சிறிது போதும் அவரால் எதிர்த்து நிற்க முடியாது என்பது “வறிது” என்பதனால் வற்புறுத்தப்படுகிறது. பழையவுரைகாரர், “இகல் பெருமையின் என்பதற்கு இகலானது பெரிதாகையானே” என்றும், “இகலென்னும் எழுவாய்க்குப் பெருமையை வினைநிலைப் பயனிலையாகக் கொள்க” என்றும், “அஞ்சாரென்பது வினையெச்சமுற்” றென்றும், “படைகோளைத் துணிதலெனக் கூட்டுக,” வென்றும், உடன்காவ லெதிராரென்றது, பலரும் தம்முட் கூடியும் காக்கமாட்டா ரென்றவா” றென்றும் கூறுவர். இதுகாறும் கூறியது ; சினங்கெழுகுரிசில், நின்னைக் கறுத்தவர், இகல் பெருமையின் படைகோளஞ்சாராய்ச் சூழாது துணிதலல்லது நாடு உடன் காவல் எதிரார் ; மடம் பெருமையின் நின் பண்பு நன்கறியார் ; நின் உடற்றிசினோர்க்கு, நின் தொழி லொழித்து, நீ துஞ்சலுறூஉம் பகல் புகு மாலை, உருத்தெழு வெள்ளம் பரவுதலால், அகன்று வருகூட்டத்துச் செஞ்சுடர் நிகழ்வினையும் மடங்கற் றீயினையும் அனையை யாகின்றாய் என்று வினைமுடிவு செய்க. பழையவுரைகாரர், “நின்னொடு கறுத்தோர் தம் மடம் பெருமையால் நின் முன்குடி முதல்வர்க்கு அறிவு வலியுறுத்தும் சான்றோரை யொத்த நின் சூழ்ச்சிப் பண்புடைமை யறிகின்றிலர் ; நீதான் சூழ்ச்சியுடையையே யன்றிக் குருசிலே, நின்னுடற்றிசினோர்க்குப் போர் செய்யுமிடத்து மடங்கற்றீயின் அனையை ; அதனையும் அறிகின்றிலராதலால், அவர் தம் இகல் பெருமையானே அஞ்சாராய்ப் படைகோளைத் துணிதலல்லது நாட்டைச் சிறிதும் உடன்காவலெதிர் கொள்ளார் எனக் கூட்டி வினைமுடிவு செய்க”, என முடிப்பர். “இதனாற் சொல்லியது, அவன் சூழ்ச்சியுடைமையும் வென்றிச் சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று”, என்பது பழையவுரை. 3. நிறந்திகழ் பாசிழை |