8. உருத்துவரு மலிர்நிறை
 

28.திருவுடைத் தம்ம பெருவிறற் பகைவர்
பைங்கண் யானைப் புணர்நிறை துமிய
உரந்துரந் தெறிந்த கறையடிக் கழற்காற்
கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப
 
5இளையினிது தந்து விளைவுமுட் டுறாது
புலம்பா வுறையு ணீதொழி லாற்றலின்
விடுநிலக் கரம்பை விடரளை நிறையக்
கோடை நீடக் குன்றம் புல்லென
அருவி யற்ற பெருவிறற் காலையும்
 
10நிவந்துகரை யிழிதரு நனந்தலைப் பேரியாற்றுச்
சீருடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயர்
உவலை சூடி யுருத்துவரு மலிர்நிறைச்
செந்நீர்ப் பூச லல்லது
வெம்மை யரிதுநின் னகன்றலை நாடே.
 

துறை : நாடு வாழ்த்து.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர் : உருத்துவருமலிர்நிறை. 

உரை : கோடை  நீட  -  வேனிற்காலம்  நீட்டித்தலால்;  குன்றம்
புல்லென  -  குன்றுகள்  பொலிவழிந்து தோன்ற; அருவி அற்ற பெரு
வறற்   காலையும்   -   அருவிகள்   நீர்   வற்றி  யுலர்ந்த  பெரிய
வறட்சிக்காலத்தும்;  கரை நிவந்து இழி தரு நனந்தலைப் பேரியாற்று -
கரை   யளவும்   உயர்ந்து   நீர்   பெருகி   வழிந்திழியும்  அகன்ற
இடத்தையுடைய     பேரியாறு    பாயும்;    சீருடை    வியன்புலம்
சிறப்புப்பொருந்திய  அகன்ற  புலத்தில்; விடு நிலக்கரம்பை விடரளை
நிறைய  -  விலங்கினங்கள் புல் மேய்தல் வேண்டி விடப்பட்ட கரம்பு
நிலத்தில் உண்டாகிய வெடிப்புக்களில் நீர் நிறைந்து தேங்குமாறு; வாய்
பரந்து  மிகீஇயர்  -  இடந்தொறும் பரந்து மிகுதல் வேண்டி; உவலை
சூடி  - தழைகளைச் சுமந்து; உருத்து வரும் மலிர் நிறை - சினமுற்று
வருவதுபோல   ஓலிட்டு   மிக்குவரும்   பேரியாற்று  வெள்ளத்தின்;
செந்நீர்ப்  பூசல்  அல்லது  -  சிவந்த  நீரின் ஆரவார மல்லது; நின்
அகன்றலை  நாடு வெம்மை அரிது - நினது அகன்ற இடத்தையுடைய
நாட்டிடத்தே  வேறே  உயிர்கட்குக்  கொடுமை செய்யும் போர்ப்பூசல்
என்பது  இல்லை;  (இதற்குக்  காரணந்தான்  யாதோ வெனின்) பெரு
விறல் பகைவர் - மிக்க வலி படைத்த