முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
53. வென்றுகலந் தரீஇயர் வேண்டுபுலத் திறுத்தவர்
வாடா யாணர் நாடுதிறை கொடுப்ப
நல்கினை யாகுமதி யெம்மென் றருளிக்
கல்பிறங்கு வைப்பிற் கடறரை யாத்தநின்
  5 தொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயிற்
செம்பொறிச் சிலம்பொ டணித்தழை தூங்கும்
எந்திரத் தகைப்பி னம்புடை வாயிற்
கோள்வன் முதலைய குண்டுகண் ணகழி
வானுற வோங்கிய வளைந்துசெய் புரிசை
  10 ஒன்னாத் தெவ்வீர் முனைகெட விலங்கி
நின்னிற் றந்த மன்னெயி லல்லது
முன்னும் பின்னுநின் முன்னோ ரோம்பிய
எயின்முகப் படுத்தல் யாவது வளையினும்
பிறிதாறு சென்மதி சினங்கெழு குருசில்
  15 எழூஉப்புறந் தரீஇப் பொன்பிணிப் பலகைக்
குழூஉநிலைப் புதவிற் கதவுமெய் காணிற்
றேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி
வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல்
ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி
  20 மேம்படு வெல்கொடி நுடங்கத்
தாங்க லாகா வாங்குநின் களிறே.

          துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும்
தூக்கும் அது. பெயர் - குண்டுகண்ணகழி (8)

     (ப - ரை) 1. அவரென்றது அவ்வாறு இறுக்கும்படி நின்னொடு
எதிர்ந்த அரசரென்றவாறு. 2. நாடு திறைகொடுப்பவென்றது நாட்டைத்
திறைகொடுப்பவென்றவாறு. திறைதரவென்றதற்குத் திறை
கொடுப்பவென்றது 1இடவழுவமைதி. நல்கினையாகுமதி எம் என்று (2)
திறை கொடுப்ப (3) எனக் கூட்டுக.

     4. வைப்பு - இடம். கடற்றையென இரண்டாவது விரிக்க.

     சிலம்பும் தழையும் (6) புரிசைக்கண் தங்கின (9) என்றது
2ஈண்டும் பொருவீருளீரேல் நும் காலிற் கழலினையும் அரையிற்
போர்க்குரிய உடையினையும் ஒழித்து இச்சிலம்பினையும்
தழையினையும் அணிமினென அவரைப் பெண்பாலாக
இகழ்ந்தவாறென்க.

     இனி, அவற்றை அம்மதிலில் வாழும் 3வெற்றிமடந்தைக்கு
அணியென்பாரும் உளர்.

     8. கோள்வன் முதலையவென்று முன்வந்த அடைச்சிறப்பான்
இதற்கு,
'குண்டுகண் ணகழி' என்று பெயராயிற்று.9. வளைந்து
செய்புரிசை யென்பதனை வளையச்செய் புரிசையெனத் திரித்துக்
காலவழுவமைதியாகக் கொள்க.

     வளைந்துசெய்புரிசை (9) ஆகிய நின்னிற்றந்த மன்னெயில் 11)
என இருபெயரொட்டு.

     11. நின்னிற்றந்த மன்னெயிலென்றது நின்னாற் கொண்டு
பிறர்க்குக் கொடுக்கப்பட்ட மன்னெயிலென்றவாறு. கொடுத்த
வென்பதற்குத் தந்தவென்பது இடவழுமைதி. கொடுத்தவெனவே
கொண்டுகொடுத்தவெனக் கோடலென்பது போந்த பொருளாய்
விளங்கிற்று. தரப்பட்டவென்பதனைத் தந்தவெனச்
1செயப்படுபொருளைச் செய்ததுபோலச் சொல்லிற்றாக்குக.
மன்னெயிலல்லதென்புழி மன்னெயிற் கண்ணென ஏழாவது விரித்து
அதனைப் பின்வருகின்ற எயின்முகப் படுத்தல் (13) என்பதிடமாகப்
படுத்தலென்பதோர் சொல்வருவித்து அதனொடு முடிக்க.

     12. முன்னும் பின்னுமென்றது முன்னோர் தாங்கள்
இறப்பதற்கு முன்னும் இறந்ததற்குப் பின்னுமென்றவாறு.

     பின்னோம்புதலாவது முன்னோர் தமக்குப்பின்னும்
இவ்வரசாள்வாரும் நம்மைப்போல இவ்வாறு ஓம்புகவென
நியமித்துவைத்தல்.

     13. யாவதென்றது அஃது என்ன காரியம்? நினக்குத்
தகுவதொன்றன்றென்றவாறு.

     16. குழூஉநிலைப்புதவென்றது பல நிலமாகச் செய்த
கோபுரவாயிலென்றவாறு. 17. தேமென்றது தேனீ. கடாம் -
மதில்கண்டுழிப் போர் வேட்கையாற் பிறக்கும் மதம்.

     நீ வேண்டுபுலத்து இறுத்து அவர் (1) திறைகொடுப்ப (2)
அருளி (3) நின் (4) மூதூர்ச்செல்குவையின் (5) குருசில் (14)
வளையினும் (13) பிறிதாறு செல் (14); செல்லுதற்கு யாது
காரணமெனின் புதவிற் கதவு மெய்காணின் (16), ஆங்கு நின்களிறு
தாங்கலாகா (21); தாங்க வேண்டுவதேல், நின்னிற்றந்த எயின்
முகத்துப் படுத்துவதல்லது (11) நின் முன்னோரோம்பிய (12) எயின்
முகத்துப்படுத்தல் யாவது (13) என மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க.

     'செல்குவையாயின்' (5) என்பதன்பின் 'பிறிதாறு சென்மதி' (14)
என்பதனையும், 'தாங்க லாகா வாங்குநின் களிறு' (21) என்பதன் பின்
'எயின்முகப்படுத்தல்யாவது' (13) என்பதனையும் கூட்டவேண்டுதலின்
மாறாயிற்று.

     இதனாற் சொல்லியது, அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து
அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. பிறநாடுகளை வென்று அந்நாட்டரசர்
திறையாகக் கொடுக்கும் ஆபரணங்களைக் கொணரும்பொருட்டுத்
தான் வேண்டிய இடத்திலே படையொடு சென்று தங்கி; " நாடுகெட
வெருக்கி நன்கலந் தரூஉம்", "யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத்
திறுத்து" (பதிற.83 : 7, 15 : 1) பகைவர் கலங்களைத் திறையாகத்
தருதல்: பதிற். 90 : 6 - 8; "நன்கலங் களிற்றோடு நண்ணா ரேந்தி,
வந்துதிறை கொடுத்து" (அகநா: 124 : 1 - 2)

     1-3. அப்பகையரசர், 'எம்மைக் காப்பாயாக' என்று கூறிக்
குறையாத புதுவருவாயையுடைய தம் நாட்டைத் திறையாகக் கொடுப்ப
அவர்களுக்கு அருள்செய்து; "ஒல்குபு நிழல்சேர்ந்தார்க் குலையாது
காத்தோம்பி வெல்புக ழுலகேத்த விருந்துநாட் டுறைபவர்" (கலித்.
26 : 11 - 2). நல்கினையாகுமதி யென்று திறைகொடுப்பவெனக்
கூட்டுக.

     4-5. சேரன் தன் நகர்க்கு மீண்டு செல்லுதல். கற்கள்
விளங்கிய இடங்களையுடைய காடுகளைத்தன் அரையிலே
கட்டினாற்போன்று விளங்குகின்ற நினது பழையதாகிய புகழையுடைய
பழைய நகருக்கு மீண்டு செல்வாயானால். கடறு - காடு; காடென்றது
மதிலைச் சூழ்ந்த காவற்காட்டை. மலைநாடாதலின் கல்பிறங்குவைப்பிற்
கடறென்றார்.

     6-9. மதிலின் சிறப்பு.

     6-7. சிவந்த மூட்டுவாயையுடைய சிலம்பொடு அணியாகிய
தழை தங்குகின்ற எந்திரக்கட்டினையும், அம்பையுடைய வாயிலையும்;
பொறிமூட்டுவாய்: "பொறி, புனைவினைப் பொலங்கோதை" (பரி.
11 : 64 - 5) "எய்பெயரும் பகழி வாயிற் றூக்கி" (தொல். புறத்.
12, ந. மேற்.)

     8. நீந்திச் செல்ல முயல்வாரைக் கொள்ளுதல் வல்ல
முதலையையும் குழிந்த இடத்தையும் கொண்ட அகழியையும் உடைய;
"கராஅங் கலித்த குண்டுகண் ணகழி" (புறநா. 37 : 7)

     9. ஆகாயத்தைப் பொருந்தும்படி உயர்ந்த, அவ்வகழியை
வளையும்படி செய்த மதில், புரிசை ஆகிய மன்னெயில் (11) என
இயைக்க.

     10-11. நின்னோடு பொருந்தாத பகைவரது போர் கெடும்படி
தடுத்து, நின்னாற் கைக்கொண்டு கொடுக்கப்பட்ட நிலைபெற்ற
மதில்களிடத்துச் செலுத்துவதே அல்லாமல்.

     12-3. தாம் இறப்பதற்கு முன்னும் இறந்தபின்னும் நின்குலத்து
முன்னோர் அளித்த மதில்களிடத்தே செலுத்துவது நினக்கு என்ன
காரியம்? அது நின்பெருமைக்குப் பொருந்துவது அன்று.

     13-4. சினம்பொருந்திய குருசிலே! வளைந்து செல்ல வேண்டிய
தாயினும், வேறு வழியே செல்லுவாயாக. 15 - 6. மதிற்கதவின் சிறப்பு.

     கணையமரத்தாற் பாதுகாக்கப்பட்டு, இரும்பினாற்
பிணித்தலையுடைய பலகையாற் செய்யப்பட்ட, பலநிலைகளையுடைய
கோபுரவாயிலிலேயுள்ள கதவை மெய்யாகக் கண்டால். 17 - 8.
சேரனது யானையின் சினம்.

     17. உண்ணும் பொருட்டுத் தேனீக்கள் பரவிய மதத்தால்
குத்துக் கோலைக் கடந்த; மதம் போர் வேட்கையால் பிறந்தது.

     18. நிறத்தால் வேங்கைமலரைவென்ற புள்ளிகள் விளங்கித்
தோன்றுகின்ற நெற்றியினிடத்தே; புகர்நுதல்: வாளா பெயர்
மாத்திரையாய் நின்றது.

     19. ஏந்திய கையைச் சுருட்டி அங்குசத்தைக் கடந்து; "மதமாக்
கொடுந்தோட்டி கைந்நீவி" (பரி. 10 : 49)

     20. மேம்பட்ட என்றமையால் எடுத்த கொடி தன்மீது அசைய.

     21. நின்களிறுகள் அவ்விடத்தே அடங்குதல் ஆகா.

     கதவு மெய்காணின் தாங்கலாகாவென்றதன் கருத்து
அக்கதவைத்தன் கொம்பாற் குத்தச் செல்லுமென்றபடி; "நீண்மதி
லரணம் பாய்த்தெனக் தொடிபிளந்து, வைந்துதி மழுகிய
தடங்கோட்டியானை" (ஐங்குறு. 444)

     நின்முன்னோராற் பாதுகாக்கப்பட்ட வேந்தரது மதில்வழியே
செல்லற்க; வேறுவழியே செல்க என்பது கருத்து.

     (பி - ம்) 4. கடறரையார்த்த. 6. செம்பொற் சிலம்பு. 17. காழக
நீவி. (3)


     1தொல். கிளவி. 29 - 30.

     2'வரிப்புனை பந்தொடு பாவை தூங்க" (முருகு, 68) என்பதும்
'பகைவரை மகளிராக்கி அவர் கொண்டு விளையாடுதற்குத் தூக்கின
வென்றவாறு' என்னும் அதன் உரையும் இங்கே அறிதற்பாலன.

     3வெற்றிமடந்தை - துர்க்கை.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

3. குண்டுகண் ணகழி
 
53.வென்று கலந்தரீஇயர் வேண்டுபுலத் திறுத்தவர்
வாடா யாணர் நாடுதிறை கொடுப்ப
நல்கினை யாகுமதி யெம்மென் றருளிக்
கல்பிறங்கு வைப்பிற் கடறரை யாத்தநின்
 
5தெல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயிற்
செம்பொறிச் சிலம்பொ டணித்தழை தூங்கும்
எந்திரத் தகைப்பி னம்புடை வாயிற்
கோள்வன் முதலைய குண்டுகண் ணகழி
வானுற வோங்கிய வளைந்துசெய் புரிசை
 
10ஒன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கி
நின்னிற் றந்த மன்னெயி வல்லது
1
முன்னும் பின்னுநின் முன்னோ ரோம்பிய
எயின்முகப் படுத்தல் யாவது வளையினும்
பிறிதாறு சென்மதி சினங்கெழு குரிசில்
 
15எழூஉப்புறந் தரீஇப் பொன்பிணிப் பலகை
குழூஉநிலைப் புதவிற் கதவுமெய் காணின்
தேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி
வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல்
ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி
 
20மேம்படு வெல்கொடி நுடங்கத்
தாங்க லாகா வாங்குநின் களிறே.
 

துறை  : செந்துறைப்பாடாண் பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்  : குண்டுகண் ணகழி.

1 - 5. வென்றுகலம் ......................... செல்குவையாயின்.

உரை :  வென்று கலம் தரீஇயர் - பகைவரைப் பொருது வென்று
அவருடைய செல்வங் களைக் கொணர்தற்காக; வேண்டுபுலத்து - அச்
செயற்கு வேண்டும் இடத்தே ; இறுத்து - சென்று தங்குதலால் ; அவர்
-  அப்  பகைவர்தாம்  வெல்லுதலருமை  நினைந்து ; எம் நல்கினை
யாகுமதி  என்று - யாம் இறுக்கும் இக் கலங்களை யேற்றுக் கொண்டு
எம்மை  அருளியோனாகுக  என்று  பணிந்த  மொழியாற்  சொல்லி ;
வாடா    யாணர்    நாடு   திறை   கொடுப்ப   -  குன்றாத  புது
வருவாயினையுடைய  தம்  நாட்டிடத்தேயுள்ள  அரிய  செல்வமாகிய
கலங்களைத்   திறையாகச்   செலுத்த   ;   அருளி   -   அவற்றை
யேற்குமுகத்தால்  அவர்கட்கும்  நட்பருளி  ; கல்பிறங்கு வைப்பின் -
மலைகள்  உயர்ந்த  நாட்டகத்தே  ;  கடறு  அரை  யாத்த  - காடு
சூழ்ந்துள்ள ;    நின்   தொல்புகழ்   மூதூர்ச்    செல்குவையாயின்
நின்னுடைய   பழைமையான  புகழமைந்த  தலைநகராகிய மூதூர்க்குத்
திரும்பிச் செல்வாயாயின் எ - று.
 

செல்வத்தாற் செருக்கித் திரியும் பகைவரை யொடுக்கி அவர் தரும்
திறைப்பொருள்   கோடலும்   நன்கல  முதலியவற்றைப்  பரிசிலர்க்கு
வழங்கலும்  பண்டைத்  தமிழ் வேந்தர் பொதுவாக மேற்கொண்டிருந்த
செயல்களாதலின்,   அவற்றையே   விதந்து,   “வென்றுகலந்தரீஇயர்”
என்றார்.   வென்று   தரீஇயர்  என்றதனால்,  இச்செலவு  அடங்காத்
தெவ்வர்  மேற்றென்பதும், கலமென்று சிறப்பித்ததனால், பரிசிலர்க்கீத்
துவக்கும்  இன்பப்புகழ்  குறிக்கோளென்பதும்  பெற்றாம். “உறுவ ரார
வோம்பா  துண்டு,  நகைவ  ரார  நன்கலம் சிதறி” (பதிற். 43) என்று
பிறரும்  கூறுதல் காண்க. சிறு முயற்சியால் பெருவெற்றி எய்துதற்குரிய
இடங்கண்டபின்னல்லது   வேந்தர்   வினை   தொடங்   காராதலின்,
அத்தகைய  இடங்  கண்டு ஆங்கே   தங்கினமை தோன்ற, “வேண்டு
புலத்து  இறுத்து”  என்றார்  . “யாண்டுதலைப்  பெயர வேண்டுபுலத்
திறுத்”   (பதிற்.  15)  தென்று பிறசான்றோரும்  இடத்தை  வேண்டு
புலமெனச்   சிறப்பித்தோதுவர்.   நின்  வலியும்  படை  வன்மையும்
இடத்தின்     வாய்ப்பும்    பகைவர்க்குத்     தம்     மாட்டாமை
புலப்படுத்துதலின்,     அவர்     தாமே     திறைகொடு   போந்து
பணிந்தமொழியால் நின் அருள் வேண்டுகின்றன ரென்பார், “நல்கினை
யாகுமதி   யெம்மென்று   நாடுதிறை  கொடுப்ப”  என்றார்.  அவரை
யழித்தல்   குறித்து   வெகுண்டு   வந்தமை   “நல்கினை   யாகுமதி
யெம்மென்று”  மொழிந்து திறைகொடுத்தலாற் பெற்றாம் . மேன்மேலும்
பெருகும்  வளம்  படைத்த  நாடு  என்றற்கு,  “வாடா  யாணர் நாடு”
எனப்பட்டது.  நாடு, ஆகுபெயரால் அந்நாட்டிடத்து அருங்கலம் எனக்
கொள்க.   இனி,   நாட்டையே   திறையாகக்  கொடுப்ப  என்றுமாம்.
இவ்வாறே  பழைய  வுரைகாரரும்  கூறினர். இறுத்தவர் என்பதனைச்
செயப்பாட்டு  வினைப்  பெயராக்கி,  நின்னால்  படையிறுக்கப்பட்டவ
ரென்றுமாம்.   அவரென்றது,   “அவ்வாறு  இறுக்கும்படி  நின்னொடு
எதிர்ந்த  அரச”  ரென்றும், “திறைதர  வென்றற்குத் திறை கொடுப்ப
வென்றது   இடவழுவமைதி”   யென்றும்  பழையவுரை  கூறுகின்றது.
மலைநிறைந்த    நாடாதலால்  “கல்பிறங்கு   வைப்பின்”   என்றும்,
அந்நாட்டையே  தொன்றுதொட்டு வந்த அரசர் இருந்து ஆட்சிபுரிந்த
மூதூர்   என்றற்குத்   “தொல்புகழ்  மூதூர்”   என்றும்,  அந்நகரை
மலையரண்     சூழ    அதன்    அடிப்பகுதியைக்   காடுகொண்டு
கட்டினாற்போலக்  காடுசூழ்ந்து  கிடத்தலால்,  “கடறு அரை  யாத்த”
என்றும்  கூறினார்.  இவ்வாறே பகைவர்  அனைவரையும் அழித்தும்
பணிவித்துமல்லது  திரும்பானாதலின்,   “செல்குவையாயின்” என்றார்.
இனி,   செல்குவதாகவே   கொண்டு,  செல்கின்றா  யாதலால் என்று
உரைப்பினும் அமையும்.

6 - 13. செம்பொறி ...........................யாவது .

உரை :  செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை       தூங்கும் -
(பகைவரைப்   பாவைபோல்  உருச்  சமைத்து  அதற்குச்)  செவ்விய
மூட்டுவா  யமைந்த  சிலம்பும்  அணியாகத்  தொடுக்கப்பட்ட  தழை
யுடையும்   கட்டித்   தொங்கவிட்டிருக்கும்  ;  எந்திரத்  தகைப்பின்
அம்புடை  வாயில்  -  எந்திரப்  பொறிகளும்  எய்யப்படும் அம்பும்
அமைக்கப்பட்ட   கோட்டை     வாயிலும் ;  கோள்வல்  முதலைய
குண்டுகண் அகழி - கொலை வல்ல  முதலைகளையுடைய   ஆழ்ந்த
இடத்தையுடைய   அகழியும்;வளைந்து  செய் - வளைவு வளைவாகக்
கட்டப்பட்டு ; வான்உற ஓங்கிய புரிசை - வானளாவ வுயர்ந்த மதிலும்
ஆகிய இவ்வெயில்   ;  ஒன்னாத்  தெவ்வர்  முனைகெட  - மனம்
ஒன்றாத பகை வேந்தர் போந்து செய்து போர் அழியும்படி ; விலங்கி -
குறுக்கிட்டு    ;    நின்னில்   தந்த  -  நின்னால்   கைக்கொண்டு
நல்கப்பட்ட;மன்   எயில்   - துணை    வேந்தர்களின்  எயிலாகும்  ; 
அல்லதும் - அன்றியும் (அவ்வெயில்); நின்  முன்னோர்  -  நினக்கு
முன்னோர்கள் ; முன்னும் பின்னும் -  தமக்கு  முன்னிருந்தோராலும்
பின் வந்தோராலும் ; ஓம்பிய எயில் - துணை  செய்து  காக்கப்பட்ட
எயிலுமாம்  ;  முகப்படுத்தல்  யாவது -  திரும்பச்  செல்லும்  நின்
தானையை நேர்முகமாகச் செல்வது குறித்து இவ்     வெயிலிடத்தே   
செலுத்துவது      யாதாய்     முடியும், எண்ணியருள்க எ-று.
 

சிலம்பின்    மூட்டுவாய் அழகாகப் பொறிக்கப்பட்டிருத்தல் பற்றிச்
“செம்பொறி”   யெனப்பட்டது.   தழையாவது   பல்வகை  மலராலும்
தளிராலும்  அழகாகத் தொடுக்கப்படுவது. இதன் இயல்பை “மணலாடு
மலிர்நி்றை  விரும்பிய வொண்டழைப்  புனலாடு  மகளிர்”  (ஐங். 15)
என்பதன்  உரைக்கண்  விரியக்  கூறினாம்  ;  ஆண்டுக்   காண்க.
இத்தழையை  மகளிர்  தமக்கு  அணியாகத்  தொடுத் தணிதல் பற்றி,
அணித்தழை  யென்றார்  . “உடுத்துந் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்
தழையணிப்  பொலிந்த  வாயம்” (குறுந். 295) என்று பிறரும் கூறுதல்
காண்க.  கோட்டை வாயி்லில் பகைவரை மகளிராக்கி அவர் அணிந்து
கோடற்குச்   சிலம்பும்   தழையும்  பந்தும்  கட்டித்  தொங்கவிடுதல்
பண்டையோர்  மரபு.  அதனால், “செம்பொறிச் சிலம்பொ டணித்தழை
தூங்கும்  வாயில்”  என்றார்.  நக்கீரனாரும்,  “செருப்புகன்  றெடுத்த
சேணுயர்  நெடுங்கொடி, வரிப்புனை பந்தொடு பாவை தூங்க” (முருகு.
68)   என்று  கூறுவர்.  “சிலம்பும்  தழையும்  புரிசைக்கண்  தங்கின
வென்றது,  ஈண்டுப்  பொருவீர் உள்ளீரேல், நும் காலிற் கழலினையும்
அரையிற்  போர்க்குரிய உடையினையு மொழித்து இச் சிலம்பினையும்
தழையினையும்      அணிமினென     அவரைப்     பெண்பாலாக
இகழ்ந்தவாறென்க”  வென்றும், “இனி அவற்றை அம் மதிலில் வாழும்
வெற்றி  மடந்தைக்கு  அணியென்பாரு  முளர்” என்றும் பழையவுரை
கூறுகின்றது.

வளையிற்  பொறியும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணு முதலாகப்
பல்வகைப்   பொறிகள் அமைத்திருத்தல் பற்றிச் சிறப்புடைய வில்லும்
அம்பும்  விதந்து,  “எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்” என்றார்.
பல்வகைப்    பொறிகளும்   பகைவர்   அணுகாமற்   றகைத்தற்குப்
பயன்படுதல்  பற்றித்  “தகைப்” பென்றார். தன்கண் வீழ்ந்தார் நீந்திக்
கரையேறமாட்டாதபடி        பற்றிக்      கொல்லும்     செயலால்,
“கோள்வல்முதலை”    யென்றும்,  அவை  வாழ்தற்கேற்ற  ஆழமும்
அகலமும்  உடைமைபற்றிக் “குண்டுகண்  ணகழி”  (புறம்  37)  என
மாறோக்கத்து நப்பசலையாரும் கூறுதல் காண்க. “கோள்வல் முதலைய
வென்று         முன்வந்த       அடைச்சிறப்பான்       இதற்குக்
குண்டுகண்ணகழியென்று பெயராயிற்று” என்பர் பழையவுரைகாரர்.
 

புறத்தோரால்     எளிதில்  தகர்க்கப்படாமை குறித்து, மதிற்சுவர்
வளைந்து       வளைந்து      செல்ல       எடுக்கப்படுவதுபற்றி,
“வளைந்துசெய்புரிசை”   யென்றார்.   செய்   யென்னும்  முதனிலை
வினையெச்சப்  பொருட்டு.  வளைந்து  செய் வான்றோய் புரிசை என
மாறிக்  கூட்டியியைக்க.  ஒன்னாத் தெவ்வர், மனம் ஒன்றாத பகைவர்
என்க;   ஒன்றாவெனற்பாலது   ஒன்னாவென   மரீஇயிற்று  .  இனி,
ஒன்னாராகிய  தெவ்வர்  என்றுகொண்டு,  “உயிரீறாகிய வுயர்திணைப்
பெயரும்,   புள்ளியிறுதி  யுயர்திணைப்  பெயரும்,  எல்லா  வழியும்
இயல்பென  மொழிப” (தொல். எழுத். 11) என்பதனுள் “இறுதி” யென்ற
மிகையால் ஈறுகெட்டு மிக்கு முடியுமென அமைத்துக்கொள்க . முனை,
போர்  .  இனி, வளைந்து செய் புரிசை யென்பதனை, “வளையச்செய்
புரிசையெனத்   திரித்துக்  காலவழுவமைதியாகக்  கொள்க”  என்றும்,
“வளைந்து   செய்புரிசையாகிய   நின்னிற்  றந்த  மன்னெயில்  என
இருபெயரொட்டு” என்றும் கூறுவர் பழையவுரைகாரர்.

விலங்கித்     தந்த எயில் என முடிக்க . இவ்வெயிலை வளைந்து
செல்லுமாறு  கூறுவார்,  அதற்கேற்ப,  எயில்  முகத்துப் படையினைப்
படுத்தலால்  வரும்  கேட்டை  நினைந்து, எயிற்கும் அவற்கும் உள்ள
தொடர்பு சுட்டி, “நின்னிற் றந்த மன்னெயில்” என்றார். நின்னிற் றந்த
மன்னெயிலென்றதற்கு, “நின்னாற் கொண்டு பிறர்க்குக் கொடுக்கப்பட்ட
மன்னெயி:”  லென்பர்  பழையவுரைகாரர்  .  எனவே, நின்னால் தரப்
பட்டதனால் நிலைபெற்ற எயில் என்பது அவர் கருத்தாயிற்று.

மன்,    துணைவேந்தர் மேற்று. அவர் சேரலாதன் துணை பெற்று
அவன்   அருள்வழி  வாழும்  அரசராவர்.  அவர்  சேரலாதனுடைய
முன்னோர்   காலத்திருந்தே   வழிவழி  அருளப்பட்டமை  தோன்ற,
“அல்லதும்  முன்னும் பின்னும் நின் முன்னோ ரோம்பிய எயில்” என
எயில்மேல்  வைத்துரைத்தார்  ;  இதுபோது பேணப்படுவதும் அதுவே
யாகலின்,     இவ்வாறு     நின்னாலும்    நின்    முன்னோராலும்
ஓம்பப்பட்டுவரும்   எயிலிடத்தே   நின்  படையைப்  புகப்படுக்கின்,
அதனாற்  கேடு  பெரிதாம்  என்பார், “எயின்முகப் படுத்தல் யாவது”
என்றார்.

இனிப்  பழையவுரைகாரர், “கொடுத்த வென்பதற்குத் தந்தவென்பது
இடவழுவமைதி”    யென்றும்,    “கொடுத்த   வெனவே   கொண்டு
கொடுத்தவெனக்  கோடல்  போந்த பொருளாய் விளங்கிற்” றென்றும்,
“தரப்பட்ட    வென்பதனைத்   தந்தவெனச்   செயப்படுபொருளைச்
செய்தது  போலச்  சொல்லிற்  றாக்குக” வென்றும். “மன்னெயி லல்ல
தென்புழி  மன்னெயிற்கண் ஏழாவது விரித்து அதனைப் பின்வருகின்ற
எயின்  முகப்படுத்தல்  என்ப  திடமாகப் படுத்த லென்பதோரு சொல்
வருவித்து  அதனொடு முடிக்க” வென்றும், “முன்னும் பின்னுமென்றது
முன்னோர்  தாங்கள்  இறப்பதற்கு  முன்னும் இறந்ததற்குப் பின்னும்
என்றவா”   றென்றும்,  “பின்னோம்புதலாவது  முன்னோர்  தமக்குப்
பின்னும்   இவ்வரசாள்வாரும்  நம்மைப்போல  இவ்வாறோம்புகவென
நியமித்து  வைத்த” லென்றும், யாவதென்றது, “அஃது என்ன காரியம்,
நினக்குத் தருவதொன்றன் றென்றவா” றென்றும் கூறுவர்.
 

13 - 21. வளையினும் ............. களிறே.

உரை :  சினங்கெழு     குரிசில் - சினம் பொருந்திய குரிசிலே ;
வளையினும்  -  இவ்வெயில்வழிச் செல்லா தொழியின் வழி வளைந்து
வளைந்து நீளுமாயினும் ; பிறி தாறு செல் மதி - பிறிதொரு வழியாகச்
செல்வாயாக; எழூஉப்  புறந் தரீஇ - கணைய மரத்தால் பின்னே வலி
செய்யப்பட்டு ; பொன்     பிணிப்   பலகை   ;   இருப்பாணிகளால்
இறுகப்  பிணிக்கப்பட்ட   பலகைகளால்   இயன்ற  ;  குழூஉநிலைப்
புதவிற் கதவு  -   பற்பல    நிலைகளையுடைய  கோயில்  வாயிலிற்
கதவுகளை ; மெய் காணின் -  மெய்பெறக்       கண்டால்  ;  தேம்
பாய்    கடாத்தொடு    -   வண்டினம் பாய்ந்துண்ணும்  மதத்தால் ;
காழ்கை         நீவி    -       குத்துக்கோலை         மதியாது
சென்று  ;  வேங்கை   வென்ற  பொறிகிளர்  -  வேங்கை மரத்தைப்
புலியென  மருண்டு சிதைத்ததனாலுண்டாகிய வடுப்பொருந்திய ; புகர்
நுதல்   நின்    களிறு  -  புள்ளியமைந்த  நெற்றியினையுடைய நின்
யானைகள்  ;  ஏந்து  கை  சுருட்டி  -  நிமிர்த்த கையைச் சுருட்டி ;
தோட்டி  நீவி  -  யானைமேல்  வீரரேந்தும்  தோட்டியைக் கடந்து ;
மேம்படு வெல் கொடி நுடங்க - செருவில் மேம்படப் பொருது எடுத்த
கொடியசையச்   சென்று   ;   ஆங்குத்   தாங்கலாகா  -  அம்மதிற்
கதவுகளைப்  பிளந்து  அரண்களைச்  சிதைக்குமாதலின் அப்பொழுது
அவை அடக்குதற் காகாவாம் எ - று.

சேரலாதன்     செல்லக் கருதிய நெறியை மாற்றி வேறு நெறியிற்
செல்லுமாறு   கூறலின்,   தன்   கருத்துக்  கியையாமையால்  சினங்
கொளாமைப்பொருட்டு,     “சினங்கெழு     குரிசில்”     என்றார்.
வளைந்துசெய்புரிசைக்குப்   புறத்தே   வளைந்து  வளைந்து  சேறல்
வேண்டுமாதலின்,   “வளையினும்”   என்றும்,  “பிறிதாறு  சென்மதி”
யென்றுங்  கூறினார்.  எழு,  கணையமரம்.  இது  கதவிற்குப் பின்னே
கிடந்து  அதற்கு  வன்மை தருவதாகும். பொன், இரும்பு ; அஃதாவது
ஆணி  .  மதிற்கோபுரம் பல நிலைகளையுடையதாதலால், குழூஉநிலை
யெனப்பட்டது.   பகைவருடைய  அரண்  கதவுகளைக்  கண்டபோது
அவற்றைப்  பாய்ந்து  சிதைத்த பயிற்சியுடைமையான், இக்கதவினைக்
காணினும்  அது  செய்யும் என்கின்றாராதலின், “கதவு மெய் காணின்”
என்றார்.  வேங்கைமர மொன்றைச் சேய்மையிற் கண்ட துணையானே,
வேங்கையெனக்  கருதிச்  சென்றழிக்கும் இயல்புடையவை நின் களிறு
என்பார்,  “தேம்பாய்  கடாத்தொடு  காழ்கை  நீவி, வேங்கை வென்ற
பொறிகிளர் பூநுதல்” என்றார். வேங்கை, வேங்கைமரம். பொறி, ஈண்டு
வேங்கையொடு  பொருதவழி அதன்  கொம்புகளால் உண்டாகிய வடு.
யானை   மதிற்   கதவைத்  தாக்குங்கால்  தன்  கையைச்  சுருட்டித்
தாங்குமென்றற்கு,  “ஏந்துகை சுருட்டி” என்றும், தோட்டியால் யானை
வீரர்  அடக்கினும்  அடங்காவாகும்  என்பார், “தோட்டி நீவி, கொடி
நுடங்க,   தாங்கலாகா”   என்றும்   கூறினார்  ; “கூங்கை  மதமாக்
கொடுந்தோட்டி  கைந்நீவி”  (பரி.  10 :  49) என்று பிறரும் கூறுதல்
காண்க.
 

சினங்கெழு குரிசில்,  நின் களிறு குழூஉநிலைப் புதவிற் கதவுமெய்
காணின் தாங்கலாகா; ஆகலான், வளையினும் பிறிதாறு சென்மதி என
இயைக்க.

இனிப் பழையவுரைகாரர், குழூஉநிலைப் புதவென்றது, பல நிலமாகச்
செய்த  கோபுரவாயி  லென்றும், தே மென்றது தேனீயென்றும், கடாம்,
மதில் கண்டுழிப் போர்வேட்கையாற் பிறக்கும் மதமெனவும் கூறுவர்.

இதுகாறும்     கூறியது,  சினங்கெழு   குரிசில், நீ, கலம் தரீஇயர்
வேண்டுபுலத்து  இறுத்து,  அவர்  நல்கினை  யாகுமதி  யெம்மென்று,
திறை  கொடுப்ப,  அருளி, நின் மூதூர்ச் செல்குவையாயின், வாயினும்
அகழியும்  புரிசையு  முடையதாகிய  இதோ  நின்  முன்னே  நிற்கும்
இவ்வெயில், நின்னிற்றந்த மன்னருடைய எயிலாகும் ; அல்லதும், நின்
முன்னோரோம்பிய  எயிலுமாகும் ; இதற்குள்ளே நின் தானையினைப்
படுத்தல்  யாவதாம்  ;  வளையினும்  பிறிதாறு  செல்மதி ; வேங்கை
வென்ற   நின்   களிறு,  புதவிற்  கதவு  மெய்  காணின்,  ஆங்குத்
தாங்கலாகா வாகலான் என வினைமுடிவு செய்க.

இனிப்  பழையவுரைகாரர், “நீ வேண்டு புலத்திறுத்து, அவர் திறை
கொடுப்ப   அருளி   நின்   மூதூர்ச்   செல்குவையாயின்   குருசில்,
வளையினும்  பிறிதாறு  சென்மதி ; செல்லுதற்கு யாது காரணமெனின்,
புதவிற்  கதவு மெய் காணின், ஆங்கு நின் களிறு தாங்கலாகா. தாங்க
வேண்டுவ  தேல்,  நின்னிற்றந்த எயின்முகத்துப் படுத்துவதல்லது நின்
முன்னோரோம்பிய  எயின்முகத்துப்  படுத்தல்  யாவது  என  மாறிக்
கூட்டி   வினை   முடிவு   செய்க”  என்றும்,  “செல்குவை  யாயின்
என்பதன்பின் பிறிதாறு சென்மதி யென்பதனையும் தாங்கலாகா வாங்கு
நின்    களிறு    என்பதன்   பின்   எயின்முகப்படுத்தல்   யாவது
என்பதனையும் கூட்ட வேண்டுதலின் மாறாயிற்று” என்றும் முடிப்பர்.

இதனாற் சொல்லியது, அடைந்தவர்க்கு அருளலொடுபடுத்து அவன்
வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
  


1.  அல்லதூஉம் என்றும் பாடம்


 மேல்மூலம்