| அதனை ஏனை மறவர்க்குக் கொடுக்குமிடத்து அவர்க்கேற்பக் களிப்புத்தரும் கலங்கல் நறவம் கலந்து தருவது முறை. அம் முறையிற் சிறிதுபோது தாழ்த்தது பொறாது அதனை விலக்கிப் போர்க்குச் செலவு மேற்கொண்டு வாள்பற்றி நின்றான் என்பது போதர, யாந்தனக்கு உறுமுறை வளாவ விலக்கி, வாய்வாள்பற்றி நின்றனன் என்று சிறுபுல்லாளர் கூற்றினைக் கொண்டு கூறினார். இவ் வண்ணம் கழிசினமுடையான்போல் வாள் பற்றி நின்றதுகொண்டு அவனை எள்ளித் துயருறேன் மின் என்பார், சினவல் ஓம்புமின்என்றும்,சிறுபுல்லாளராகிய நும் சினம் செல்லாது, அவன் சினம் செல்லும் என்பார், வேண்டுவனாயின் ...ஆண்டகை யன்னே யென்றும் கூறினார். பெரும்படை வரினும் அஞ்சாது ஒருவனே கற்சிறை போல் விலங்கி நின்று வென்றி யெய்துவனென்றற்குப் பெரும்படை விலக்கி ஆண்டு நிற்கும் என்றார். ---
293. நொச்சிநியமங்கிழார்
இச் சான்றோர்க்கு நியமம் என்னும் ஊர் உரியதாகும். இப் பெயருடைய ஊர்கள் பல இருத்தலால், நொச்சிவேலி சூழ்ந்து பிறவற்றின் வேறுபடுதலின், இந் நியமம் நொச்சிநியமம் எனப்பட்டது. இஃது இப்போது நொச்சியமென வழங்குகிறது. இது திருச்சிராப்பள்ளியிலிருந்து முசிறிக்குச் செல்லும் வழியில் உத்தமர் கோயிலுக்கு அண்மையில் உளது. இந் நொச்சி நியமங்கிழாருடைய இனிய பாட்டுகள் அகத்திலும், நற்றிணையிலும் உள்ளன. காட்டில் குறமகளிர் வேங்கைப் பூவைப் பறித்தற்கு மாட்டாது புலி புலியென இரைச்சலிடுவதும், இது கேட்கும் குறவர் வில்லேந்தி ஓடிவருவதும், அவர்களைக் கொண்டு இம் மகளிர் தாம் வேண்டும் பூவைப் பெறுவதும் இவர் பாட்டில் அழகுறக்குறிக்கப் படுகின்றன. மனை வாழ்வில் தலைவன் பிரிந்தவிடத்து வேறு பட்டாற்றாத தலைமகட்குத் தோழி, தலைவன் அன்புநிலையை எடுத்தோதி ஆற்றுவிக்கும் திறம் இவரால் மிக்க நயமுறப் பாடப்பெறுகின்றது. களவின்கண் தலைவி அறத்தொடு நிற்கும் விரகும், வேண்டுமிடத்து வழங்கும் முன்னிலைப் புறமொழியும் இலக்கிய இன்பவூற்றாக உள்ளன. நகர்ப்புறத்தே போர் நிகழும் காலத்தே, அரண் சூழ்ந்த நகர்க்குள்ளிருந்த நெடுமனை யொன்றிற்கு இச்சான்றோர் ஒருகால் சென்று அங்கே இருந்து மறக்குடி மகளிரின் செயல் நலங்களைக் காணும்பேறு பெற்றார். தானை வீரரும் தானைத் தலைவரும் வாழும் தெருவழியே வருகையில் பூ விற்கும் மகளிர் அத் தெருவில் இயங்காது வேறு தெருக்களை நோக்கிச் செல்வது கண்டார். ஒரு வீரனது மனைக்குட்சென்று அவன் மனையோளைக் கண்டு சொல்லாடுங்கால் தாம் கண்டஇக் காட்சியைத் தெரிவித்தார். மறக்குடி மகளாகிய அவள்,சான்றீர்! வள்ளுவன் யானைமேலிருந்து தனது தண்ணுமையை ஒலித்து, அரணுக்குப் புறத்தே முற்றி நிற்கும் பகைவரை யெறிதற்குச் செல்லும் வீரர்க்குக் காஞ்சிப்பூ உரியதாதலால், அதனைச் சென்று பெறுமாறு பணிப்பன். அவ்வொலி ஈண்டு மனையிடத்துள்ளார் செவியிற் கேட்குமாறு ஒலிக்கின்றது.போர்ப்பறை கேட்ட அளவிலே புறப்பட்டுச் செல்லற் பாலராகிய வீரருள் நாணமில்லாதார் சிலர் இப்பூக்கோள் குறித்த தண்ணுமையொலி கேட்குமளவும் மனையிடத்தே யிருப்பர். அவேரை விரைய வருமாறு அழைப்பதும் அதன் கருத்தாகும். இத் தண்ணுமை யொலி கேட்டபின் பூவிலைப் பெண்டு, போர் தொடங்கிவிட்டது; இனி ஆடவர் மனைக்கண் இரார்: |