சிறப்பானும் இதற்கு வெண்டலைச் செம்புனலெனப் பெயராயிற்” றென்பர். “செம்புனலென்றது, செம்புனலையுடைய யாற்றினை” யென்பது பழைய வுரை. முன்னிய வென்ற பெயரெச்சம் புனலொடு முடிந்தது. வேழப்புணை யாற்றுநீரைக் கடத்தற்குத் துணையாவதல்லது கடந்த பின்னும் துணையாவதில்லை ; பொறையன் நினது இவ்வறுமைத் துன்பத்தைக் கடத்தற்குத் துணையாம் பெருவளம் நல்குவதே யன்றி, அத் துன்பமின்றி இனிதிருக்குங் காலத்தும் வழங்கியருள்வ னென்பார், “கரும்பினும் அளித்தல் வல்லன்” என்றார். சீரிய துணையன்மைக்கு வேழப்புணையின் தொடர்பு உவமமாகச் சான்றோரால் கூறப்படுவது பற்றி, உறழ்ந்து, கூறினா ரென்க. “நட்பே, கொழுங்கோல் வேழத்துப் புணை துணையாகப், புனலாடு கேண்மை யனைத்தே” (அகம். 186) என்று ஆசிரியர் பரணர் கூறுதல் காண்க. “ஒய்யும் நீர்வழிக் கரும்பினும்” என்பதை, “நீர்வழி ஒய்யும் கரும்பினும்” என மாறி இயைக்க. பழைய வுரைகாரர், “நீர்வழி ஒய்யும் கரும்பெனக் கூட்டி நீரிடத்துச் செலுத்தும் கரும்பென்க” என்றும், “கரும்பென்றது கருப்பந் தெப்பத்தினை” யென்றும் கூறுவர். இதுகாறுங் கூறியவாற்றால்,பாடினி, பல்வேற் பொறையன் அளித்தல் வல்லனாதலின், நீ அவன்பாற் சென்மோ, நன்கலம் பெறுகுவை என்பதாம். இனிப் பழைய வுரைகாரர், “பல்வேற் பொறையன் வெண்டலைச் செம்புனலை யுடைய யாற்றிற் செலுத்தும் கருப்பம் புணையிலும் அளித்தல் வல்லன் ; ஆதலால் அவன்பாலே பாடினி, செல் ; செல்லின் நன்கலம் பெறுகுவை எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “இதனாற் சொல்லியது அவன் அருட்சிறப்புக் கூறியவா றாயிற்று” என்றும் கூறுவர். 8. கல்கால் கவணை |