| திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.
உரை : விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய் - விளங்கிய மணிகளான் இயன்ற வளைந்த பூணாகிய ஆரத்தையுடைய ஆயே; நின்நாட்டு இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனுமோ - நினது நாட்டின்கண் இளைய பிடி ஒரு கருப்பம் பத்துக்கன்று பெறுமோ தான்; நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு - நின்னையும் நின் மலையையும் பாடிவரும் பரிசிலர்க்கு; இன்முகம் கரவாது - இனிய முகத்தை யொளியாது வெளிப்படுத்தி; உவந்து - காதலித்து; நீ அளித்த அண்ணல் யானை எண்ணின் - நீ கொடுத்த தலைமையை யுடைத்தாகிய யானையை யெண்ணின்; கொங்கர்க் குட கடல் ஓட்டிய ஞான்றை - நீ கொங்கரை மேல்கடற் கண்ணே ஓட்டப்பட்ட நாளில்; தலைப்பெயர்த் திட்ட வேலினும் பல - அவர் புறங்கொடுத்தலால் தம்மிடத்தினின்றும் பெயர்த்துப் போகப்பட்ட வேலினும் பல எ-று.
தலைப்பெயர்த் திட்ட வேலென்ற கருத்து, படைக்கல மில்லாதாரை ஏதஞ்செய்வா ரில்லையாதலின், தம்முயிர்க்கு அரணாகப் பெயர்த்திடப் பட்ட வேலென்பதாம்; அன்றிப்புறக்கொடுத்தோடுகின்றார் முன்னோக்கிச் சாய்த்துப் பிடித்த வேல் என்பாரு முளர். இதனால் வென்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும் கூறியவாறு.
விளக்கம் : யானை ஒரு சூலுக்கு ஒரு கன்றுதான் ஈனுமேயன்றிப் பல கன்றுகளை யீனாது; யானைகளின் தொகை மிகுதி கண்டு வியந்து கூறுதலின் இவ்வாறு கூறினார். ஆய் கோயிலின் வெளியில் முழுதும் யானைகள் மிகுதியாகத் தொகுக்கப்பட்டிருக்கும் என்பதைச் சான்றோர், இரவலர் வரூஉ மளவை அண்டிரன், புரவெதிர்ந்து தொகுத்த யானை (நற். 237) என்பது காண்க. இரவலர்க்குக் கொடுக்கும் திறத்தை இன்முகம் கரவாது உவந்துநீ யளித்த என்றும் கொடுக்கப்பட்ட யானைகளின் இயல்பை, அண்ணல் யானை யென்றும் குறித்துள்ளார். யானைக் கொடை வாயிலாக அண்டிரன் கொங்கரை வென்ற திறத்தையும் குறிக்கக் கருதலின், கொங்கர்க் குடகடலோட்டிய ஞான்றைத் தலைப்பெயர்த்திட்ட வேல் என்றார்.
131. வேள் ஆய் அண்டிரன்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், ஆய் குடியின் நீங்கிக் காட்டு நாட்டிற் புகுந்து அதன் இயற்கைவளம் காணச் சென்றார். காடுகளில் எங்கும் யானைகளின் நிரை மிகுதியாக மேய்வதை அவர் நேரிற் கண்டார். மோசியார், யானைமிக்க காட்டு நாட்டவரல்லராதலின், அவர்க்கு வியப்பு மிகுதியாயிற்று. யானைகளின் மிகுதி அவர் நெஞ்சில் ஆய் அண்டிரனது யானைக்கொடை பற்றிய நினைவு எழுந்தது. அங்கிருந்தோரை நோக்கி, இக்காடுகள் ஆய் அண்டிரனுடைய குன்றங்களைப் பாடினவோ? அவனையும் அவன் குன்றத்தையும் பாடும் பரிசிலர்களைப் போல மிக்க யானைகளை இவையும் உடையவா யிருக்கின்றனவே! என்ற கருத்துப்பட இப்பாட்டைப் பாடியுள்ளார்.
|