மிடல்,    வலி. தபவெனக் காரணம் காரியமாக     உபசரிக்கப்பட்டது.
புடையல்,  மாலை.  குருதி   புடையலும்  கழலும்  சிவப்பப் பனிற்றும்
என்க.  “பனிற்றுதல்  தூவுதல்” என்றுரைத்து,  “பனிற்றுவது புண்பட்ட
வீரருடல்  எனக்  கொள்க” என்பர் பழையவுரைகாரர். எனவே மறவர்
மிடல்   தபுதலால்,   புண்பட்ட  அவருடல்  குருதியைத்  தெறித்துத்
தூவுமென்பது     கருத்தாயிற்று.     களமென்றது     கங்கையிடைச்
சேரியென்புழிப் போலப் பாசறைமேல் நின்றது.

இதுகாறும்      கூறியது, “விறலி, புரவெதிர்  கொள்வனைத் தழிஞ்சி
பாடிக்   கண்டனம்    வரற்குச்   செல்லாமோ   ;   அப்  புரவெதிர்
கொள்வனாகிய  கோமான்  இதுபொழுது   தான் அவ்  வெதிர்கோடற்
கேற்பப்  புலவுக்  களத்தோன் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க”
என்றும்.   “வரற்குச்   சொல்லாமோ    எனக் கூட்ட  வேண்டுதலின்
மாறாயிற்”    றென்றும்,     “இதனாற்     சொல்லியது      அவன்
வென்றிச்சிறப்போடு   அவன் கொடைச்சிறப்பும் உடன் கூறியவாறாயிற்”
றென்றும்  பழையவுரைகாரர் கூறுவர்.

8. ஏவிளங்கு தடக்கை
 

58.ஆடுக விறலியர் பாடுக பரிசிலர்
வெண்டோட் டசைத்த ஒண்பூங் குவளையர்
வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்
செல்லுறழ் மறவர்தங் கொல்படைத் தரீஇயர்
 
5இன்றினிது நுகர்ந்தன மாயி னாளை
மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்லது
உண்குவ மல்லேம் புகாவெனக் கூறிக்
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்
பொய்படு பறியா வயங்குசெந் நாவின்
 
10எயிலெறி வல்வி லேவிளங்கு தடக்கை
ஏந்தெழி லாகத்துச் சான்றோர் மெய்ம்மறை
வான வரம்ப னென்ப கானத்துக்
கறங்கிசைச் சிதடி பொரியரைப் பொருந்திய
சிறியிலை வேலம் பெரிய தோன்றும்
 
15புன்புலம் வித்தும் வன்கை வினைஞர்
சீருடைப் பல்பக டொலிப்பப் பூட்டி
நாஞ்சி லாடிய கொழுவழி மருங்கின்
அலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே.