| போது விரி பகன்றைப்புதுமலர் அன்ன-அரும்பி மலர்ந்த பகன்றையின் புதுப்பூப் போன்ற; அகன்று மடி கலிங்கம் உடீஇ - அகல மடிக்கப்பட்ட ஆடைகொடுத் துடுப்பித்து; செல்வமும் கேடின்று நல்குமதி - செல்வத்தையும் குறையாவளவிற் கொடுப்பாயாக;பெரும - பெருமானே; மாசில் மதி புரை மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி -கலை குறைவில்லாத முழுமதியத்தையொக்கும் தடாரிப் பறையொலிக்க இசைத்து; ஆடுமகள் ஆடி ஒல்கல் ஒப்ப - ஆடு மகள் ஆடி யிளைத் தொடுங்குவது போல்;கோடையாயினும் - எல்லாம் பசையற்றொடுங்கும் கோடைக்காலம் வந்தபோதும்; கோடா ஒழுக்கத்துக் காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந - தப்பாது நீரொழுகுதலையுடைய காவிரியாறு பாயும் நல்ல நாட்டுக்குத் தலைவனே-; வாய் வாள் வளவன் வாழ்க என - தப்பாத வாட்புடையை யுடைய கிள்ளி வளவன் வாழ்வானாக என்று; பீடுகெழு நோன்றாள் பல பாடுகம் - பெருமை பொருந்திய நின் வலிய தாளைப் பல படியும் பாடுவோம்; எ - று.
வாழ்க்கை தொடங்கிய நாண்முதல் வறுமைத்துயர் கண்டறியாமை விளங்க, பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கை எனப் பட்டது. பதிதல், ஈண்டுத் தொடக்கத்தின் மற்று.குறுநெடுந்துணையேன்றவிடத்துக் குறுமை இளமையும், நெடுமை காலமும் குறித்து நின்றன. மனைவியைக் குறுநெடுந் துணையென்றான். கூர்மை, அறிவின் நுட்பம். சீரிய மதிநுட்பமுடையார்க்கும் வறுமை அந்நுட்பம் மழுங்கச் செய்தலின், கூர்மை வீதலின் என்றார் குடி முறை பாடியென்றது. ஏருழுது வாழும் வேளாண்மக்கள் இல்லந்தோறும் பாடி ஊண்பெற்று வாழ்தலைக் குறித்து நின்றது. ஏரின் வாழ்நர் குடிமுறைபுகாஅ, வூழிரந்துண்ணும் உயவர் வாழ்க்கை (புறம். 375) என்று பிறரும் கூறுதல் காண்க. குடிமுறை பாடியிரத்தல், மேன்மேலும் இரத்தற்கே இடனாவதன்றி, இரவாமை பயந்து தம்மில் இருந்து தமது பாத்துண்ணும் தகைமை பயவானமயின் ஒய்யென வருந்தி யென்றான். குழிசியை மலர்த்தலாவது, அரிசி முதலாயின இன்மையால் சமைத்தற்றொழில் நிகழாமையின் கவிழ்த்து வைத்திருக்கும் மட்பானையை, அவ்வரிசி முதலாயின பெற்றவழிச் சமைத்தற்கு நிமிர்த்து அடுப்பேற்றுவது, இல்லாரது இன்மை தீர்ப்பது உடையார்க்குக் கடன் என்பதமை யறிந்தொழுகும் செல்வரை ஈண்டுக் கடனறியாளரென்றார். தமது நாட்டில் இல்லாமையை யுணர்த்துதலால் பிறநாட்டில் அவர் இல்லாமையை விதந்து பிற நாட்டின்மையின் என்றார். உலைவுக் கேதுவாகிய நசை உலை நசையெனப்பட்டது.ஆகவென்பதன் ஈற்றகரம் விகாரத்தாற் றொக்கது.உலகியல் வாழ்க்கைக்கு வேண்டும் வளமெல்லாம் ஓரிடத்தே ஒருங்கு உளவாதல் இரிதாதலால்இ உலகமெல்லாம் ஒரு பாற்பட்டென் நினைந்து வருபவாதலால், யான் நின்பால் வருவேனாயினேன் என்பான், மலர்தா ரண்ணல் நின் நல்லிசை யுள்ளி வருவேனாயினேன் என்றான். உலகம் - ஈண்டு உலகியல் வாழ்க்கைக்கு வேண்டும் வளம் குறித்து நின்றது; வளமாவது, உண்டியும் உடையுமென
|