நகரிக்கு மேல் பாலாம்” என்பர் பழையவுரைகாரர். கானற்சோலை முன்னிப் புறப்பட்டவன், இடையிலே பனஞ் சோலைக்கண் தங்குகின்றானென வறிக. கூவல் எனவே, அதன்பால் மீன்கள் பெருக இல்லாமை யறியப்படும். இருந்த சிலவற்றைத் தேடித் தேடி அதனை நாரை யுழப்பிற் றென்பார், “கூவல் துழந்த தடந்தாள் நாரை” யென்றும், அதனால் அயர்வுற்ற அந் நாரை ஞாழல் மரத்தின் கிளையிடத்தே, தங்கிற் றென்பார், “நாரை குவியிணர் ஞாழல் மாச்சினைச் சேக்கும்” என்றார். மாச்சினை, கரிய கிளை யென்றுமாம். ஞாழலின் பூங்கொத்தில் வண்டினம் தங்கித் தேனுண்டு பாடுத லியல்பாதலால், வண்டிறை கொண்ட குவியிணர் ஞாழல் எனப்பட்டது; “தெரியிணர் ஞாழலுந் தேங்கமழ் புன்னையும், புரியவிழ் பூவின கைதையும், செருந்தியும், விரிஞிமி றிமிர்ந்தார்ப்ப விருந்தும்பி யியைபூத” (கலி. 127) என்று சான்றோர் கூறுதல் காண்க. சேக்கும் பொழில், ஊதை யுஞற்றும் பொழில் என இயையும் ‘வண்டிறை கொண்ட என்பதையும் பொழிலொடு இயைப்பர் பழையவுரைகாரர். அடும்பு அமன்ற இடம் அடைகரையே யாயினும், அது கடற்பரப்பினை அடுத்த கரையாதலின், அடும்பமல் தண்கடற் பரப்பின் அடைகரை யென இயைத்துரைக்கப்பட்டது. அடுத்துள்ள கரை அடைகரையாயிற்று. நண்டு நுண் மணல் மேற் செல்லுமிடத் துண்டாகிய சுவட்டினைக் காற்றாலும் அலையாலும் எறியப்படும் நுண் மணல் பரந்து மறைத்தலின் “அலவ னாடிய வடுவடு நுண்ணயிர்” என்றார் இனிப் பழையவுரைகாரர், “வடுவை யடுதல் வடுவை மாய்த்த” லென்றும், “ஊதை யுஞற்றுதல், அவ் வடு மாயும்படி நுண்ணிய அயிரை முகந்து தூவுதலிலே முயல்கை” யென்றும், “அயிர் நுண் மணல்” என்றும் கூறி, “வடுவை மாய்க்கும் நுண்ணயிர் எனற் பாலதனை வடுவடு நுண்ணயி ரென்ற சிறப்பானே இதற்கு வடுவடு நுண்ணயிர் என்று பெயராயிற் றென்றும் கூறுவர். வடுவாவது ஒருகாலும் மாறாதது. “மாறாதே நாவினாற் சுட்ட வடு” (குறள். 129) என்று சான்றோர் கூறுதல் காண்க. எளிதில் மறையக்கூடிய சுவட்டினை மாறாத இயல்பிற்றாகிய வடு வென்றும், மறைத்தற் பொருட்டாகிய மாய்க்கும் தொழிலை யடுத லென்றும் கூறிய சிறப்பால், “வடுவடு நுண்ணயிர்” என்று பெயர் கூறப்பட்டதெனக் கோடல் சீரிதாம். ஊதைக் காற்று நுண்மணலைச் சிறிது சிறிதாக எறிதல் பற்றி. “உஞற்றும்” என்றார். அரசர் தங்குவதாயின் அதற்கேற்ப அச்சோலை பலவகையாலும் அணிசெய்யப்படுவதுபற்றி “அணி” என்றும், அதன்கண் அரசன் எழுந் தருளுதலால் விளக்கம் மிகுதலின் “பொலி தந்து” என்றும் கூறினார். “எம் மனையகம் பொலிய வந்தோய்”, என்று பிறரும் கூறுதல் காண்க. “பொழிற் கண் ஒப்பனையாற் பொலிவு பெற்றென்றவா” றென்று பழையவுரை கூறும். 10 - 24. இயலினள்..........................உணராதோரே. உரை : இயலினள் ஒல்கினள் ஆடும் மடமகள் - நடந்தும் அசைந்தும் ஆடலியற்றும் சாலினியொருத்தி; தோன்றிவெறியுறு நுடக்கம் போல - வெறியயர் களத்தே தோன்றி மருளுற்று அசைந்தாடுவது போல ; வயின்வயின் விலங்கும் - இடங்கள் தோறும் கிடந்து குறுக்கிட்டு விளங்கும்; |