| 181. வல்லார் கிழான் பண்ணன்
வல்லார் என்பது ஓரூர். இவ்வூர்க்குத் தலைவன் பண்ணன். சிறுகுடி கிழான் பண்ணன்போல இவனும் கைவண்மையும் போர்வண்மையுமுடையவன்.சிறுகுடி சோழநாட்டு மென்புலத்து ஊராக, இவ்வல்லார் காட்டு நாட்டு வன்புலத் தூராகும். இவ்வூரைச் சுற்றி வலிய அரண் உண்டு. அதனைச் சார்ந்து காவற்காடும் உண்டு. இவ்வூர் மன்றில் விளா மரங்கள் நின்று தழைத்துக் காய்த்துக் கனிந்திருக்கும். அம் மன்றினைச் சார்ந்திருக்கும் மனைகளில் முன்றிலில் இவ்விளாவின் கனிகள் உதிரும்; அம் மனைகளின் வாழும் மறத்தியருடைய புதல்வர் விளவின் பழம் உதிருந்தோறும் ஓடிச்சென்றெடுப்பர். அதேகாலத்தில் புறத்தே காவற்காட்டில் வாழும் பிடியானை யீன்ற இளங்கன்று ஓடிவந்து விளவின் உதிர்ந்த கனியை யெடுக்கும் இத்தகைய நலம் சிறந்த ஊராகிய வல்லார் பண்ணனுக் குரியதாகும். இவனைச் சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியா ரென்னும் புலவர் ஒருகால் போந்து இனிய பாட்டுப் பாடிச் சிறப்பிக்க, இவனும் அவர்க்கு வேண்டும் சிறுமையும் விதந்தோதிச் சிறப்புறப் பாடியதுகொண்டு சான்றோர் இவரைச் சிறப்பாகக் கருந்தும்பியார் என அழைப்பாராயினர். அப்பாட்டுக் கிடைத்திலது.
இப்பாட்டின்கண், சிறுகருந்தும்பியார் பாணர்க்குக் கூறும் முறையில் வல்லார் என்னும் ஊரின் அமைதியை யெடுத்தோதி, பாணனே, பண்ணன் வல்லாரென்னும் ஊரின்கண் உள்ளான்; வறுமையால் உண்ணாது வருந்தும் நின் சுற்றம் உண்டு வாழ்தல் வேண்டுவையாயின், வல்லார் கிழானான பண்ணன் பகைப்புலம் நோக்கிச் செல்லுதற்குள்ளே உன் பசிக்குப் பகையாகிய பரிசில் பெறுதற்கு இப்போதே செல்வாயாகஎன்று கூறுமாற்றால் போரெனிற் புகலும் பண்ணனது ஆண்மையினை விதந்தோதுகின்றார்.
இனி, இத் தொகை நூற்கண்ணுள்ள ஊர்நனி யிறந்த பார்முதிர் பறந்தலை(புறம்.265) என்று தொடங்கும் கையறுநிலைப் பாட்டு இப்பண்ணன் கரந்தைப் போரிற்பட்டு நடுகல்லில் நின்ற நிலையைக் குறிக்கின்றது. அதனைப் பின்னர்க் காணலம்.
| மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில் கருங்க ணெயிற்றி காதன் மகனொடு கான விரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும் பெருங்குறும் புடுத்த வன்புல விருக்கைப் | 5 | புலாஅ வம்பிற் போரருங் கடிமிளை | | வலாஅ ரோனே வாய்வாட் பண்ணன் உண்ணா வறுங்கடும் புய்தல் வேண்டின் இன்னே சென்மதி நீயே சென்றவன் பகைப்புலம் படரா வளவைநின் | 10 | பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே. (181) |
திணையும் துறையு மவை. வல்லார்கிழான் பண்ணனைச் சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார் பாடியது. |