யுருத்துவரு மலிர்நிறை” யென்றார். உவலை, தழைகள், கண்ணியும் மாலையும் சூடி வரும் மள்ளர் போல வெள்ளம் உவலை சூடி வந்த தென்பதாம்; இளங்கோவடிகள் இப் பேரியாற்று நீரைக் கூறலுற்றவிடத்து, “கோங்கம் வெங்கை தூங்கிணர்க் கொன்றை, நாகந் திலக நறுங்கா ழார, முதிர்பூம் பரப்பி னொழுகுபுனலொழித்து, மதுகர ஞிமிறொடு வண்டினம் பாட, நெடியோன் மார்பிலாரம் போன்று, பெருமலை விலங்கிய பேரியாறு” (சிலப்.25:17-22) என்பது காண்க. இனிப் பழையவுரைகாரர், “உவலை சூடியுருத்துவரு மலிர் நிறை யென்றது, தழைகளைச் சூடித் தோற்றிவரும் வெள்ள மென்றவா” றென்றும், “தன்னை வயல் பொறுக்குமாறு காணவென்று போர் வேட்டு வருவாரைப்போலு மென்று கூறிய இச் சிறப்பானே இதற்கு உருத்துவரு மலிர்நிறை யென்று பெயராயிற்று” என்றும் கூறுவர். மலிர் நிறை கலங்கிச் சிவந்து தோன்றலின், புதுநீர்ப் பெருக்கைச் செந்நீர் என்றும், அதுதானும் மடைகளை யுடைத்துக் கெடுக்காவண்ணம் மடை யமைத்துச் செறுத்தும், காலிற் போக்கியும் வயலிடைப் பரப்பியும் உழவர் செய்யும் பூசல் மிக்கு நிற்றலின், “செந்நீர்ப் பூசல்” என்றும், அப் பெருக்கின் தன்மையால் மழையின்மை காரணமாகப் பிறந்த வெயில் வெம்மையும் பிறவும் நின்னுடைய பரந்த நாட்டிடத்துக் காண்ப தரிது என்பது தோன்ற, செந்நீர்ப் பூச லல்லது வெம்மை யரிது நின் னகன்றலை நாடென்றும், இவ்வாற்றால், சேரனது நாடு ஏனை நாட்டவர் யாவரும் நயத்தற்குரிய வளம் வாய்ந்திருக்கிற தென்பார், “திருவுடைத் தம்ம” வென்றும் கூறினார். இதனால் அவன் நாடுகாத்தற் சிறப்புக் கூறியவாறாயிற்று. இதுகாறும் கூறியது, மறவர் கதழ் தொடை மறப்ப, இளை இனிது தந்து விளைவு முட்டுறாது புலம்பா வுறையுள் தொழில் நீ ஆற்றலின், பெருவறற் காலையும், விடரளை நிறைய, புலம் வாய் பரந்து மிகீஇயர் உருத்துவரு பேரியாற்று மலிர்நிறைச் செந்நீர்ப் பூசலல்லது நின் அகன்றலை நாடு வெம்மை யரிது; இவ்வகையால் நின் நாடு திருவுடைத்து என்பதாம்; இனிப் பழையவுரைகாரர், “பெருவறற் காலையும் நின்னகன்றலை நாடு புலம்பா வுறையுட்டொழில் நீ ஆற்றலின் திருவுடைத்து எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். இப்பாட்டு முற்றும் சேரன் தனது நாடு காக்கும் சிறப்பே கூறி நிற்றலின், இது நாடு வாழ்த்தாயிற்று. 9. வெண்கை மகளிர் |