முளர்” என்றார். கலிங்க ` மெனவே, அது நூலானியறல் பெறப்படுதலாலும், நூற்றல் வினை, நூற்கே யுரிய தாகையாலும் சினைவினை ஒற்றுமைபற்றி முதன்மே னிற்றல் மரபாதலாலும் பழையவுரைகாரர் கூறுவது சிறப்புடைத்தாத லறிக. ஒக்கலர் பொதுவாக வூணும் உடையும் கொண்டு இன்புற்றாராக, அவருள் மகளிர் அவற்றின்மேலும் ஒளி விளங்கும். இழைகளைப் பெற்றுச் சிறந்தன ரென்பார், “மகளிர் வயங்கிழை யணிய” என்றும், அவற்றைப் பெறற்கமைந்த அவருடைய உருநலத்தை “வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றோ” ளென்றும், கற்புநலத்தை, “வசையில் மகளிர்” என்றும் கூறினார். மாண்புடைய மகளிர்க்கு ஆடையும் அணியும் இன்றியமையாதன வாதலின், “வயங்கிழை யணிய” எனப் பிரித்தோதினார். நின்மறம் வீங்கு பல்புகழ் கேட்டோருள் பகைவர்க்குப் பனிப்பும் நட்டோர்க்குக் களிப்பும் பயக்கும் பான்மைத்தாக, நின் பெருங்கலி மகிழ்வு, எத்திறத்தோர்க்கும் இன்பம் பயப்பதென்பார், “நுகர்தற் கினிதுநின் பெருங்கலி மகிழ்வே” யென்றார். உண்ண உணவும் உடுக்க வுடையும் குறைவறப் பெறுதலின், “அமர்பு நுகர்தற்கினிது” என்றார். செல்வுழிச் செல்லும் மெய்ந்நிழல் போல, அரசன் மெய்யினைச் சூழ் வருதலின், “மெய்யார்த்த சுற்றமொடு” என்றார். சுற்றம், அமைச்சர், தானைத்தலைவர் முதலாயினார். அவர் வழிநின்று அரசு புரிதலின், ஒடு, உயர்பின் வழித்தாய ஒருவினையொடு. வேந்தே (3), நின் மறம் வீங்கு பல்புகழ் (8) கேட்டற் கினிது (9); பெருங்கலி மகிழ்வு நுகர்தற் கினிது (25) என வினைமுடிவு செய்க. புகழையும் செல்வத்தையும் பிரித்து நிறுத்தி, இனி தென்பதனைத் தனித்தனிக் கூட்டி முடிக்கும் கருத்தினராதலின், பழையவுரைகாரர், “வேந்தே நின் செல்வம் புகழ் கேட்டற் கினிது; நின் பெருங்கலி மகிழ்வு நுகர்தற் கினிதென வினைமுடிவு செய்க” வென்றார். “இதனாற் சொல்லியது: அவன் வென்றிச் சிறப்பும் அவனது ஓலக்க வினோதச் சிறப்பும் உடன் கூறியவா றாயிற்று” என்பது பழையவுரை. நின் மறம்வீங்கு பல்புகழ் என்றது வென்றிச் சிறப்பு; பெருங்கலி மகிழ்வு ஓலக்க வினோதச்சிறப்பு என அறிக. 3. பூத்த நெய்தல் |