இச் செய்யுட் கருத்தினைப் பிற்காலப் புலவர்கள் தத்தம் நூலில்  
      எடுத்தமைத்துள்ளார்கள்.  
       
         "கோதி லாதசெஞ் சூட்டுடை வாரணம் கூவ  
          ஓத ஞாலத்து மற்றைய தலத்துளார் விழிப்பார்  
          ஈத லேற்றலோ டறுதொழி லிருபிறப் பாளர்  
          வேத நாதத்தின் விழிப்பதவ் வியனகர் மாக்கள்"  
          (ஆப்பனூர் - 9) 
         
       
      என்பது திருவாப்பனூர்ப் புராணம்.  
       
            சோழன் தலைநகரமாகிய உறையூர்க்குக் 'கோழி' என்ற 
      பெயர் 
      வந்தமைக்குச் சிலப்பதிகாரத்தே நாடுகாண் காதையில்,  
       
         
          "முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய  
          புறஞ்சிறை வாரணம் புக்கனர்"  
           (247-8)  
         
       
       
      எனவரும் இளங்கோவடிகளார் கூற்றும், அவ் வடிகளின் விளக்கமாக  
      அரும்பத வுரையாசிரியரும் அடியார்க்குநல்லாரும் உரைப்பனவும்  
      உணர்க.  
       
            "யானையைக் கோழி முருக்கலால் கோழி என்று பெயராயிற்று; 
       
      யானையைச் சயித்த கோழி தோன்றினவிடம் வலியுடைத்தென்று கருதி 
      அவ்விடத்து அதன் பெயராலே சோழன் ஊர்காண்கின்ற பொழுது  
      சிறையும் கழுத்துமாக ஆக்கியவதனால் புறம்பே சிறையையுடைய கோழி 
      என்றாயிற்று."  
       - அரும்பதவுரை யாசிரியர்.  
       
       
            "வாரணம் - கோழி; ஆவது உறையூர். முற்காலத்து ஒரு 
      கோழி  
      யானையைப் போர் தொலைத்தலான் அந் நிலத்திற் செய்த நகர்க்குக்  
      கோழி என்பது பெயராயிற்று." 
      - அடியார்க்கு நல்லார்.  
       
       
       | 
 
  |   
	
				
				 | 
				 
			 
			 |