வரிசையறிவது அரிதாயிற்று பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின், அதுநோக்கி வாழ்வார் பலர் (குறள். 528) என்று திருவள்ளுவனாரும் கூறுதல் காண்க.
122. மலையமான் திருமுடிக்காரி
திருமுடிக்காரி தன் வண்மையிற் சலியாதிருத்தலைக் கண்ட கபிலர் பெருவியப்புற்று, திருமுடிக்காரி, நின் நாடு கடலாலும் கொள்ளப்படாது; பகை வேந்தராலும் கைக்கொள்ள நினைக்கப்படாது; ஆயினும் அஃது அந்தணர்க்குக் கொடைப் பொருளாயிற்று. மூவேந்தருள் ஒருவர் தமக்குத் துணையாதலை வேண்டி விடுக்கும் பொருள் இரவலர்க் குரித்தாயிற்று; நின் ஈகைக் ககப்படாது நிற்பது நின் மனைவியின் தோளல்லது பிறிதில்லை; அவ்வாறிருக்க நின்பாற் காணப்படும் பெருமிதத்துக்குக் காரணம் அறியேன் என்று இப் பாட்டிற் குறித்துள்ளார்.
| கடல்கொளப் படாஅ துடலுந ரூக்கார் கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே அழல்புறந் தரூஉ மந்தண ரதுவே வீயாத் திருவின் விறல்கெழு தானை | 5 | மூவரு ளொருவன் றுப்பா கியரென | | ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி வாழ்த்தினர் வரூஉ மிரவல ரதுவே வடமீன் புரையுங் கற்பின் மடமொழி அரிவை தோளள வல்லதை | 10 | நினதென விலைநீ பெருமிதத் தையே. (122) |
திணை: பாடாண்டிணை. துறை : இயன்மொழி. அவனை அவர் பாடியது.
உரை : கடல் கொளப்படாது - கடலாற் கொள்ளப்படாது; உடலுநர் ஊக்கார் - அதனைக் கொள்ளுதற்குப் பகைவர் மேற் கொள்ளார்; கழல் புனை திருந்தடி காரி - வீரக்கழலணிந்த இலக்கணத்தால் திருந்திய நல்ல அடியையுடைய காரி; நின் நாடு - நினது நாடு; அழல் புறந்தரூஉம் அந்தணரது - அது வேள்வித்தீயைப் பாதுகாக்கும் பார்ப்பாருடையது; வீயாத் திருவின் விறல் கெழு தானை- கெடாத செல்வத்தினையும் வென்றி பொருந்திய படையையுமுடைய; மூவருள் ஒருவன் துப்பாகியர் என - மூவேந்தருள் ஒருவனுக்கு வலியாக வேண்டுமென்று; ஏத்தினர் தரூஉம் கூழ் - அம் மூவர்பானின்றும் வந்தோர் தனித்தனி புகழ்ந்து நினக்குத் தரும் பொருள்; நும் குடி வாழ்த்தினர் வரூஉம் இரவலரது - நுமது குடியை வாழ்த்தினராய் வரும் பரிசிலருடையது; வடமீன் புரையும் கற்பின் - ஆதலால் வட திசைக்கண் தோன்றும் அருந்ததியையொக்கும் கற்பினையும்; |