புரோகிதன் சென்ற காட்டினை, “வேறுபடு நனந்தலை” யென்றார், ஐம்பொறிகளானும் ஆர நுகரும் நுகர்ச்சிக்கடனாகும் நாட்டினும், அவற்றை யடக்குதற்குத் துணையாகும் சிறப்புப்பற்றி வேறுபடுதலின், சேரமான், இவ்வாறு தன் படிமையான் புரோகிதனைத் துறவுமேற் கொள்ளப் பணித்தமை நோக்கின், அப் புரோகிதன் ஆன்றவிந்தடங்கும் சால்பிற் குறைபட்டமையும், அதனை நிறைத்துக்கோடற்கு வேந்தன் கண்ணோடி வேறுபடு நனந்தலைப் பெயர்த்தமையும் பெற்றாம் . இது கண்டன்றே யென்பது முதலாயின குறிப்பெச்சம். இதுகாறும் கூறியது ; செருப்புகல் முன்ப, பொரும, தாழிருங் கூந்தலையும், நற்றோளையும், ஓதியையும், நுதலையும், திருவினையு முடைய நின் தேவியின் கருவிலே, இயல் முற்றி, அறிவு புரிந்து, அரசு துறை போகிய புதல்வற் பெற்றனை இவணர் பொருட்டு ; உயர்ந்தோருவப்ப வேள்வி வேட்டனை ; அன்னவை கண்டு மருண்டனெனல்லேன் ; நரை மூதாளனை, நின்படிமையான் ; வேறுபடு நனந்தலைப் பெயரக் கூறினை ; இதுகண்டன்றே மருட்கை யெய்துவேனாயினேன் என்பதாம் . இனிப் பழையவுரை, “வேட்டனை யென்றும், பெற்றனை யென்றும் நீ செய்த யாகங்களாகிய அன்னவையிற்றிற்கு யான் மருண்டேனல்லேன், நின்னை நல்வழி யொழுகுவித்து நின்ற நரை மூதாளனை நின்படிமையானே இல்லற வொழுக்கினை யொழித்துத் துறவற வொழுக்கிலே செல்ல ஒழுகுவித்தனை ; அவ்வாறு செய்வித்த நின் பேரொழுக்கத்தையும் பேரறிவினையும் தெரிந்து யான் மருண்டேனென வினை முடிவு செய்க; என்று கூறும் . “இதனாற் சொல்லியது ; அவன் நல்லொழுக்கமும் அதற்கேற்ற நல்லறிவுடைமையும் கூறியவாறாயிற்று.” 5. தீஞ்சேற்றியாணர் |