி வந்து நின்றோனே!
இற் செறிப்புண்ட பின்பும், வரைந்து கொள்ள நினையாது தலைமகன் வந்தானாக, அதனை அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் தோழிக்குச் சொல்லியது. 5

 
116
அம்ம வாழி, தோழி! நாம் அழ,
நீல இருங் கழி நீலம் கூம்பும்
மாலை வந்தன்று, மன்ற
காலை அன்ன காலை முந்துறுத்தே.
எற்பாட்டின்கண் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்ப, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 6

 
117
அம்ம வாழி, தோழி! நலனே
இன்னது ஆகுதல் கொடிதே! புன்னை
அணி மலர் துறைதொறும் வரிக்கும்
மணி நீர்ச் சேர்ப்பனை மறவாதோர்க்கே.
வரையாது வந்து ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 7

 
118
அம்ம வாழி, தோழி! யான் இன்று,
அறனிலாளற் கண்ட பொழுதில்,
சினவுவென் தகைக்குவென் சென்றனென்
பின் நினைந்து இரங்கிப் பெயர்தந்தேனே.
சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி வாயில் மறுத்த தலைமகள், பின்பு தலைமகன் வந்துழி, நிகழ்ந்ததனை அவட்குக் கூறியதூஉம் ஆம். 8

 
119
அம்ம வாழி, தோழி! நன்றும்
எய்யாமையின் ஏதில பற்றி,
அன்பு இலன் மன்ற பெரிதே
மென் புலக் கொண்கன் வாராதோனே!
'வரைதற்கு வேண்டுவன முயல்வேம்' எனச் சொல்லி வரையாது செலுத்துகின்ற தலைமகன் சிறைப்புறத்தான் ஆனமை அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9

 
120
அம்ம வாழி, தோழி! நலம் மிக
நல்லஆயின, அளிய மென் தோளே
மல்லல் இருங் கழி மல்கும்
மெல்லம் புலம்பன் வந்தமாறே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்து சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 10

 
121
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
முண்டகக் கோதை நனைய,
தெண் திரைப் பௌவம் பாய்ந்து நின்றோளே!
பரத்தை தலைமகற்குச் சொல்லியது; 'பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையோடு கூடி மறைந்து ஒழுகாநின்றான்' என்பது அறிந்து தலைவி புலந்துழி, 'இத் தவறு என் மாட்டு இலை; நீ இப் புலவியை நீக்க வேண்டும்' என்று தோழிக்குத் தலைமகன் கூற, புலவ

 
122
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
ஒள் இழை உயர் மணல் வீழ்ந்தென,
வெள்ளாங் குருகை வினவுவோளே! 2

 
123
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
ஒண் நுதல் ஆயம் ஆர்ப்ப,
தண்ணென் பெருல் கடல் திரை பாய்வோளே! 3

 
124
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
வண்டற் பாவை வௌவலின்,
நுண் பொடி அளைஇக் கடல் தூர்ப்போளே! 4

 
125
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
தெண் திரை பாவை வௌவ,
உண்கண் சிவப்ப அழுது நின்றோளே! 5

 
126
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
உண்கண் வண்டினம் மொய்ப்ப,
தெண் கடல் பெருந் திரை மூழ்குவோளே! 6

 
127
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
தும்பை மாலை இள முலை
நுண் பூண் ஆகம் விலங்குவோளே! 7

 
128
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
உறாஅ வறு முலை மடாஅ,
உண்ணாப் பாவையை ஊட்டுவோளே! 8

 
129
,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,
(இந்தப் பாடல் கிடைக்கப்பெறவில்லை) 9

 
130
,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,
(இந்தப் பாடல் கிடைக்கப்பெறவில்லை) 10

 
131
நன்றே, பாண! கொண்கனது நட்பே
தில்லை வேலி இவ் ஊர்க்
கல்லென் கௌவை எழாஅக்காலே.
வாயில் வேண்டி வந்த பாணன் தலைமகன் காதன்மை கூறினானாக, தலைமகள் வாயில் மறுப்பாள் அவற்குக் கூறியது. 1

 
132
அம்ம வாழி, பாண! புன்னை
அரும்பு மலி கானல் இவ் ஊர்
அலர் ஆகின்று, அவர் அருளுமாறே.
வாயில் வேண்டி வந்த பாணன், 'நீர் கொடுமை கூற வேண்டா; நும்மேல் அருள் உடையர்' என்றாற்குத் தலைமகள் சொல்லியது. 2

 
133
யான் எவன் செய்கோ? பாண! ஆனாது
மெல்லம் புலம்பன் பிரிந்தென,
புல்லென்றன, என் புரி வளைத் தோளே!
வாயிலாய்ப் புகுந்த பாணன் தலைமகள் தோள் மெலிவு கண்டு, 'மனைப்புறத்துப் போய் வந்த துணையானே இவ்வாறு வேறுபடுதல் தகாது' என்றாற்கு அவள் சொல்லியது. 3

 
134
காண்மதி, பாண! இருங் கழிப்...
பாய்பரி நெடுந் தேர்க் கொண்கனொடு
தான் வந்தன்று, என் மாமைக் கவினே.
பிரிவின்கண் தலைமகள் கவின் தொலைவு கண்டு வெறுத்து ஒழுகுகின்ற பாணற்குத் தலைமகன் வந்துழிக் கவின் எய்திய தலைமகள் சொல்லியது. 4

 
135
பைதலம் அல்லேம், பாண! பணைத் தோள்,
ஐது அமைந்து அகன்ற அல்குல்,
நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே.
பரத்தை ஒருத்தியைத் தலைப்பெய்வான் வேண்டி அதனைத் தலைமகன் மறைத்து ஒழுகுகின்றது அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் பாணற்குச் சொல்லியது. 5

 
136
நாண் இலை மன்ற, பாண! நீயே
கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்த
கானல் அம் துறைவற்குச் சொல் உகுப்போயே!
வாயிலாய்ப் புகுந்து தலைமகன் குணம் கூறிய பாணற்கு வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது. 6

 
137
நின் ஒன்று வினவுவல், பாண! நும் ஊர்த்
திண் தேர்க் கொண்கனை நயந்தோர்
பண்டைத் தம் நலம் பெறுபவோ மற்றே?
தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கின இடத்தும், அவன் முன்பு செய்த தீங்கு நினைந்து தலைமகள் வேறுபட்டிருந்தாளாக, இனி ' இந்த வேறுபாடு என்?' என்று வினவிய பாணற்கு அவள் சொல்லியது 7

 
138
பண்பு இலை மன்ற, பாண! இவ் ஊர்
அன்பு இல கடிய கழறி,
மென் புலக் கொண்கனைத் தாராதோயே!
தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது. 8

 
139
அம்ம வாழி, கொண்க! எம் வயின்
மாண் நலம் மருட்டும் நின்னினும்,
பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே.
ஆற்றாமை வாயிலாகப் புகுந்திருந்த தலைமகற்குப் பாணன் வந்துழித் தலைமகள் சொல்லியது. 9

 
140
காண்மதி, பாண! நீ  த்தற்கு உரியை
துறை கெழு கொண்கன் பிரிந்தென,
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே.
பாணன் தூதாகிச் செல்ல வேண்டும் குறிப்பினளாகிய தலைமகள் அவற்குத் தன் மெலிவு காட்டிச் சொல்லியது. 10

 
141
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண் துளி வீசிப்
பசலை செய்தன பனி படு துறையே.
வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றாளாகின்ற தலைமகள், 'அவன் வரைதற்குப் பிரியவும், நீ ஆற்றாய் ஆகின்றது என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. 1

 
142
எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படு சினைப்
புள் இறை கூரும் துறைவனை
உள்ளேன் தோழி! படீஇயர் என் கண்ணே!
வரையாது வந்தொழுகும் தலைமகன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, 'நின் கண் துயி றற் பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 2

 
143
எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை,
இனிய செய்த; நின்று, பின்
முனிவு செய்த இவள் தட மென் தோளே.
புறத்துத் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. 3

 
144
எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர்த்
தனிக் குருகு உறங்கும் துறைவற்கு
இனிப் பசந்தன்று என் மாமைக் கவினே.
'தலைமகன் வரைந்து கோடல் நினையாது, களவொழுக்கமே விரும்பி ஒழுகாநின்றான்' என்பது அறிந்து வேறுபட்ட தலைமகள், 'அவன் கூறியவற்றால் இனிக் கடிதின் வரைவன்; ஆற்றாயாகாது ஒழியவேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. 4

 
145
எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ் சினை
ஓதம் வாங்கும் துறைவன்
மாயோள் பசலை நீக்கினன், இனியே!
வரைவு மறுத்த தமர் உடம்படுமாற்றால் சான்றோரைத் தலைமகன் விடுத்தது அறிந்த தோழி தலைமகள் கேட்குமாற்றால் சொல்லியது. 5

 
146
எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர்
நறிய கமழும் துறைவற்கு
இனியமன்ற என் மாமைக் கவினே.
வரைவு கடாவவும் வரையாது ஒழுகுகின்றுழி, நம்மை எவ்வகை நினைத்தார் கொல்லோ?' என்று ஐயுற்றிருந்த தலைமகள் வரைவு தலைவந்துழித் தோழிக்குச் சொல்லியது. 6

 
147
எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர்
ஒண் தழை அயரும் துறைவன்
'தண் தழை விலை' என நல்கினன், நாடே.
சுற்றத்தார் வேண்டிய கொடுத்துத் தலைமகன் வரைவு மாட்சிப்படுத்தமை அறிந்த தோழி உவந்த உள்ளத்தாளாய்த் தலைமகட்குச் சொல்லியது. 7

 
148
எக்கர் ஞாழல் இகந்து படு பெருஞ் சினை
வீ இனிது கமழும் துறைவனை
நீ இனிது முயங்குமதி, காதலோயே!
களவொழுக்கத்தின் விளைவு அறியாது அஞ்சிய வருத்தம் நீங்க வதுவை கரண வகையான் முடித்த பின்பு, தலைமகளைப் பள்ளியிடத்து உய்க்கும் தோழி சொல்லியது. 8

 
149
எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு
அணங்கு வளர்த்து, அகறல் வல்லாதீமோ!
வரைந்து எய்திய தலைமகன் தலைவியோடு பள்ளியிடத்து இருந்துழித் தோழி வாழ்த்தியது. 9

 
150
எக்கர் ஞாழல் நறு மலர்ப் பெருஞ் சினைப்
புணரி திளைக்கும் துறைவன்
புணர்வின் இன்னான்; அரும் புணர்வினனே.
முன் ஒருகால் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பிரிந்து வந்துழி அவனை முயங்காளாக, தோழி, 'நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?' என்று வினவியவழி, தலைமகள் தோழிக்குத் தலைமகன் கேட்பச் சொல்லியது. 10

 
151
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
மிதிப்ப, நக்க கண் போல் நெய்தல்
கள் கமழ்ந்து ஆனாத் துறைவற்கு
5
நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே.
வாயில் வேண்டிய தோழிக்கு தலைமகள் வாயில் மறுப்பாள் சொல்லியது. 1

 
152
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
கையறுபு இரற்று கானல்அம் புலம்பந்
துறைவன் வரையும் என்ப;
5
அறவன் போலும்; அருளுமார் அதுவே.
தலைமகள் வாயில் மறுத்துழி, 'இவன் நின்மேல் தொடர்ச்சியில் குறைவிலன்; அருளும் உடையான்; ஆதலால் நீ இவனோடு புலத்தல் தகாது' என நெருங்கி, வாயில் நேர்விக்கும் தோழிக்கு அவள் சொல்லியது. 2

 
153
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
உளர, ஒழிந்த தூவி குவவு மணல்
போர்வில் பெறூஉம் துறைவன் கேண்மை
5
நல்நெடுங் கூந்தல் நாடுமோ மற்றே?
பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிய தலைமகன் கேட்குமாற்றால் வாயிலாய்ப் புகுந்தாற்குத் தோழி கூறியது. 3

 
154
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
கானல் சேக்கும் துறைவனோடு
யான் எவன் செய்கோ? பொய்க்கும் இவ் ஊரே?
தோழி வாயில் வேண்டி நெருங்கியவழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது. 4

 
155
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்ப, ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடு பெயரும் துறைவற்குப்
5
பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென், யானே!
பல வழியானும் வாயில் நேராளாகிய தலைமகள், 'மகப் பேற்றிற்கு உரித்தாகிய காலம் கழிய ஒழுகுகின்றாய்' என நெருங்கிய தோழிக்குச் சொல்லியது. 5

 
156
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்ப, ஒழிந்த செம் மறுத் தூவி
தெண் கழிப் பரக்கும் துறைவன்
5
எனக்கோ காதலன்; அனைக்கோ வேறே!
பரத்தையிடத்து வாயில் விட்டு ஒழுகுகின்ற தலைமகனது வாயிலாய் வந்தார்க்குத் தோழி வாயில் மறுத்தது. 6

 
202
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற
நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே.
தலைமகன் வரைதல் வேண்டித் தானே வருகின்றமை கண்ட தோழி உவந்த உள்ளத்தளாய்த் தலைமகட்குக் காட்டிச் சொல்லியது. 2
 

 
204
அன்னாய், வாழி, வேண்டு, அன்னை! அஃது எவன்கொல்?
வரையர மகளிரின் நிரையுடன் குழீஇ,
பெயர்வுழிப் பெயர்வுழித் தவிராது நோக்கி,
நல்லள் நல்லள் என்ப;
5
தீயேன் தில்ல, மலை கிழவோற்கே!
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4
 

 
206
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! உவக்காண்
மாரிக் குன்றத்துக் காப்பாள் அன்னன்;
தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள்,
பாசி சூழ்ந்த பெருங் கழல்,
5
தண் பனி வைகிய வரிக் கச்சினனே!
இரவுக்குறிக்கண் தலைமகன் வந்து குறியிடத்து நின்றமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 6
 

 
208
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! கானவர்
கிழங்கு அகழ் நெடுங் குழி மல்க வேங்கைப்
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு,
மணி நிற மால் வரை மறைதொறு, இவள்
5
அறை மலர் நெடுங் கண் ஆர்ந்தன பனியே.
செவிலிக்கு அறத்தொடு நின்ற தோழி, அவளால் வரைவு மாட்சிமைப் பட்ட பின்பு, 'இவள் இவ்வாறு பட்ட வருத்தம் எல்லாம் நின்னின் தீர்ந்தது' என்பது குறிப்பின் தோன்ற அவட்குச் சொல்லியது. 8
 

 
210
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைப்
புலவுச் சேர் துறுகல் ஏறி, அவர் நாட்டுப்
பூக் கெழு குன்றம் நோக்கி நின்று,
மணி புரை வயங்கு இழை நிலைபெறத்
5
தணிதற்கும் உரித்து, அவள் உற்ற நோயே.
காப்பு மிகுதிக்கண் தலைமகள் மெலிவுகண்டு, 'தெய்வத்தினான் ஆயிற்று' என்று வெறியெடுப்புழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10
 

 
212
சாத்த மரத்த பூழில் எழு புகை
கூட்டு விரை கமழும் நாடன்
அறவற்கு எவனோ, நாம் அகல்வு? அன்னாய்!
வரைவு எதிர்கொள்ளார் தமர் அவண் மறுத்தவழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 2
 

 
214
சாரல் பலவின் கொழுந் துணர் நறும் பழம்
இருங் கல் விடர் அளை வீழ்ந்தென, வெற்பில்
பெருந்தேன் இறாஅல் சிதறும் நாடன்,
பேர் அமர் மழைக் கண் கலிழ, தன்
5
சீருடை நல் நாட்டுச் செல்லும் அன்னாய்!
தலைமகன், 'ஒருவழித் தணப்பல்' என்று கூறியவதனை அவன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. 4
 

 
216
குறுங் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை,
நெடும் புதல் கானத்து மடப் பிடி ஈன்ற
நடுங்கு நடைக் குழவி கொளீஇய, பலவின்
பழம் தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்கு,
5
கொய்தரு தளிரின் வாடி, நின்
மெய் பிறிதாதல் எவன்கொல்? அன்னாய்!
வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி கூறியது. 6
 

 
218
நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும்;
மயிர் வார் முன்கை வளையும் செறூஉம்;
களிறு கோள் பிழைத்த கதம் சிறந்து எழு புலி
எழுதரு மழையின் குழுமும்
5
பெருங் கல் நாடன் வரும்கொல்? அன்னாய்!
தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அது கேட்டு, 'இஃது என் ஆம் கொல்?' என்று ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி தனக்கு நற்குறி செய்யக்கண்டு, 'கடிதின் வந்து வரைவான்' எனச் சொல்லியது. 8
 

 
220
அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி
ஆடுகழை அடுக்கத்து இழிதரு நாடன்
பெரு வரை அன்ன திரு விறல் வியல் மார்பு
முயங்காது கழிந்த நாள், இவள்
5
மயங்கு இதழ் மழைக்கண் கலிழும் அன்னாய்!
நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10
 

 
222
அம்ம வாழி, தோழி! நம் ஊர்
நளிந்து வந்து உறையும் நறுந் தண் மார்பன்
இன்னினி வாராமாறுகொல்
சில் நிரை ஓதி! என் நுதல் பசப்பதுவே?
குறி இரண்டன்கண்ணும் வந்தொழுகும் தலைமகன் இடையிட்டு வந்து, சிறைப்புறத்து நின்றுழி, 'நின் நுதல் பசத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 2
 

 
224
அம்ம வாழி, தோழி! நம் மலை
மணி நிறம் கொண்ட மா மலை வெற்பில்
துணி நீர் அருவி நம்மோடு ஆடல்
எளிய மன்னால், அவர்க்கு; இனி,
5
அரிய ஆகுதல் மருண்டனென், யானே,
இற்செறிப்பு உணர்ந்த தலைமகள் ஆற்றாளாய், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது. 4
 

 
226
அம்ம வாழி,தோழி!நம் மலை
நறுந்தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள்
கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி, நின்
வன்புடை விறல் கவின் கொண்ட
5
அன்பிலாளன் வந்தனன், இனியே.
வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் நீட்டித்து வந்துழித் தோழி தலைமகட்குச் சொல்லியது. 6

 
228
அம்ம வாழி, தோழி! நம் ஊர்
நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன்
இரந்து குறையுறாஅன் பெயரின்,
என் ஆவதுகொல் நம் இன் உயிர் நிலையே?
தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி அறத்தொடு நின்றது. 8

 
230
அம்ம வாழி, தோழி! நம்மொடு
சிறு தினைக் காவலன் ஆகி, பெரிதும் நின்
மென் தோள் ஞெகிழவும், திரு நுதல் பசப்பவும்,
பொன் போல் விறல் கவின் தொலைத்த
5
குன்ற நாடற்கு அயர்வர் நன் மணனே.
தலைமகன் வரைவு வேண்டித் தமரை விடுத்துழி, மறுப்பர்கொல்லோ? என்று அச்சம் உறுகின்ற தலைவிக்குத் தோழி சொல்லியது. 10
 

 
232
போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க
ஏதிலாட்டியை நீ பிரிந்ததற்கே,
அழல் அவிர் மணிப்பூண் நனையப்
பெயல்ஆனா, என் கண்ணே தெய்யோ!
ஒருவழித் தணந்து வந்த தலைமகன் 'நான் பிரிந்த நாட்கண் நீர் என் செய்தீர்?' எனக் கேட்க, தோழி அவற்குச் சொல்லியது. 2
 

 
234
'மின் அவிர் வயங்குஇழை ஞெகிழச் சாஅய்,
நன்னுதல் பசத்தல் யாவது?' துன்னிக்
கனவில் காணும் இவளே
நனவில் காணாள், நின் மார்பே தெய்யோ!'
இடைவிடாது வந்தொழுகாநின்றே களவு நீடாமல் வரைதற்கு முயல்கின்ற தலைமகன் தலைமகள் வேறுபாடு கண்டு, 'இதற்குக் காரணம் என்?' என்று வினாவியவழி, 'நின்னைக் கனவில் கண்டு, விழித்துக் காணாளாய் வந்தது' எனத் தோழி சொல்லி வரைவு முடுக்
 

 
235
கையற வீழ்ந்த மை இல் வானமொடு
அரிது காதலர்ப் பொழுதே; அதனால்,
தெரிஇழை தெளிர்ப்ப முயங்கி,
பிரியலம் என்கமோ? எழுகமோ? தெய்யோ!
உடன்போக்கு நேர்வித்த பின்பு தலைமகன் உடன்கொண்டு போவான் இடை யாமத்து வந்துழி, தலைமகட்குத் தோழி சொல்லியது. 5
 

 
237
காமம் கடவ, உள்ளம் இனைப்ப,
யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின்,
ஓங்கித் தோன்றும் உயர் வரைக்கு
யாங்கு எனப்படுவது, நும் ஊர்? தெய்யோ!
அல்லகுறிப்பட்டு நீங்கிய தலைமகனை வந்திலனாகக் கொண்டு, அவன் பின்பு வந்துழி, அவற்குத் தோழி சொல்லியது. 7
 

 
239
சுரும்பு உணக் களித்த புகர் முக வேழம்
இரு பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம் நின்
குன்று கெழு நல் நாட்டுச் சென்ற பின்றை,
நேர் இறைப் பணைத் தோள் ஞெகிழ,
5
வாராய்ஆயின், வாழேம் தெய்யோ!
'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி கூறியது. 9
 

 
241
நம் உறு துயரம் நோக்கி, அன்னை
வேலன் தந்தனள் ஆயின், அவ் வேலன்
வெறி கமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல? செறி எயிற்றோயே!
இற்செறித்தவழித் தலைமகட்கு எய்திய மெலிவு கண்டு, 'இஃது எற்றினான் ஆயிற்று?' என்று வேலனைக் கேட்பத் துணிந்துழி, அறத்தொடுநிலை துணிந்த தோழி செவிலி கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது. 1
 

 
243
கறி வளர் சிலம்பிற் கடவுள் பேணி,
அறியா வேலன், 'வெறி' எனக் கூறும்;
அது மனம் கொள்குவை, அனை! இவள்
புது மலர் மழைக் கண் புலம்பிய நோய்க்கே.
தாயுழை அறியாமை கூறித் தோழி வெறி விலக்கியது. 3
 

 
245
பொய்யா மரபின் ஊர் முது வேலன்
கழங்கு மெய்ப்படுத்து, கன்னம் தூக்கி,
'முருகு' என மொழியும்ஆயின்,
கெழுதகைகொல் இவள் அணங்கியோற்கே?
தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. 5
 

 
247
அன்னை தந்தது ஆகுவது அறிவென்:
பொன் நகர் வரைப்பில் கன்னம் தூக்கி,
'முருகு' என மொழியும் ஆயின்,
அரு வரை நாடன் பெயர்கொலோ, அதுவே?
வெறி விலக்கலுறும் தோழி தமர் கேட்பத் தலைமகளை வினவுவாளாய்ச் சொல்லியது. 7
 

 
249
பெய்ம்மணல் வரைப்பில் கழங்கு படுத்து, அன்னைக்கு,
'முருகு' என மொழியும் வேலன்; மற்று அவன்
வாழிய இலங்கும் அருவிச்
சூர் மலை நாடனை அறியாதோனே!
வேலன் கூறிய மாற்றத்தை மெய்யெனக் கொண்ட தாய் கேட்பத் தலைமகட்குத் தோழி கூறியது. 9
 

 
251
குன்றக் குறவன் ஆர்ப்பின், எழிலி
நுண் பல் அழி துளி பொழியும் நாட!
நெடு வரைப் படப்பை நும் ஊர்க்
கடு வரல் அருவி காணினும் அழுமே.
வரையாது வந்தொழுகும் தலைமகற்கு வரைவு வேட்ட தோழி கூறியது. 1
 

 
254
குன்றக் குறவன் ஆரம் அறுத்தென,
நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும்
வண்டு இமிர் சுடர் நுதல் குறுமகள்!
கொண்டனர், செல்வர் தம் குன்று கெழு நாட்டே.
உடன்போக்கு உடன்பட வேண்டிய தோழி தலைமகட்குச் சொல்லியது. 4
 

 
256
குன்றக் குறவன் காதல் மட மகள்
வண்டு படு கூந்தல் தண் தழைக் கொடிச்சி;
வளையள்; முளை வாள் எயிற்றள்;
இளையள் ஆயினும், ஆர் அணங்கினளே.
'நீ கூறுகின்றவள் நின்னை வருத்தும் பருவத்தாள் அல்லள்' என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது. 6
 

 
257
குன்றக் குறவன் கடவுள் பேணி,
இரந்தனன் பெற்ற எல் வளைக் குறுமகள்
ஆய் அரி நெடுங் கண் கலிழ,
சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே.
'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி உடன்படாது கூறியது. 7
 

 
259
குன்ற குறவன் காதல் மட மகள்
மன்ற வேங்கை மலர் சில கொண்டு,
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி,
தேம் பலிச் செய்த ஈர் நறுங் கையள்;
5
மலர்ந்த காந்தள் நாறிக்
கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே.
வரையத் துணிந்த தலைமகன் வரைவு முடித்தற்குத் தலைமகள் வருந்துகின்ற வருத்தம் தோழி காட்டக் கண்டு, 'இனி அது கடுக முடியும்' என உவந்த உள்ளத்தனாய், தன்னுள்ளே சொல்லியது. 9
 

 
260
குன்றக் குறவன் காதல் மட மகள்,
மென் தோள் கொடிச்சியைப் பெறற்கு அரிது தில்ல
பைம் புறப் படு கிளி ஓப்பலர்;
புன்புல மயக்கத்து விளைந்தன தினையே!
பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி, 'இனிப் புனங்காவற்கு வாரோம்' எனக்கூறி வரைவு கடாயது. 10
 

 
262
சிறு தினை மேய்ந்த தறுகண் பன்றி
துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும்
இலங்குமலை நாடன் வரூஉம்;
மருந்தும் அறியும்கொல் தோழி! அவன் விருப்பே?
'வரைந்து கொள்ள நினைக்கிலன்' என்று வேறுபட்ட தலைமகள், 'அவன் நின்மேல் விருப்பமுடையன்; நீ நோகின்றது என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. 2
 

 
264
இளம் பிறை அன்ன கோட்ட கேழல்
களங்கனி அன்ன பெண்பாற் புணரும்
அயம் திகழ் சிலம்ப! கண்டிகும்
பயந்தன மாதோ, நீ நயந்தோள் கண்ணே!
வரையாது வந்து ஒழுகும் தலைமகனைப் பகற்குறிக்கண்ணே எதிர்ப்பட்டுத் தோழி வரைவு கடாயது. 4
 

 
266
சிறு கண் பன்றிப் பெருஞ் சின ஒருத்தலொடு
குறுக் கை இரும் புலி பொரூஉம் நாட!
நனி நாண் உடையை மன்ற
பனிப் பயந்தன, நீ நயந்தோள் கண்ணே!
நொதுமலர் வரைவு பிறந்துழி, தலைமகட்கு உளதாகிய வேறுபாடு தோழி கூறி, தலைமகனை வரைவு கடாயது. 6
 

 
268
தாஅய் இழந்த தழு வரிக் குருளையொடு
வள மலைச் சிறு தினை உணீஇ, கானவர்
வரை ஓங்கு உயர் சிமைக் கேழல் உறங்கும்
நல் மலை நாடன் பிரிதல்
5
என் பயக்குமோ நம் விட்டுத் துறந்தே?
'அவன் குறிப்பு இருந்தவாற்றால் நம்மைப் பிரிந்து வந்தல்லது வரைய மாட்டான் போன்று இருந்தது' எனத் தலைமகள் கூறக்கேட்ட தோழி, அவட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. 8
 

 
270
கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில்
தலை விளை கானவர் கொய்தனர் பெயரும்
புல்லென் குன்றத்துப் புலம்பு கொள் நெடு வரை
காணினும் கலிழும் நோய் செத்து,
5
தாம் வந்தனர், நம் காதலோரே.
வரைவு காரணமாக நெட்டிடை கழிந்து, பொருள்வயிற் போகிய தலைமகன் வந்தமை அறிந்த தோழி, உவந்த உள்ளத்தளாய், தலைமகட்குச் சொல்லியது. 10
 

 
272
கரு விரல் மந்திக் கல்லா வன் பறழ்
அரு வரைத் தீம் தேன் எடுப்பி, அயலது
உரு கெழு நெடுஞ் சினைப் பாயும் நாடன்
இரவின் வருதல் அறியான்;
5
'வரும் வரும்' என்ப தோழி! யாயே.
அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் சிறைப்புறத்தானாக, முன்னை நாள் நிகழ்ந்ததனைத் தோழிக்குச் சொல்லுவாள் போன்று, தலைமகள் சொல்லியது. 2
 

 
274
மந்திக் கணவன் கல்லாக் கடுவன்,
ஒண் கேழ் வயப்புலி குழுமலின், விரைந்து, உடன்
குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன்
சென்றனன் வாழி, தோழி! என்
5
மென் தோள் கவினும், பாயலும், கொண்டே.
வரைவிடை வைத்துப் பிரிந்துழி, ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 4
 

 
276
மந்திக் காதலன் முறி மேய் கடுவன்
தண் கமழ் நறைக் கொடி கொண்டு, வியல் அறைப்
பொங்கல் இள மழை புடைக்கும் நாட!
நயவாய்ஆயினும் வரைந்தனை சென்மோ
5
கல் முகை வேங்கை மலரும்
நல் மலை நாடன் பெண்டு எனப் படுத்தே!
வரையாது வந்தொழுகும் தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது. 6
 

 
278
சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்
குரங்கின் வன் பறழ் பாய்ந்தென, இலஞ்சி
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன்
உற்றோர் மறவா நோய் தந்து,
5
கண்டோர் தண்டா நலம் கொண்டனனே!
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 8
 

 
280
கரு விரல் மந்திக் கல்லா வன் பார்ப்பு
இரு வெதிர் ஈர்ங் கழை ஏறி, சிறு கோல்
மதி புடைப்பது போல் தோன்றும் நாட!
வரைந்தனை நீ எனக் கேட்டு யான்
5
 த்தனென்அல்லெனோ அஃது என் யாய்க்கே?
புணர்ந்து உடன்போகிய தலைமகன் தலைமகளைக் கரண வகையான் வரைந்தானாக, எதிர் சென்ற தோழிக்கு, 'இனி யான் இவளை வரைந்தமை நுமர்க்கு உணர்த்த வேண்டும்' என்றானாக, அவள் சொல்லியது. 10
 

 
282
சாரல் புறத்த பெருங் குரல் சிறு தினைப்
பேர் அமர் மழைக்கண் கொடிச்சி கடியவும்
சோலைச் சிறு கிளி உன்னும் நாட!
ஆர் இருள் பெருகின; வாரல்
5
கோட்டு மா வழங்கும் காட்டக நெறியே.
இரவுக்குறி நேர்ந்த தோழி தலைமகன் வந்து புணர்ந்து நீங்குழி, அவனை எதிர்ப்பட்டுச் சொல்லியது. 2
 

 
284
அளியதாமே, செவ் வாய்ப் பைங் கிளி
குன்றக் குறவர் கொய் தினைப் பைங் கால்
இருவி நீள்புனம் கண்டும்.
பிரிதல் தேற்றாப் பேர் அன்பினவே.
தினை அரிந்துழி, கிளியை நோக்கிக் கூறுவாள் போல், சிறைப்புறமாக ஒம்படுத்தது. 4
 

 
286
சிறு தினை கொய்த இருவி வெண் கால்
காய்த்த அவரைப் படு கிளி கடியும்
யாணர் ஆகிய நல் மலை நாடன்
புகர் இன்று நயந்தனன் போலும்;
5
கவரும் தோழி! என் மாமைக் கவினே.
உடன்போக்குத் துணிந்த தலைமகன் அஃது ஒழிந்து, தானே வரைவிடை வைத்துப் பிரிய நினைந்ததனைக் குறிப்பினான் உணர்ந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகன், 'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்றவழித் தலைமகள் தோழிக்குச் சொல்ல
 

 
288
நன்றே செய்த உதவி நன்று தெரிந்து
யாம் எவன் செய்குவம்? நெஞ்சே! காமர்
மெல் இயல் கொடிச்சி காப்பப்
பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே.
'கிளிகள் புனத்தின்கண் படியாநின்றன' என்று, தலைவியைக் காக்க ஏவியவழி, அதனை அறிந்த தலைமகன் உவந்து, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 8
 

 
290
அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி
சிறந்தன போலும், கிள்ளை பிறங்கிய
பூக் கமழ் கூந்தல் கொடிச்சி
நோக்கவும் படும்; அவள் ஓப்பவும் படுமே.
காவல் மிகுதியான் இரவுக்குறி மறுக்கப்பட்டு நீங்கிய தலைமகன் வந்துழி, அவன் கேட்டு வெறுப்புத் தீர்த்தற் பொருட்டால், தினைப்புனம் காவல் தொடங்காநின்றாள் என்பது தோன்ற, தோழி கூறியது. 10
 

 
293
சிலம்பு கமழ் காந்தள் நறுங் குலை அன்ன
நலம் பெறு கையின் என் கண் புதைத்தோயே!
பாயல் இன் துணை ஆகிய பணைத் தோள்
தோகை மாட்சிய மடந்தை!
5
நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே?
பகற்குறியிடம் புக்க தலைமகன், தலைவி பின்னாக மறைய வந்து கண் புதைத்துழி, சொல்லியது. 3
 

 
295
வருவதுகொல்லோ தானே வாராது
அவண் உறை மேவலின், அமைவது கொல்லோ
புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை,
இருவி இருந்த குருவி வருந்துற,
5
பந்து ஆடு மகளிரின் படர்தரும்
குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே?
தலைமகன் வரைவிடை வைத்துப் பிரிந்து நீட்டித்துழி, உடன்சென்ற நெஞ்சினைத் தலைமகள் நினைந்து கூறியது. 5
 

 
297
விரிந்த வேங்கைப் பெருஞ் சினைத் தோகை
பூக் கொய் மகளிரின் தோன்றும் நாட!
பிரியினும், பிரிவது அன்றே
நின்னொடு மேய மடந்தை நட்பே.
ஒருவழித் தணந்து வரைய வேண்டும் என்ற தலைமகற்குத் தோழி கூறியது. 7
 

 
299
குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன்,
பைஞ் சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்
அம் சில் ஓதி அசைநடைக் கொடிச்சி
கண்போல் மலர்தலும் அரிது; இவள்
5
தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய நிலைமைக்கண், தலைமகள் ஆய வெள்ளத்தோடு கூடி நிற்கக் கண்ட தலைமகன் மகிழ்ந்த உள்ளத்தானாய்த் தன்னுள்ளே சொல்லியது. 9
 

 
300
கொடிச்சி கூந்தல் போலத் தோகை
அம் சிறை விரிக்கும் பெருங் கல் வெற்பன்
வந்தனன்; எதிர்ந்தனர் கொடையே;
அம் தீம் கிளவி! பொலிக, நின் சிறப்பே!
தலைமகன் தானே வரைவு வேண்டிவிட, சுற்றத்தார் கொடை நேர்ந்தமை தலைமகட்குத் தோழி சொல்லியது.
 

 
மேல்