முடிபு,     நின் பகைவர் நாடும் கண்டு வந்தேன்;  அதுவேயன்றி,
வேந்தே,  வெறுக்கை, சேரலாத, நீ புறந்தருதலின் நோயிகந் தொரீஇய
நின்  நாடும் கண்டு மதிமருண்டேன்; இவையிரண்டும் காணவேண்டின
காரணம்  யாதெனின், மைந்த நின் பண்பு பலவற்றையும் காண நயந்த
நயப்பாகும்  என  முடிபு செய்க. இதனால் அவன் வென்றிச் சிறப்பும்
தன் நாடு காத்தற்சிறப்பும் உடன்கூறியவாறாயிற்று.
  

6. துயிலின் பாயல்
 

16.கோடுறழ்ந் தெடுத்த கொடுங்க ணிஞ்சி
நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கல்
துஞ்சு மரக்குழாந் துவன்றிப் புனிற்றுமகள்
பூணா வையவி தூக்கிய மதில
 
5நல்லெழி னெடும்புதவு முருக்கிக் கொல்லுபு
ஏன மாகிய நுனைமுரி மருப்பின்
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி
மரங்கொன் மழகளிறு முழங்கும் பாசறை
நீடினை யாகலிற் காண்குவந் திசினே
 
10ஆறிய கற்பி னடங்கிய சாயல்
ஊடினு மினிய கூறு மின்னகை
அமிர்துபொதி துவர்வா யமர்த்த நோக்கிற்
சுடர்நுத லசைநடை யுள்ளலு முரியள்
பாய லுய்யுமோ தோன்ற றாவின்று
 
15திருமணி பொருத திகழ்விடு பசும்பொன்
வயங்குகதிர் வயிரமோ டுறழ்ந்துபூண் சுடர்வர
எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்துப்
புரையோ ருண்கட் டுயிலின் பாயல்
பாலும் கொளாலும் வல்லோய்நின்
 
20சாயன் மார்பு நனியலைத் தன்றே.
 

துறை : செந்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணம் : ஒழுகுவண்ணம்.
தூக்கு : செந்தூக்கு.
பெயர் : துயிலின் பாயல்.