| நிலந்தரு திருவிற் பாண்டியன் கடல்கோட் காலத்துக் குமரிக்கு வடக்கிலுள்ள தமிழகத்துக் குடியேறிய பரதவர்க்குத் தலைமை தாங்கிப் போந்து அந்நிலத்தை வென்று தந்தவன் அவனுக்குப் பின்பல வேந்தர் தோன்றிப் பாண்டி நாட்டைச் செம்மைப்படுத்தி மதுரையைத் தலைநகராகக் கொண்டனர். இவ்வாறு பாண்டிநாடு செவ்வையுற நிறுவப்பட்டபின்,இப்பாட்டிற் கூறப்பட்ட பாண்டியன் உளனாதலின் இவனை நிலந்தரு திருவிற் பாண்டிய னெனக் கோடல் பொருந்தாது.
நாலை கிழவனான நாகனைக் காணப்போந்த வடநெடுந்தத்தனார் என்னும் சான்றோர், தமக்கு இந்த நாகனைப்பற்றிப் பலரும் கூறிய செய்தியை இப்பாட்டின்கண் வைத்துப் பாடி, இவன் தந்த சிறந்த பரிசினைப் பெற்று இன்புற்றார். இதன்கண், இவ்வுலகில் பாரி முதலிய வள்ளல்கள் இறந்தொழிந்தனர்; இரப்போர் குறிப்பறிந் தீயும் வேந்தரும் இலராயினர்; இந்நிலையில் வறுமையுற் றிரக்கும் என் மண்டையை ஈத்து மலர்ப்பவர் யாவருளர் எனப் பரிசிலரைக் கேட்க, அவர் பலரும் பாண்டியன் மறவனான நாலை கிழான் நாகன் உளன்; அவன் படை வேண்டும்வழி வாளுதவியும், வினை யாராய்ச்சி வேண்டும்வழி அறிவுதவியும் வேந்தனுக்குத் துணைபுரிவன். தோலாத நல்ல புகழையுடையவன்; அவன்பாற் செல்க என்றனர்; அதனால் யான் அவன்பாற் சென்ற பரிசில் பெறுவேனாயினேன் என்ற கருத்தமைத்துள்ளார். வடநாட்டினின்றும் தென்னாட்டிற் குடிபுகுந்த பழங்குடியிற் றோன்றியதுபற்றி, நெடுந்தத்தனார், வடநெடுந்தத்தனார் என்று கூறப்படுகின்றார்.
| ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென ஏலாது கவிழ்ந்தவென் னிரவன் மண்டை மலர்ப்போர் யாரென வினவலின் மலைந்தோர் விசிபிணி முரசமொடு மண்பல தந்த | 5 | திருவீழ் நுண்பூட் பாண்டியன் மறவன் | | படைவேண்டுவழி வாளுதவியும் வினைவேண்டுவழி யறிவுதவியும் வேண்டுப வேண்டுப வேந்தன் றேஎத் தசைநுகம் படாஅ வாண்டகை யுள்ளத்துத் | 10 | தோலா நல்லிசை நாலை கிழவன் | | பருந்துபசி தீர்க்கும் நற்போர்த் திருந்துவே னாகற் கூறினார் பலரே. (179) |
திணையுந் துறையு மவை. நாலை கிழவன் நாகனை வடநெடுந்தத்தனார் பாடியது.
உரை: ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென - உலகத்தின் மேல் வண்மையுடையோர் இறந்தாராக; ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை - பிறர்பால் ஏலாது கவிழ்ந்த எனது இரத்தலையுடைய மண்டையை; மலர்ப்போர் யார் என வினவலின் - ஏற்கும் பரிசு இட்டுமலர்த்த வல்லார் யார் என்று கேட்டலின்; |