வெனவும் நிகழ்ந்து வாழுந ரெனவும் அறுத்து நிகழ்தலை வாழ் வார்மேலேற்றி நிகழ்ந்து வாழ்தலென்றுமாம் ; ஆண்டு நிகழ்தல் விளக்கம்” என்றும் பழைய வுரைகாரர் கூறுவர். வீரர் சூறையாட்டால் வாழ்வோர் பலர் கெடுதற்கும் வேம்பினை முதலொடு தடிதற்கும் ஏதுக் கூறுவார், “பெருஞ்சினக் குட்டுவன்” என்று சிறப்பித்தார். குழூஉநிலை யதிர மண்டி, குருதி யொழுகப் பிணம் பிறங்கப் பாழ் பல செய்து, முரசம் நடுவண் சிலைப்ப வளனற, வாழுநர் பலர்பட விறல் வேம்பறுத்த குட்டுவனைக் கண்டனம் வரற்கு என இயைத்துக் கொள்க. கண்டனம் : முற்றெச்சம். 1 - 3. யாமும் ...............உணீஇயர். உரை : துயலும் கோதை - அசைகின்ற கூந்தலையும், துளங்கியல்- அஞ்சுகின்ற இயல்பையு முடைய ; விறலியர் - விறலியர்களே ; யாமும் சேறுகம் - யாங்களும் செல்கின்றோம் ; நீயிரும் வம்மின் - நீவிரும் வருக ; கொளைவல் வாழ்க்கை - பாடல் வன்மையால் வாழும் வாழ்க்கையினையுடைய ; நும் கிளை - நும்முடைய சுற்றத்தவர் ; இனிது உணீஇயர் - உடுப்பனவும் அணிவனவும் பெறுவதேயன்றி உண்பனவும் மிகுதியாய்ப் பெற்று உண்பார்களாக எ - று. கை செய்து பின்னி நாலவிட்டமை தோன்ற, “துயலும் கோதை” யென்றும், பெண்மைக்குரிய அச்சத்தால் உளம் துளங்குவது மெய்ப்பட்டுத் தோன்றுவது கண்டு, கூறலின், “துளங்கியல் விறலியர்” என்றும் கூறினார். விறலியர் : அண்மை விளி. பெருவளம் பெறற்கண் சிறிதும் ஐயமின்மை தோன்ற, “யாமும் சேறுகம் நீயிரும் வம்மின்” என்றார். கொளை, பாட்டு. பாடிப்பெற்ற பரிசில் கொண்டு வாழ்தல் பற்றி, “கொளைவல் வாழ்க்கை” யென்றும், உடை, அணி முதலியவற்றினும் உணவு தலைமை யுடைத்தாதல் பற்றி, “இனிது உணீஇயர்” என்றும் கூறினான். இதுகாறும் கூறியது, குட்டுவற் கண்டனம் வரற்கு யாமும் சேறுகம், நும் கிளை இனிது உணீஇயர், விறலியர், நீயிரும் வம்மின் எனக் கூட்டி முடிவு செய்க. இதனால் அச் செங்குட்டுவனுடைய வரையா ஈகை கூறியவாறாயிற்று. 10.வெருவரு புனற்றார் |