| முகில்போலும் நிறத்தையுடைய பரிசையைப் பரப்பி; முனை முருங்கத் தலைச் சென்று - முனையிடம் கலங்க மேற்சென்று; அவர் விளை வயல் கவர்பு ஊட்டி-அவரது நெல்விளை கழனியைக் கொள்ளை யூட்டி; மனை மரம் விறகாக - மனையிடத்து மரமே விறகாக; கடி துறை நீர்க் களிறு படீஇ - காவற்பொய்கைகளின் நீரிலே களிற்றைப் படிவித்து; எல்லுப்பட இட்ட சுடு தீ விளக்கம் - விளக்கமுண்டாக இடப்பட்ட நாடு சுடு நெருப்பினது ஒளிதான்;செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற - விடுகின்ற கதிரையுடைய ஞாயிற்றினது செக்கர் நிறம் போலத் தோன்ற; புலம் கெட இறுக்கும் வரம்பில் தானை - இடமில்லையாகச் சென்றுவிடும் எல்லையில்லாத படையினையும்; துணை வேண்டாச் செரு வென்றி - துணைப்படை வேண்டாத போர் வெற்றியினையும்; புலவு வாள் - புலால் நாறும் வாளினையும்; புலர் சாந்தின் - பூசிப் புலர்ந்த சாந்தினையும்; முருகற் சீற்றத்து உருகெழு குருசில் - முருகனது வெகுட்சிபோலும் வெகுட்சியினையுமுடைய உட்குப் பொருந்திய தலைவ; மயங்கு வள்ளை மலர் ஆம்பல் - ஒன்றோடொன்று கலந்த வள்ளையையும் மலர்ந்த ஆம்பலையும்; பனிப் பகன்றை - குளிர்ச்சியை யுடையபகன்றையையும்; கனிப் பாகல் - பழத்தையுடைய பாகலையுமுடைத்தாகிய; கரும் பல்லது காடு அறியா -கரும்பல்லது பிறிது காடறியாத; பெருந் தண் பணை பாழாக- பெரிய மருதம் பாழாக; ஏம நன்னாடு ஒள்ளெரி ஊட்டினை - காவலையுடைய நல்ல நாட்டை ஒள்ளிய தீயை யூட்டி; நாம நல்லமர் செய்ய - அஞ்சத்தக்க நல்ல போரைச் செய்ய; ஓராங்கு மலைந்தன - நின் கருத்திற்கேற்ப ஒரு பெற்றிப் படப் பொருதன; பெரும-; நின் களிறு-நின்னுடைய களிறுகள் எ-று.
தோல் பரப்பி யென்பது முதலாகிய வினையெச்சங்களை இறுக்குமென்னும் பெயரெச்ச வினையொடு முடித்து, அதனைத் தானை யென்னும் பெயரோடுமுடிக்க. பாகற் றண்பணை யென வியையும். எல்லுப்பட இட்ட சுடு தீ யென்றதனைத் தானைக்கு அடையாக்குக. கவர் பூட்டி யென்பதற்கு விரும்பிக் கொள்ளை யூட்டியெனவும், புலங்கெட வென்பதற்கு நாடழியவெனவும், புலவு வா ளென்பதற்குப் புலாலுடைய வாளெனவும் உரைப்பினு மமையும்.
குருசில், பெரும, நீ அமர் செய்ய நின் களிறு ஓராங்கு மலைந்தன வென வினைமுடிவு செய்க.
பாகல் பலாவென் றுரைப்பாரு முளர். ஏம நன்னா டொள்ளெரி யூட்டி, யென்றதனால், இது மழபுலவஞ்சியாயிற்று.
விளக்கம்: கவர்பு - கொள்ளை.கடி துறை - ஊரார் உண்ணுநீர் கொள்ளும் நீர்நிலைகளில் மக்களும் விலங்குகளும் இறங்கிப் படிந்து நீரைக் கெடுக்காவண்ணம் காத்தல் பண்டையோர் மரபாதலால் அவற்றைக் கடி |