பின்னது வருத்தத்தின்மேலும் நின்றன. மேல்ரும் பகை முதலியவற்றுக்கு எளிமையுற்று அரசுமுறை திரிதல் கூடாதென்றற்கு, “அசைவில் கொள்கை” யென்றும், முறை கோடியவழி, வறுமை பிணி முதலியன நாட்டிற் பெருகி மக்கட்கு இடும்பை பயத்தலின், “அசையா தாண்டோர்” என்றும் கூறினார். மன்ற வென்பதனை ‘அசைவில் கொள்கையராதலின்’ என்பதனோடு கூட்டியுரைக்க. இம் மண்கெழு ஞாலம் என்றற்குப் பழையவுரைகாரர், “பொன்ஞால மன்றி இம் மண்ஞால முழுதும் ஆண்டாரென்பது தோன்ற, மண்கெழு ஞாலமென்ற இச் சிறப்பானே இதற்கு மண்கெழுஞால மென்று பெயராயிற்” றென்பர். இதுகாறும் கூறியது ; கொடி நுடங்க, முரசம் உரற, வாள்வீரர் முதல் மறவர் உள்ளிட்ட தானையொடு சென்ற பகைவர் பிணம் பிறங்க நூறி, அவர்நாட்டுக் கெடுகுடி பயிற்றிய வேந்தே, இலங்குகதிர்த் திகிரி செலுத்திய நின் முந்திசினோர், நின்போல் அசைவில் கொள்கைய ராதலின், இம் மண்கெழு ஞாலம் அசையாது ஆண்டார்கள் எனக் கூட்டி வினைமுடிபு செய்க. இனிப் பழையவுரைகாரர், “கொற்ற வேந்தே, இலங்கு கதிர்த் திகிரியினையுடைய நின் முன்னோர், நிச்சயமாக நின்னைப்போல் அசைவில்லாத மேற்கோளையுடையராகையாலே, இம்மண் ஞாலத்தினை நிலம் பயம் பொழிதல் முதலாக நால்வேறு நனந்தலை ஓராங்கு நந்த என்பது ஈறாக எண்ணப்பட்ட நின் புகழெல்லாம் உளவாக அசைவின்றி ஆண்டோராவார் ; அவரல்லர் இம்மண்ஞாலத்தின் ஒரோ விடங்களை ஆளுவதல்லது முழுதும் ஆளுதல் கூடாதன்றே யெனக் கூட்டி வினை முடிவு செய்க” என்பர். “ஆண்டோ ரசையாது என்பது பாடமாக்கி அதற்கேற்ப உரைப்பாரும் உளர். இதனாற் சொல்லியது அவன் ஆள்வினைச்சிறப்பினை அவன் குடிவரலாற்றொடு படுத்துச் சொல்லியவாறாயிற்று”. “எறிந்து சிதைந்த என்பது முதலாக மறவரொடு என்பது ஈறாக நான்கடி வஞ்சியடியாய் வந்தமையான், வஞ்சித்தூக்குமாயிற்று. அவற்றுள் முன்னின்ற மூன்றடிகளின் ஈற்றுச்சீர்கள் அசைச்சீர்களாகவும், மற்றையடியின் ஈற்றுச்சீர் பொதுச்சீராகவும் இட்டுக் கொள்க. நின்போல் என்றது கூன்”. 10. பறைக்குர லருவி |