3. வரம்பில் வெள்ளம்
 

33.இறும்பூதாற் பெரிதே கொடித்தே ரண்ணல்
வடிமணி யணைத்த வணைமரு ணோன்றாள்
கடிமரத்தாற் களிறணைத்து
நெடுநீர துறை கலங்க
 
5மூழ்த்திறுத்த வியன் றானையொடு
புலங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம்
வாண்மதி லாக வேன்மிளை யுயர்த்து
வில்விசை யுமிழ்ந்த வைம்முள் ளம்பிற்
செவ்வா யெஃகம் வளைஇய வகழிற்
 
10காரிடி யுருமி னுரறு முரசிற்
கால்வழங் காரெயில் கருதிற்
போரெதிர் வேந்த ரொரூஉப நின்னே.
 
  

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு.
வண்ணம்  : ஒழுகு வண்ணம்.
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
பெயர் : வரம்பில் வெள்ளம்.
 

1 - 5. இறும்பூதால்............வியன்றானையொடு. 

உரை : கொடித் தேர் அண்ணல் - கொடியணிந்த தேர்களையுடைய
அரசே;  இறும்பூது  பெரிது  -  நின்  பொறையுடைமை  கண்டவழிக்
கொண்ட வியப்பினும் பெரு வியப்பாக வுளது; வடி மணி அணைத்த -
வடித்த ஓசையினையுடைய மணியைப் பக்கத்தே கட்டப்பெற்ற;  பணை
மருள்  நோன்றாள் - பணை போன்ற வலிய தாள்களையுடைய; களிறு
-  கடி  மரத்தான்  அணைத்து  - யானைகளைக் காவல் மரத்தோடே
பிணித்து;  நெடு  நீர  துறை  கலங்க  - கலங்காத மிக்க நீரையுடைய
துறைகள்  கலங்கும்படி;  மூழ்த்து  இறுத்த  வியன்  தானையொடு  -
பலவாய்த்   திரண்டு   மொய்த்து   விரைய   முன்னேறித்  தங்கும்
இயல்பிற்றாகிய பெரிய தூசிப் படையொடு கூடிய எ - று.
  

இறும்பூது     பெரிது என மீளவுங் கூறியது, பெரிதுற்ற முன்னைய
இறும்பூது,   போரெதிர்  வேந்தர்  பொராது  அஞ்சி  யொருவுதலால்,
மிகுதல்   தோன்ற   நின்றது.  எப்போதும்  போர்ச்  செலவுகுறித்துப்
பண்ணமைந்து  நிற்குமாறு  கூறுவார்,  “வடிமணி யணைத்த” என்றார்.
செல   வில்வழி   யானை   மணியணைப்   புண்ணாது  வறிதிருக்கு
மாதலாலும், நீராடற்குச் செல்ல