உடனே யாங்கள் அவரைத் தொழுது நீவிர் எம் தலைவனாகிய பேகனுக்குக் கிளைமை யுடையீரோ வென வினவினேம்; அவர் தம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, யாம் அவன் கிளைஞரல்லேம்; எம்போல்வாள் ஒருத்தியின் நலத்தை விழைந்து நாடோறும் அவளுறையும் நல்லூர்க்குத் தேரேறி வந்து போகின்றா னெனப் பலரும் கூறாநிற்பர் என்று உரைத்தார். ஆதலால், அவரை, நீ அருளாயாதல் கொடிதுகாண் என்ற பொருளமையப் பாடியுள்ளார்.
| அருளா யாகலோ கொடிதே யிருள்வரச் சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின் காரெதிர் கானம் பாடினே மாக நீனறு நெய்தலிற் பொலிந்த வுண்கண் | 5 | கலுழ்ந்துவா ரரிப்பனிபூணக நனைப்ப | | இனைத லானா ளாக இளையோய் கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென யாந்தற் றொழுதலும் வினவக் காந்தள் முகைபுரை விரலிற் கண்ணீர் துடையா | 10 | யாமவன் கிளைஞரே மல்லேங் கேளினி | | எம்போ லொருத்தி நலனயந் தென்றும் வரூஉ மென்ப வயங்குபுகழ்ப் பேகன் ஒல்லென வொலிக்குந் தேரொடு முல்லை வேலி நல்லூ ரானே. (144) |
திணையுந் துறையும் அவை. அவனை யவள் காரணமாகப் பரணர் பாடியது.
உரை : அருளா யாகல் கொடிது - அருள் பண்ணாயாதல் கொடிது; இருள் வர - மாலைக் காலம் வந்த அளவிலே; சீறியாழ் செவ்வழி பண்ணி - சிறிய யாழை இரங்கற் பண்ணாகிய செவ்வழி யென்னும் பண்ணிலே வாசிக்கும் பரிசு பண்ணி; நின் காரெதிர் கானம் பாடினேமாக - நினது மழையை யேற்றுக் கொண்ட காட்டைப் பாடினேமாக; நீல்நறு நெய்தலிற் பொலிந்த உன்கண் - நீல நறுநெய்தல்போன்று பொலிந்த மையுண்ட கண்கள்; கலுழ்ந்து வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப - கலங்கி வீழ்ந்த இடைவிட்ட துளிகள் பூணையுடைய மார்பை நனைப்ப; இனைதல் ஆனாளாக - வருந்துதல் அமையா ளாக; இளையோய் கிளையை மன் எம் கேள் வெய்யோற்கு என - இளையோய், கிளைமையையுடையையோ எம்முடைய கேண்மையை விரும்புவோனுக்கென; யாம் தன் தொழுதனம் வினவ - யாங்கள் தன்னை வணங்கிக் கேட்டேமாக; காந்தள் புரை விரலின் கண்ணீர் துடையா - அவள் காந்தள் மொட்டுப்போலும் விரலாலே தன் கண்ணீரைத் துடைத்து; யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் - நாங்கள் அவனுடைய கிளைஞரேமல்லேம்; |