பான்மை     சொல்லாலும்    செயலாலும்   புலப்படுதலால்,   அவ்
விரண்டனையும்  எடுத்தோதினார்.  பகர்தல்,  ஒன்று கொடுத்து ஒன்று
வாங்குதல்;   ஆகவே,  பகைவர்  திறை கொடுத்து  அருள்பெறுமாறு
பெற்றாம்;  திறை  பெறாது  அருளுதல்  கழிகண்ணோட்ட  மென்னும்
குற்றமா   மென   வறிக.   பகைவர்பால்   செலுத்தும்  நின்  அருட்
பெருமைக்கு    அவர்தம்    உயிரல்லது   திறை   ஆற்றாதாயினும்,
அருள்செய்தற்பொருட்டு,    திறைகொள்   வாயாயினை   யென்பார்,
“கொள்ளுநை”  யென்றார்.  கொள்ளுநை, அடுநை, விடுநை (புறம். 36)
என்றாற் போல்வதோர் முற்றுவினைத் திரிசொல்.
  

வலம்படு    வியன்பணையை ஆடுநர் பலிதூஉய்ப் பரவ, கடிப்புக்
கண்ணுறும்  இயவர்,  பைஞ்ஞிலம்  வருக இந் நிழலென வெண்குடை
நுவலும் மார்ப, வேந்தே, பகைவர் பணிந்து திறை பகரக் கொள்ளுநை
யாதலின், புரைவது நினைப்பின் புரைவதோ இன்று என வினைமுடிவு
செய்க.
  

“இதனாற்  சொல்லியது  பொறையுடைமையொடு  படுத்து  அவன்
வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று”.
  

8. கூந்தல் விறலியர்
 

18.உண்மின் கள்ளே யடுமின் சோறே
எறிக திற்றி யேற்றுமின் புழுக்கே
வருநர்க்கு வரையாது பொலங்கலந் தெளிர்ப்ப
இருள்வண ரொலிவரும் புரியவி ழைம்பால்
 
5ஏந்துகோட் டல்குன் முகிழ்நகை மடவரல்
கூந்தல் விறலியர் வழங்குக வடுப்பே
பெற்ற துதவுமின் றப்பின்று பின்னும்
மன்னுயி ரழிய யாண்டுபல துளக்கி
மண்ணுடை ஞாலம் புரவெதிர் கொண்ட
 
10தண்ணிய லெழிலி தலையாது மாறி
மாரி பொய்க்குவ தாயினும்
சேர லாதன் பொய்யல னசையே.
 

துறை : இயன்மொழி வாழ்த்து.
வண்ணம்  : ஒழுகுவண்ணம்.
தூக்கு : செந்தூக்கு.
பெயர் : கூந்தல் விறலியர்.

1 - 2. உண்மின்........புழுக்கே.  

உரை : கள்  உண்மின் - கள்ளை  யுண்பீராக; சோறு அடுமின் -
சோற்றைச் சமைப்பீராக; திற்றி எறிக - தின்னப்படும் ஊன் கறியை