நிலவுதற்பொருட்டுச் சேரலாதனை எதிர்ப்பவர் என்பது பெற்றாம். வேந்தரது செயல் அவர்க்குரிய குடைமேலேற்றிக் கூறப்பட்டதாம். காதலிபால் கொள்ளாத உருத்த நோக்கத்தை எயில் கொள்ளுமிடத்து ஒழியாது மேற்கோடல் பற்றி, ஈண்டு வருவித்துக்கொள்ளப்பட்டது. மகளிர் கையகத்திருந்த சிறு செங்குவளையை மிக நயந்து அது குறித்து ஈயென விரைந்து கேட்டு மறுக்கப்பட்ட வழியும் சினஞ் சிறிதுமின்றி வன்மையின்றி மெலிந்து நின்ற நீ ஞாயிறுபோலும் தெறலும் வெம்மையுமுடைய வேந்தர் காக்கும் மதிலை எளிதிற் கொள்ளும் வலியுடையோனாய் இருத்தலின், ஆங்கு மனையகத்தே காணப்படாத வன்மை, ஈங்குத் தானே வெளியாதற்கு ஏது வொன்றும் தெரிந்தில தென்பார், “பாஅல் யாங்கு வல்லுநையோ” என்றார். இதனால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தன்பால் அன்புடையார் பால் கொள்ளும் எளிமையும் மென்மையும் எடுத்தோதி, அவன் பகைவரை யடர்த்துப் பலர் உயர்நிலை யுலகமெய்த அவரது எயிலைக்கொள்ளும் வன்மையைச் சிறப்பித்தோதி வாழ்த்தக் கருதுகின்றா ராதலால், “வாழ்க நின் கண்ணி” யென்றார். இதுகாறும் கூறியது, “நல்லமர்க் கடந்தநின் தடக்கை. இரப்போர்க்குக் கவித லல்லதை இரைஇய மலர் பறியாவெனக் கேட்டிகும்; இனி, துணங்கைக்குத் தலைக்கை தந்து நீ நளிந்தனை வருதல் உடன்றனளாகி, நின்னரிவை நின் எறியர் ஓக்கிய சிறுசெங் குவளையானது, நீ ஈ யென்று இழிந்தோன் கூற்றான் இரப்பவும் நினக்கு ஈந்து போகாது நின் இரப்பிற்கு ஒல்லாளாய், நீ எமக்கு யாரென்று பெயர்வோள் கையதாயிருந்தது; அவ்வாறு நீ இரந்து பெறாது அவளை உருத்த நோக்கமொடு அதை அவள்பால் நின்றும் பகுத்துக்கொள்ளமாட்டாயாயினை; அவ்வாறு அது பகுக்கமாட்டாத நீ வேந்தர்கள் எயிலைப் பகுத்துக்கோடல் யாங்கு வல்லையாயினாய்; நின் கண்ணி வாழ்க என மாறி வினைமுடிவு செய்க. பாஅல் யாங்கு வல்லுநையோ என்றதன் முன் எயில் என்பது கூட்ட வேண்டுதலின் மாறாயிற்று” என்றும், “இதனாற் சொல்லியது, அவன் கைவண்மையொடும் வென்றி யொடும் படுத்து அவன் காமவின்பச் சிறப்புக் கூறியவாறாயிற்று” என்றும், “இப் பாட்டு, துணங்கையாடுதல் காரணமாகப் பிறந்த வூடற் பொருட்டாகையால் குரவைநிலை யென்றவாறாயிற்று” என்றும் பழையவுரை கூறும். 3. குண்டுகண் ணகழி |