பக்கம் எண் :

148

     

     விளக்கம்: தும்பையிற் குதிரை மறமாவது, “எறிபடையானி கலமருள்,
செறிபடைமான் திறங் கிளந்தன்று” (பு.வெ:மா. 7:7) என வரும். மகனால்
தந்தை தாயருடைய புகழ் மேம்படுதலால், “புதல்வன் தந்த செல்வன்”
என்றார். இளஞ்சிறார் குடுமியைப் புல்லுளைக் குடுமியென்பது பெருவழக்கு;
“புல்லுளைக்குடுமிப் புதல்வன்” (புறம். 160) எனவும், “புல்லுளைக் குடுமிப்
புதல்வற் பயந்து” (அகம். 176) என வும் சான்றோர் வழங்குதல் காண்க.
“எல்லார் மாவும்” என்றது, செல்வனூரும் மாவொழிய ஏனை
யெல்லாருடைய மாவும் என்பதுபடநின்றது; “ஆறுபோயினா ரெல்லாங்
கூறைகோட்பட்டார்”என்றாற்போல. ஒருபுடை நின்று பொருத வழி,
மாவைப்படுத்தல் இயலாது என்பது தோன்ற, இருபேர்யாற்றுக் கூடற்
கண் குறுக்கிட்டு நிற்கும் பெருமரம் உவமை கூறப்பட்டதெனவறிக.
பெரும் போரிடை நின்று பொருது வீழ்ந்த மறச்சிறப்புணர்த்தலின்,
இது குதிரை மறமாயிற்று.

---

274. உலோச்சனார்

     இரண்டு பெருவேந்தர் கடல்போன்ற படையுடன் கைகலந்து தும்பை
சூடிப் போருடற்றினர். அப்போரின்கண் மறவனொருவன் இடையிற்
கச்சையால்இறுகிய உடையும், தலையில் மயிற்பீலியால் தொடுக்கப்பட்ட
கண்ணியும்  உரையனாய்  வேலேந்தி  நின்று கடும்போர் புரிந்தான்.
அக்காலை அவன்மேற் பெரிய களிறொன்று அடர்க்க வந்தது. உடனே
அவன்  தன்  கைவேலை  அக்களிற்றின்  நெற்றியிற்  பாய்ந்துருவச்
செலுத்தினான். அக்களிறு வேலுடனே பிறக்கிட்டுச் சென்று வீழ்ந்துபட்டது.
இதற்கிடையே பகைவர் பலர் வேலேந்திப்பரந்து வந்தனர். அவனே, அவர்
செலுத்திய  வேலை  வாங்கி  மடித்து  அவர் தம்  தலைவனையும்
தோளுறப்பற்றி நிலத்தில் மோதி உயிர் நீங்கிய அவனது உடலைக்
கைக்கொண்டு நின்றான். அந்நிலையில் ஒழியாது மேலும் பொர
வருவாரை நோக்கி நின்றமையின், அவனை உலோச்சனார் கண்ணாரக்
கண்டார். அவனது நிலைதான் உயிர் முடியுங்காறும் பொருதொழிவது
துணிபாக உடையன் என்றுணரக் காட்டிற்று. அதனை இப்பாட்டின்கண்
உரைத்துள்ளார்.

 நீலக் கச்சைப் பூவா ராடைப்
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வருங் களிற்றொடு வேறுரந் தினியே
தன்னுந் துரக்குவன் போலு மொன்னலர்
5எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்
 கையின் வாங்கித் தழீஇ
மொய்ம்பி னூக்கி மெய்க்கொண் டனனே.

   திணை: தும்பை; துறை: எருமை மறம். உலோச்சனார் பாடியது.

     உரை: நீலக்கச்சை - நீலநிறமுடைய கச்சையினையும் பூவார் ஆடை
- பூத்தொழில் செய்யப்பட்ட ஆடையினையும்; பீலிக்கண்ணி - மயிற்
பீலியால்