பக்கம் எண் :

252

     

கொள்வாராயினரென வறிக. ஒக்கல் ஒற்கம் களைவது இல்வாழ்வானுக்கு
இன்றியமையாக் கடனாதலால், “ஒக்கல் ஒற்கம் சொலிய” என்றார். சிறு
புல்லாளர், தமது உடைமை சிறிதாயினும் பெரிதுபோலக் காட்டும்
புல்லியோர். அவர்பால்  படன்  இரத்தல் குற்றமாயினும்  ஒக்கற் குதவல்
வேண்டிச் செய்தலில் எடுத்தோதினார். அளவ கூறுதலாவது இத்
துணையளவாகிய வரகு தருக என அறுதியிட்டுக் கேட்பது. பொருட்
குறையுடையனாயினும் போர்வரின் பெருவேந்தரையும் வெல்லும்
பேராண்மையுடையனென்பதாம். உண்டவென என்பது உண்டென நின்றது.

      விளக்கம்: எருது கால் உறாது இளைஞர் கொன்ற எனவே,
இளைஞர் காலான்  மிதித்துக்  கொள்ளப்பட்டது  வரகென்றவாறாயிற்று.
வளம்பட  விளையாது  சிலவாய்  விளைந்தமையின்  வரகின்  தொகுதி
புல்லெனத் தோன்றுதலின். “புல்லென் குப்பை” யென்றார். வரகு
விளைதற்கு முன் அதனைக் கடன் கொடுத்தவர், விளைந்துவரக் கண்டதும்
பெறவருதலின், அக் கடன்காரரை,“தொடுத்த கடவர்”என்றார். அவர்க்குத்
திரும்பக் கொடுக்க வேண்டியவளவும் கொடுத்தபின் எஞ்சி நிற்கும்
வரகைத் தன்பால் பசித்துவரும் பாணர்க்குக் கொடுத்தலால், ஏனைத்
தன்னைச் சுற்றி வாழும் சுற்றத்தார்க்கு உதவுவான் வரகின்மை கண்டு,
அவர் தன் மனைக்கடையில் வாராதொழிரென்றஞ்சிப் பிறர் பாற் கடன்
பெறுவானாயினன் என்றார். ஒக்கல் வாராத புறங்கடை குற்றமுடைத்
தென்பதுபற்றிக் “கடைதப்பலின்”என்பது கூறப் பட்டது. ஒற்கம், வறுமை.
சிறுபுல்லாள ரென்றதற்கு மனஞ் சிறியராகிய புல்லிய தானாண்மை
யுடையோர் என்று உரைப்பினுமமையும். முகத்தவை கூறி யென்று
பாடங்கொண்டு புல்லாளர் முன்னின்று உள்ளது கூறி என்றலுமொன்று.
வாகைத் திணைத் துறைகளுள் “புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கம்”
(தொல். புறத். 17) என்பதற்கு இளம்பூரணர் இதனை எடுத்துக் காட்டுவர்.

328. மூதின்முல்லை

     இப்பாட்டைப் பாடிய ஆசிரியர் பெயரும் தெரிந்திலது. இப்பாட்டு
இடையிடையே சிதைந்துள்ளது. இதனால் இப் பாடடுக்குரிய திணையும்
துறையும் அமையும் திறத்தை ஆராய்வதும் இயலாதாகின்றது.

 ...புல்லே னடைமுதற் புறவுசேர்ந் திருந்த
புன்புலச் சீறூர் நெல்விளை யாதே
வரகுந் தினையு முள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுக் கீயத் தொலைந்தன
 5.............டமைந் தனனே
 அன்ன னாயினும் பாண நன்றும்
வள்ளத் திடும்பா லுள்ளுறை தொடரியொடு...
களவுப் புளியன்ன விளைகள்...
..........வாடூன் கொழுங்குறை