பக்கம் எண் :

214

     

அணில் வால் ஊகம் பூவுக்கு உவமம் கூறப்பட்டது. வால், வாலமென வந்தது.
சுரியல், சுருண்ட தலைமயிர்.

308 கோவூர் கிழார்

     கோவூர்  தொண்டைநாட்டு  ஊர்களுள்  ஒன்று.  இப்போது இது
செங்கற்பட்டு  மாநாட்டில்  உளது.  சோழன்  நலங்கிள்ளி,  சோழன்
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் முதலிய முடிவேந்தர்களைப்
பாடிச் சிறப்புப்பெற்ற இவர், சீறூர் மன்னன் ஒருவனுக்கும் பெருவேந்த
னொருவனுக்கும் நடந்த போரொன்றைக் கண்டார். சீறூர் மன்னன்
கோவூர்கிழார்பால் பேரன்பும் பெருமதிப்பும் உடையனாதலோடு போர்
புரிவதிலும் பேராண்மை பெற்றவன். அவன் பெயர் தெரிந்திலது. அப்போரில்
பெருவேந்தன் குன்றுபோ லுயர்ந்த களிறொன்றின் மேலிருந்து போர் செய்யச்
சீறூராரசன் நிலத்தில் நின்று போரிட்டான். இருவரும் வேற்போர் பொருத
காலையில், சீறூர் மன்னன் தன் வேலைச் சினந் தெறிந்தான்; அது சென்று
களிற்றின் நெற்றியிற் பாய்ந்து ஊடுருவியழுந்திற்று. உடனே அவ் வேந்தன்
தன் வேலைச் சீறூர் மன்னன்மேல் எறிய, அஃது அவன் மார்பிற்பட்டுத்
தைத்தது. அவன் அதனைத் தன் கையிலேந்திப் பெருவேந்தன் யானையை
எறிந்தானாக, அவ் யானைகள் அஞ்சிப் புறங் கொடுத்தோடின. இதனைக்
கண்டு மகிழ்ச்சி மிக்க கோவூர்கிழார் அச் சீறூர் மன்னனுடைய பாணனுக்கு
அவன் மனையோள் கூறம் கூற்றில் வைத்துக் கூறுவாராய் இப் பாட்டினனப்
பாடியுள்ளார்.

 பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
மின்னேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண
சீறூர் மன்னன் சிறியிலை யெஃகம்
5.வேந்தூர் யானை யேந்துமுகத் ததுவே;
 வேந்துடன் றெறிந்த வேலே யென்னை
சாந்தா ரகல முளங்கழிந் தன்றே
உளங்கழி சுடர்ப்படை யேந்திநம் பெருவிறல்
ஓச்சினன் றுரந்த காலை மற்றவன்
10.புன்றலை மடப்பிடி நாணக்
 குஞ்சர மெல்லாம் புறக்கொடுத் தனவே.


     திணை: வாகை. துறை: முதின்முல்லை. கோவூர்கிழார் பாடியது.

     உரை: பொன் வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின் - பொற் கம்பியினை
யொத்த   முறுக்கட்ஙகின்   நரம்பினையும்;   மின்   நேர்   பச்சை -
மின்னலைப்போலும் தோலினையும்; மிஞிற்றுக் குரல் - வண்டிசைபோலும்
இசையினையுமுடைய; சீறி யாழ் நன்மை நிறைந்த நயவரு பாண - சிறிய
யாழை இசைக்கும் புலமை நிறைந்த கேட்டார் நெஞ்சில் விருப்பம்
எழுவிக்கும்