பக்கம் எண் :

170

     

மறவன்  ஒருவன்.  தலைவன்  வீழ்ந்தது  தெரிவிக்குங்கால், “பாசறையில்
உள்ளவர்களே! நம் தலைவன் கையதாகிய வேல் துடி கொட்டுவோன்
கையில் உளது;தோலாகிய கேடயம் பாணன் கையில் உளது;அவன் சூடிய
மாலையும் வாடிவிட்டது; தலைவன் வே ல் மார்பில் ஊடுருவிப்போக, குருதி
சோர நிலம் சேர்ந்தான்; சான்றோர் பலரும் அவனைச் சூழ்ந்து நின்று
அவன் சால்பினைப் பாராட்டினர்; பாராட்டுமிடத்து, தலைவன் தன்னுடைய
நாட்டு மருத நிலத்தூர்களை முன்வந்த இரவலர்க் கீத்தொழிந்தான்,
இறுதிக்கண் வந்த இரவலர் தலைவனுக்கு எஞ்சிநின்ற கரம்பை மிக்க
சீறூரைக் கொடுத்தான் என்றனர்; அது கேட்டுத் தலைமகன் நாணித் தலை
கவிழ்ந்தான்; என்னே அவன் சால்பிருந்தவாறு” என்று தெரிவித்தான்.
இதனை உடனிருந்து சேட்டார் அரிசில்கிழார். தலைவனது தலைமைப்
பண்பறிந்து பாராட்டும் தானை வீரர் சொல் அவர்க்கு மிக்க வுவகையைத்
தந்தது. இப் பாட்டினைப் பாடினார். இதனுள் சில பகுதிகள் கிடைக்க
வில்லை.

 பாசறை யீரே பாசறை யீரே
துடியன் கையது வேலே யடிபுணர்
வாங்கிரு மருப்பிற் றீந்தொடைச் சீறியாழ்ப்
பாணன் கையது தோலே காண்வரக்
5கடுந்தெற்று மூடையின்...
 வாடிய மாலை மலைந்த சென்னியன்
வேந்துதொழி லயரு மருந்தலைச் சுற்றமொடு
நெடுநகர் வந்தென விடுகணை மொசித்த
மூரி வெண்டோள்...
10சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ
 மாறுசெறு நெடுவேன் மார்புளம் போக
நிணம்பொதி கழலொடு நிலஞ்சேர்ந் தனனே
அதுகண்டு, பரந்தோ ரெல்லாம் புகழத் தலைபணிந்
திறைஞ்சி யோனே குருசில் பிணங்குகதிர்
15அலமருங் கழனித் தண்ணடை யொழிய
 இலம்பா டொக்கற் றலைவற்கோர்
கரம்பைச் சீறூர் நல்கின னெனவே.

   திணை: வாகை. துறை: சால்புமுல்லை. அரிசில்கிழார் பாடியது.

     உரை: பாசறையீரே பாசறையீரே - பாசறையில் உள்ளவர்களே
பாசறையில் உள்ளவர்களே; துடியன் கையது வேல் - துடிப்பறை
கொட்டுவேன் கையில் உளதாயிற்று வேல்; அடிபுணர் வாங்கு
இருமருப்பின் - அடிகாறும் புணர்க்கப்பட்ட வளைந்த கரிய
கோட்டினையும்; தீந்தொடை -இனிய இசையை யெழுப்பும் நரம்
பினையுமுடைய; சீறியாழ்ப் பாணன் கையது தோல் - சிறிய
யாழையுடைய பாணன் கையதாயிற்று
கேடயம்;