முகப்பு    

 ஒன்பதாம் பத்து 

பாடினோர் : பெருங்குன்றூர் கிழார்
பாடப்பட்டோர் : குடக்கோ இளஞ்சேரல்பொறை

81.காம வேட்கையில் செல்லாத மன்னவன் வென்றி
   வேட்கைச் சிறப்புக் கூறுதல்

உலகம் புரக்கும் உரு கெழு சிறப்பின்,
வண்ணக் கருவிய, வளம் கெழு, கமஞ் சூல்
அகல் இரு விசும்பின் அதிர் சினம் சிறந்து,
கடுஞ் சிலை கழறி, விசும்பு அடையூ நிவந்து,
காலை இசைக்கும் பொழுதொடு புலம்பு கொள,
5
களிறு பாய்ந்து இயல, கடு மா தாங்க,
ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப,
அரசு புறத்து இறுப்பினும் அதிர்விலர் திரிந்து,
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்,
மா இருங் கங்குலும், விழுத் தொடி சுடர் வரத்
10
தோள் பிணி மீகையர், புகல் சிறந்து, நாளும்
முடிதல் வேட்கையர், நெடிய மொழியூஉ,
கெடாஅ நல் இசைத் தம் குடி நிறுமார்,
இடாஅ ஏணி வியல் அறைக் கொட்ப,
நாடு அடிப்படுத்தலின், கொள்ளை மாற்றி;
15
அழல் வினை அமைந்த நிழல் விடு கட்டி,
கட்டளை வலிப்ப, நின் தானை உதவி,
வேறு புலத்து இறுத்த வெல்போர் அண்ணல்!
முழவின் அமைந்த பெரும் பழம் மிசைந்து,
சாறு அயர்ந்தன்ன, கார் அணி யாணர்த்
20
தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி,
காந்தள்அம் கண்ணிச் செழுங் குடிச் செல்வர்,
கலி மகிழ் மேவலர், இரவலர்க்கு ஈயும்,
சுரும்பு ஆர் சோலைப் பெரும் பெயல் கொல்லிப்
பெரு வாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து,
25
மின் உமிழ்ந்தன்ன சுடர்இழை ஆயத்து,
தன் நிறம் கரந்த வண்டு படு கதுப்பின்
ஒடுங்கு ஈர் ஓதி ஒண்ணுதல் அணி கொள,
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கின், நயவரப்
பெருந் தகைக்கு அமர்ந்த மென் சொல் திருமுகத்து
30
மாண் இழை அரிவை காணிய, ஒரு நாள்,
பூண்க மாள, நின் புரவி நெடுந் தேர்!
முனை கைவிட்டு முன்னிலைச் செல்லாது,
தூ எதிர்ந்து பெறாஅத் தா இல் மள்ளரொடு
தொல் மருங்கு அறுத்தல் அஞ்சி, அரண் கொண்டு,
35
துஞ்சா வேந்தரும் துஞ்சுக!
விருந்தும் ஆக, நின் பெருந் தோட்கே!

துறை:முல்லை
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:நிழல் விடு கட்டி

82.வென்றிச் சிறப்பு

பகை பெருமையின், தெய்வம் செப்ப,
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர்,
பல் கொடி நுடங்கும் முன்பின் செறுநர்
செல் சமம் தொலைத்த வினை நவில் யானை
கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி,
5
வண்டு படு சென்னிய பிடி புணர்ந்து இயல;
மறவர் மறல; மாப் படை உறுப்ப;
தேர் கொடி நுடங்க; தோல் புடை ஆர்ப்ப;
காடுகை காய்த்திய நீடு நாள் இருக்கை
இன்ன வைகல் பல் நாள் ஆக  
10
பாடிக் காண்கு வந்திசின், பெரும!
பாடுநர், கொளக் கொளக் குறையாச் செல்வத்து, செற்றோர்
கொலக் கொலக் குறையாத் தானை, சான்றோர்
வண்மையும், செம்மையும், சால்பும், மறனும்,
புகன்று புகழ்ந்து, அசையா நல் இசை,
15
நிலம் தரு திருவின், நெடியோய்! நின்னே.

துறை:
காட்சி வாழ்த்து
வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:வினை நவில் யானை

83.படைச் சிறப்பு

கார் மழை முன்பின் கை பரிந்து எழுதரும்
வான் பறைக் குருகின் நெடு வரி பொற்ப,
கொல் களிறு மிடைந்த பல் தோல் தொழுதியொடு
நெடுந் தேர் நுடங்கு கொடி அவிர்வரப் பொலிந்து,
செலவு பெரிது இனிது, நிற் காணுமோர்க்கே:
5
இன்னாது அம்ம அது தானே பல் மா
நாடு கெட எருக்கி, நன் கலம் தரூஉம் நின்
போர் அருங் கடுஞ் சினம் எதிர்ந்து,
மாறு கொள் வேந்தர் பாசறையோர்க்கே.

துறை:தும்பை அரவம்
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:பல் தோல் தொழுதி

84.வென்றிச் சிறப்பு

எடுத்தேறு ஏய கடிப்புடை அதிரும்
போர்ப்பு உறு முரசம் கண் அதிர்ந்தாங்கு,
கார் மழை முழக்கினும், வெளில் பிணி நீவி,
நுதல் அணந்து எழுதரூஉம் தொழில் நவில் யானை,
பார்வல் பாசறைத் தரூஉம் பல் வேல்,
5
பூழியர் கோவே! பொலந் தேர்ப் பொறைய,
மன்பதை சவட்டும் கூற்ற முன்ப!
கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா;
பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாது,
வலியை ஆதல் நற்கு அறிந்தனர்ஆயினும்,  
10
வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ, தன்
கால் முளை மூங்கில் கவர் கிளை போல,
உய்தல் யாவது நின் உடற்றியோரே,
வணங்கல் அறியார், உடன்று எழுந்து உரைஇ?
போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல,
15
நோய்த் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து,
முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு,
காஞ்சி சான்ற செருப் பல செய்து, நின்
குவவுக் குரை இருக்கை இனிது கண்டிகுமே
20
காலை, மாரி பெய்து, தொழில் ஆற்றி,
விண்டு முன்னிய புயல் நெடுங் காலை,
கல் சேர்பு மா மழை தலைஇ,
பல் குரல் புள்ளின் ஒலி எழுந்தாங்கே!

துறை:வாகை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:தொழில் நவில் யானை

85.முன்னோருடைய கொடைச் சிறப்பொடு படுத்து,
   வென்றிச் சிறப்புக் கூறுதல்

நல் மரம் துவன்றிய நாடு பல தரீஇ,
'பொன் அவிர் புனைசெயல் இலங்கும் பெரும் பூண்,
ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்'
இட்ட வெள் வேல்'முத்தைத் தம்' என,
முன் திணை முதல்வர் போல நின்று,   
5
தீம் சுனை நிலைஇய திரு மா மருங்கின்
கோடு பல விரிந்த நாடு காண் நெடு வரை,
சூடா நறவின் நாள் மகிழ் இருக்கை,
அரசவை பணிய, அறம் புரிந்து வயங்கிய
மறம் புரி கொள்கை, வயங்கு செந் நாவின்,   
10
உவலை கூராக் கவலை இல் நெஞ்சின்,
நனவில் பாடிய நல் இசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே.

துறை:
செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:நாடு காண் நெடு வரை   

86.மன்னவனது வன்மை மென்மைச் சிறப்புக் கூறுதல்

'உறல் உறு குருதிச் செருக்களம் புலவக்
கொன்று, அமர்க் கடந்த வெந் திறல் தடக் கை
வென் வேல் பொறையன்' என்றலின், வெருவர,
வெப்புடை ஆடூஉச் செத்தனென், மன் யான்:
நல் இசை நிலைஇய, நனந் தலை உலகத்து,
5
இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்,
பாடுநர் புரவலன், ஆடு நடை அண்ணல்,
கழை நிலை பெறாஅக் குட்டத்துஆயினும்,
புனல் பாய் மகளிர் ஆட, ஒழிந்த
10
பொன் செய் பூங் குழை மீமிசைத் தோன்றும்
சாந்து வரு வானி நீரினும்,
தீம் தண் சாயலன் மன்ற, தானே.

துறை:
செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:வெந் திறல் தடக்கை

87.மன்னவன் அருட் சிறப்பு

சென்மோ, பாடினி! நன் கலம் பெறுகுவை
சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து,
தெண் கடல் முன்னிய வெண் தலைச் செம் புனல்
ஒய்யும் நீர் வழிக் கரும்பினும்
பல் வேல் பொறையன் வல்லனால், அளியே.
5

துறை:விறலி ஆற்றுப்படை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:வெண் தலைச் செம் புனல்

88.கொடைச் சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன்
   கூறி, வாழ்த்துதல்

வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது,
கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து,
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து,
தம் பெயர் போகிய ஒன்னார் தேய,
துளங்கு இருங் குட்டம் தொலைய, வேல் இட்டு;
            5

அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து;
பொரு முரண் எய்திய கழுவுள் புறம் பெற்று;
நாம மன்னர் துணிய நூறி,
கால் வல் புரவி அண்டர் ஓட்டி,
சுடர் வீ வாகை நன்னற் தேய்த்து,
                       10

குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு
உரு கெழு மரபின் அயிரை பரைஇ,
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய,
கொற்றம் எய்திய பெரியோர் மருக!
வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில்!
              15

விரவுப் பணை முழங்கும், நிரை தோல் வரைப்பின்,
உரவுக் களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை,
ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை
நார் அரி நறவின் கொங்கர் கோவே!
உடலுநர்த் தபுத்த பொலந் தேர்க் குருசில்!
                20

வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந!
நீ நீடு வாழிய, பெரும! நின்வயின்
துவைத்த தும்பை நனவுற்று வினவும்
மாற்று அருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய
புனல் மலி பேரியாறு இழிதந்தாங்கு,
                     25

வருநர் வரையாச் செழும் பல் தாரம்
கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப,
ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர்,
பாவை அன்ன மகளிர் நாப்பண்,
புகன்ற மாண் பொறிப் பொலிந்த சாந்தமொடு
             30

தண் கமழ் கோதை சூடி, பூண் சுமந்து,
திருவில் குலைஇத் திருமணி புரையும்
உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து,
வேங்கை விரிந்து, விசும்புறு சேட்சிமை,
அருவி அரு வரை அன்ன மார்பின்
                    35

சேண் நாறு நல் இசைச் சேயிழை கணவ!
மாகம் சுடர மா விசும்பு உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி, பல் நாள்!
ஈங்குக் காண்கு வந்தனென், யானே
உறு கால் எடுத்த ஓங்கு வரல் புணரி                  
40

நுண் மணல் அடை கரை உடைதரும்
தண் கடல் படப்பை நாடு கிழவோயே!

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:கல் கால் கவணை

89.மன்னவனது நாடு காவல் சிறப்புக் கூறி, வாழ்த்துதல்

வானம் பொழுதொடு சுரப்ப, கானம்
தோடு உறு மட மான் ஏறு புணர்ந்து இயல,
புள்ளும் மிஞிறும் மாச் சினை ஆர்ப்ப,
பழனும் கிழங்கும் மிசையறவு அறியாது,
பல் ஆன் நல் நிரை புல் அருந்து உகள,
5
பயம் கடை அறியா வளம் கெழு சிறப்பின்
பெரும் பல் யாணர்க் கூலம் கெழும,
நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக
பல் வேல் இரும் பொறை! நின் கோல் செம்மையின்,
நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த,
10
உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ,
அரசியல் பிழையாது, செரு மேந்தோன்றி,
நோய் இலைஆகியர், நீயே நின்மாட்டு
அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது,
கனவினும் பிரியா உறையுளொடு, தண்ணெனத்
15
தகரம் நீவிய துவராக் கூந்தல்,
வதுவை மகளிர் நோக்கினர், பெயர்ந்து
வாழ் நாள் அறியும் வயங்கு சுடர் நோக்கத்து,
மீனொடு புரையும் கற்பின்,
வாள் நுதல் அரிவையொடு காண்வரப் பொலிந்தே!
20

துறை:காவல் முல்லை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:துவராக் கூந்தல்  

90.மன்னவனது தண்ணளியும், பெருமையும், கொடையும்,
சுற்றம் தழாலும், உடன் கூறி வாழ்த்துதல்

மீன் வயின் நிற்ப, வானம் வாய்ப்ப,
அச்சற்று, ஏமம் ஆகி, இருள் தீர்ந்து
இன்பம் பெருகத் தோன்றி, தம் துணைத்
துறையின் எஞ்சாமை நிறையக் கற்று,
கழிந்தோர் உடற்றும் கடுந் தூ அஞ்சா                    5

ஒளிறு வாள் வய வேந்தர்
களிறொடு கலம் தந்து,
தொன்று மொழிந்து தொழில் கேட்ப,
அகல் வையத்து பகல் ஆற்றி,
மாயாப் பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர,                 10

வாள் வலியுறுத்து, செம்மை பூஉண்டு,
அறன் வாழ்த்த நற்கு ஆண்ட
விறல் மாந்தரன் விறல் மருக!
ஈரம் உடைமையின், நீர் ஓரனையை;
அளப்பு அருமையின், இரு விசும்பு அனையை;             15

கொளக் குறைபடாமையின், முந்நீர் அனையை;
பல் மீன் நாப்பண் திங்கள் போல,
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை
உரு கெழு மரபின் அயிரை பரவியும்,
கடல் இகுப்ப வேல் இட்டும்,                           20

உடலுநர் மிடல் சாய்த்தும்,
மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவி,
பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய
கொற்றத் திருவின் உரவோர் உம்பல்!
கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே!                     25

மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே!
எழாஅத் துணைத் தோள் பூழியர் மெய்ம்மறை!
இரங்கு நீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந!
வெண் பூ வேளையொடு சுரை தலை மயக்கிய
விரவு மொழிக் கட்டூர் வயவர் வேந்தே!                  30

உரவுக் கடல் அன்ன தாங்கு அருந் தானையொடு,
மாண் வினை! சாபம் மார்புற வாங்கி,
ஞாண் பொர விளங்கிய வலி கெழு தடக் கை,
வார்ந்து புனைந்தன்ன ஏந்து குவவு மொய்ம்பின்,
மீன் பூத்தன்ன விளங்கு மணிப் பாண்டில்,                35

ஆய் மயிர்க் கவரிப் பாய் மா மேல்கொண்டு,
காழ் எஃகம் பிடித்து எறிந்து,
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மை,
காஞ்சி சான்ற வயவர் பெரும!
வீங்கு பெருஞ் சிறப்பின் ஓங்கு புகழோயே!               40

கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்,
பழன மஞ்ஞை மழை செத்து ஆலும்,
தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி,
வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க,
கூழுடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப,                  45

செழும் பல இருந்த கொழும் பல் தண் பணைக்,
காவிரிப் படப்பை நல் நாடு அன்ன,
வளம் கெழு குடைச்சூல், அடங்கிய கொள்கை,
ஆறிய கற்பின், தேறிய நல் இசை,
வண்டு ஆர் கூந்தல், ஒண்தொடி கணவ!                 50

'நின் நாள் திங்கள் அனைய ஆக! திங்கள்
யாண்டு ஓரனைய ஆக! யாண்டே
ஊழி அனைய ஆக! ஊழி
வெள்ள வரம்பின ஆக! என உள்ளி,
காண்கு வந்திசின், யானே செரு மிக்கு                  55

உரும் என முழங்கும் முரசின்,
பெரு நல் யானை, இறை கிழவோயே!

துறை:காட்சி வாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்:வலி கெழு தடக் கை



    மேல்