நாவிற்கு விளக்கந்தரும் செம்மை “யாதொன்றுந் தீமையிலாத சொலல்” ஆதலின் அதனைச் சொல்லும் கபிலன் நாவினைச் “செந்நா” என்றும், வறுமை கூர்ந்த வழியும் மனத்தின் செம்மை மாறாது, புல்லிய நினைவுகட்கு இடந்தந்து வீணே கவலை யெய்தாது விளங்குவதுபற்றி “உவலை கூராக் கவலையில் நெஞ்சின்” என்றும் கூறினார் . உவலை, புன்மை இழிவு . கபிலன் பாட்டிற் காணப்படும் காட்சியனைத்தும் நனவினும் காணப்படுதலின், “நனவிற் பாடிய” என்றார் . பிற்காலச் செய்யுள் வழக்கிற் காணப்படும் இயற்கை யொடுபடாத புனைந்துரையும் புனைவுக்காட்சியும் அவன் பாடுவதிலன் என்பதாம். கபிலர் செல்வக் கடுங்கோவாழியாதனை இந்நூலிற் காணப்படும் ஏழாம்பத்தினைப் பாடிப்பெற்ற பரிசில், “சிறுபுறமென நூறாயிரங் காணங்கொடுத்து, நனற்ா வென்னுங் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக்கொடுத்தான் அக்கோ” என்று அவ் வேழாம் பத்தின் பதிகம் கூறுகின்றது. இதுகாறுங் கூறியவாற்றால், “சேரமானே, நீ நின் தானை வீரரை நோக்கி, நாடுபல தரீஇ, பெரும்பூணும் பூட்கையு முடைய சென்னியர் பெருமானை முத்தைத்தம்” என ஏவ சென்னியர் வீரர், அஞ்சி நிலத்தே எறிந்த வேல்கள், நாடுகாண் நெடுவரைக்கண் நாண் மகிழ் இருக்கையையும் மறம்புரி கொள்கையையும் நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன் பெற்ற வூர்களினும் பலவாம் என்பதாம் . இனிப் பழையவுரைகாரர், “இளஞ்சேர லிரும்பொறை, சென்னியர் பெருமானுடைய நாடுகள் பலவற்றையும் எமக்குக் கொண்டு தந்து அச் சென்னியர் பெருமானை எம் முன்னே பி்டித்துக் கொண்டுவந்து தம்மினெனத் தம் படைத்தலைவரை யேவச் சென்னியர் பெருமான் படையாளர் பொருது தோற்றுப் போகட்ட வெள்வேல், செல்வக் கடு்ங்கோ வாழியாத னென்பவன் நாடுகா ணெடுவரையின் நாண்மகி ழிருக்கைக் கண்ணே தன் முன்றிணை முதல்வர்போல அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய மறம்புரி கொள்கையைப் பாடின கபிலன்பெற்ற வூரினும் பல என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “செம்பியர் பெருமானைத் தம்மென மாறவேண்டுதலின் மாறாயிற்” றென்றும், “இனிப்பிறவாறு மாறிப் பொருளுரைப்பாரு முள” ரென்றும் கூறுவர் . “இதனாற் சொல்லியது அவன் முன்னோருடைய கொடைச் சிறப்பொடு படுத்து அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.” 6. வெந்திறற் றடக்கை |