எவ்வயின் உலகத்துந் தோன்றி அவ்வயின்  
             மன்பது மறுக்கத் துன்பங் களைவோன்  
             அன்பது மேஎ இருங்குன் றத்தான்  
             கள்ளணி பசுந்துளவினவை கருங்குன் றனையவை  
          55 ஒள்ளொளியவை ஒருகுழையவை  
             புள்ளணி பொலங்கொடியவை  
             வள்ளணி வளைநாஞ்சிலவை  
             சலம்புரி தண்டேந்தினவை  
             வலம்புரி வயநேமியவை  
          60 வரிசிலை வயவம்பினவை  
             புகரிணர்சூழ் வட்டத்தவை புகர்வாளவை  
             எனவாங்கு  
             நலம்புரீஇ அஞ்சீர் நாம வாய்மொழி  
             இதுவென உரைத்தனெம் உள்ளமர்ந் திசைத்திறை  
          65 இருங்குன்றத் தடியுறை இயைகெனப்  
             பெரும்பெயர் இருவரைப் பரவுதும் தொழுதே.  
           
         
       
      
        கடவுள் வாழ்த்து  
         
        இளம்பெருவழுதியார் பாட்டு; மருத்துவன் நல்லச்சுதனார் இசை;  
        பண்ணோதிறம்  
         
        உரை  
      
       
       1 - 7: புலவரை . . . . . . . . குன்றவை சிலவே  
       
       
      (இ-ள்.) புலவரை அறியாப் புகழொடு பொலிந்து - அறிவினது  
      எல்லையாலே அறியப்படாத புகழுடனே விளங்கி, நிலவரை தாங்கிய  
      நிலைமையில் பெயரா - நிலத்தினது எல்லையைத் தாங்காநின்ற நிலைமை 
      யினின்று நீங்காத, தொலையா நேமி முதல் - கெடாத சக்கரவாளம்  
      முதலாக, தொல் இசை அமையும் புலவர் ஆய்பு உரைத்த - பழைதாகிய  
      புகழமைந்த நல்லிசைப் புலவர் ஆராய்ந்து கூறிய, புனை நெடுங் குன்றம் 
      பல -கொண்டாடப்பட்ட நெடிய மலைகள் சிறப்புவகையானன்றிப்  
      பொதுவகையாற் கூறுமிடத்துப் பல உள்ளன என்று கூறப்படும், அவை 
      பலவே எனின் - அவர் கூறுமாற்றால் அம் மலைகள் பற்பல உள எனல் 
      வாய்மையே என்றாலும், பலவினும் - அம்மலைகள் பலவற்றினும்,  
      நிலவரை   |