“நின்னுணரா தோரே” என்றும் கூறினார். “ஆடலும் பாடலும் அழகு மென்றிக் கூறிய மூன்று” (சிலப். 3. 8-9) என்பதனால் அழகும் இன்றியமையாமை யறியப்படும். மேலும் , “காவல் வேந்தன் இலைப்பூங் கோதை யியல்பின் வழாமை” (சிலப். 3 159-60) என்பதன் உரையில் “என் சொல்லியவாறாமோ வெனின், நாடக மகள் அரங்கேறக் கண்ட அரசன் அவள்மேற் காமக் குறிப்புடையனாதல் இயல்பு” என்று அடியார்க்கு நல்லார் கூறுதலால், அரசன் இன்பக் களியாட்டில் நெடிதிருத்தல் குற்றமாதலை யறிக. நெடி திருந்தவழி அரசனது மென்மை பகைவர்க்குத் தம் பகைமைக்குரிய சூழ்ச்சி செய்து வேறற்கு வாயிலா மென்பதற்காகவே, திருவள்ளுவனார், இன்னோரன்ன வின்பங்களைப் பிறர் அறியாமைத் துய்ப்பதே வேண்டுவதென்பார், “காதல காத லறியாமைத் 1துய்க்கிற்பின், ஏதில ஏதிலார் நூல்” (குறள். 440) என்றார். இனிப் பழையவுரைகாரர், “பாடல் சான் றென்பதனைச் சால வெனத் திரிக்க” வென்றும், “மெல்லிய னென்றது ஐம்புலன்களிடத்தும் மனநெகி்ழ்ச்சியுடைய னென்றவா” றென்றும் கூறுவர். 25 - 28. மழைதவழும்....................ஏறனையை. உரை : மழை தவழும் பெருங் குன்றத்து - மேகங்கள் தவழும் பெரிய குன்றுகளில் வாழும் ; செயிர் உடைய - நஞ்சினையுடைய ; அரவு எறிந்து - பாம்புகளை யுட்குவித்து ; கடும் சினத்த மிடல் தபுக்கும் - மிக்க சினத்தையுடைய அவற்றின் வலியை யழிக்கும் ; பெருஞ் சினப் புய லேறு அனையை - பெரிய முழக்கத்தினையுடைய வானிடியேற்றினை யொப்பாய் எ - று. மழை தவழும் குன்றென்றது, குன்றத்தின் உயர்ச்சி தோன்ற நின்றது. மிகு நஞ்சும் பெருவன்மையும் படைத்த நாகங்கள் வாழும் மழை யென்றற்குப் “பெருங் குன்றத்து” என்று சிறப்பித்தார். நஞ்சுடைமை நாகத்திற்குக் குற்றமாதலின், “செயிருடைய அரவு” என்றும், தன் முழக்கத்தாலே அத்தகைய நாகமும் நடு்ங்கி யொடுங்குமாறு செய்தல்பற்றி, “அர வெறிந்து” என்றும் கூறினார். “விரிநிற நாகம் விடருள தேனும், உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்” (நாலடி. 164) என்று பின்வந்த சான்றோரும் கூறுதல் காண்க. சீறி வரும் பாம்பின் தோற்றம் பெரும் படை வீரர் கூட்டத்தின் வலியையும் சிதைத் தொழிக்கும் ஆற்றல் படைத்திருத்தல்பற்றி, “கடுஞ் சினத்தமிடல்” என்றும், இடியேற்றின் முழக்கமும் ஒளியும் அந் நாகத்தினைக் கொன்று விடுதலால், “தபுக்கும் பெருஞ்சினப் புயலேறு” என்றும் கூறினார். பாம்பென்றாற் படையும் நடுங்கும் என்னும் பழமொழி, பாம்பின் கடுஞ்சினத்த மிடலை யுணர்த்தி நிற்பது காண்க. பெருஞ் சினம் என்புழிச் சினம் இலக்கணை. மேகத்திடத்தே பிறத்தல்பற்றி, இடியேற்றினைப் “புயலேறு” என்றார் பழைய வுரைகாரர், “கடுஞ் சினத்த அரவு என மாறிக் கூட்டுக” என்பர் . எனவே, செயிருடைய கடுஞ் சினத்த அரவெறிந்து மிடல் தபுக்கும் ஏறனையை என்றியையும்.
1. பாடம் - உய்க்கிற்பின் |