இதுவுமது. பெயர் : கரைவாய்ப் பருதி. 1 - 7. இழையர்.........சுரத்தலின். உரை : இழையர் குழையர் நறுந் தண் மாலையர் -இழையினையும் குழையினையும் நறிய தண்ணிய மாலையினையும் ; சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன் கை - ஒளி மிக்கு விளங்குகின்ற தொடியைச் செறிய அணிந்த முன் கையினையும்; திறல் விடு திருமணி - மிக்க வொளி திகழும் அழகிய மணி மாலை கிடந்து; இலங்கு மார்பின் - விளங்குகின்ற மார்பினையுமுடைய; வண்டுபடு கூந்தல் - வண்டு மொய்க்கும் கூந்தலை ; முடி புனை மகளிர் - கொண்டையாக முடித்துக் கைசெய்து கொண்டுள்ள பாடல் மகளிர் ; தொடைபடு பேர் யாழ் - நரம்புத் தொடையினையுடைய பேரியாழின்கண் ; பாலை பண்ணி - பாலைப் பண்ணையமைத்து; பணியா மரபின் உழிஞை பாட - பகைவர்க்குப் பணியாத முறைமையினையுடைய உழிஞைத் திணைச் செயலைப் புகழ்ந்து பாட ; இனிது புறந் தந்து -அவர்களை நன்கு ஓம்பி ; அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின் - அவர்கட்கு இனிய மகிழ்ச்சியினைத் தன் கொடையாலும் முகமலர்ச்சியாலும் செய்தலாலே எ - று. இழையரும் குழையரும் மாலையரும் ஆகிய மகளிர் பாட என இயையும். முன் கையினையும் மார்பினையுமுடைய மகளிர் என முடிக்க. |