பக்கம் எண் :

124

தோற்பது உம் குடியே - ஆதலால் நும்முள் ஒருவீர் தோற்பினும்
தோற்பது நுங் குடி யன்றோ; இருவீர் வேறல் இயற்கையு மன்று -
இருவீரும் வெல்லுதல் இயல்புமன்று; அதனால் - ஆதலால்; குடிப்
பொருள் அன்று நும் செய்தி - நும் குடிக்குத்தக்க தொன்றன்று
நுமதுசெய்கை; கொடித் தேர் நும்மோ ரன்ன வேந்தர்க்கு -
கொடியாற் பொலிந்த தேரையுடைய நும்மைப் போலும் வேந்தர்க்கு;
மெய்ம் மலிஉவகை செய்யும் இவ்விகல் - உடம்பு பூரிக்கும்
உவகையைச் செய்யும் இம் மாறுபாடு; ஆதலான் இது தவிர்தலே
நுமக்குத் தக்கது எ-று.

     நின கண்ணியு மென்பது, நின்ன கண்ணியு மென விகாரமாயிற்று.
அதனா லென்பதனை யொழித்தும் பாட மோதுப. இது சந்து செய்தலால்
துணைவஞ்சி யாயிற்று.


     விளக்கம்: சேரர் குடியிற் பிறந்தவ னல்லன் என்பதற்குப் “பனை
வெண்டோடு மலைந்தோ னல்லன்” என்றார். வேம்பின் தாரையுடையவன்
பாண்டியன். வெல்லுதல் வேறல் என வந்தது; செல்லுதல் சேறல் என
வருதல் போல, ஒரு குடிக்குப் பொருளாவது அதன் தகுதியாதலால்,
பொருளன் றென்றதற்குத் தக்க தொன்றன்றென வுரை கூறப்பட்டது.
மெய்ம்மலி யுவமை உடம்பி பூரிப்பதற் கேதுவாகிய உவகை. நும்மோ ரன்ன
வேந்தர் - சேர பாண்டியர்.

46. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

     கிள்ளி வளவன் தன் பகைவனான மலயமான் மக்களைக்
கொணர்ந்து கொலையானைக் காற்கீழிட்டுக் கொல்ல முயறல் கண்ட
கோவூர் கிழார், அதனைத் தவிர்க்க வேண்டி, இப் பாட்டின்கண், “நீயோ
புறாவின் பொருட்டுத் தன்னை வழங்கிய சோழன் மரபிற் பிறந்துள்ளாய்;
இவர்களோ புலவர்கட்குப் பெருங் கொடை நல்கி வாழும் பெரியோர்
மரபினர்; மிக்க இளையர்; இம்மன்றினை யஞ்சி மருண்டு நோக்குகின்றனர்;
யான் கூறுவது கேட்டபின் விரும்புவது செய்க” என்று இயம்புகின்றார்.

நீயோ, புறவி னல்ல லன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே, புலனுழு துண்மார் புன்க ணஞ்சித்
தமதுபகுத் துண்ணுந் தண்ணிழல் வாழ்நர்
5.களிறுகண் டழூஉ மழாஅன் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கணோ வுடையர்
கேட்டனை யாயினீ வேட்டது செய்ம்மே. (46)

     திணையும் துறையு மவை. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய
கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக் கிடுவுழிக் கோவூர்
கிழார் பாடி உய்யக் கொண்டது.