138. நாஞ்சில் வள்ளுவன்

     ஒருகால், மதுரை மருதன் இளநாகனார் நாஞ்சில் வள்ளுவனை
யடைந்து அவன் மிக்க பரிசில் தரப்பெற்றுச் சென்றார். செல்பவர் வழியில்
பாணர் கூட்டமொன்று வரக் கண்டு, அவர்களில் மூத்தோனை நோக்கி,
“நீசெல்வர் பிறரை நினையாது, நாஞ்சில் வள்ளுவனை நினைந்து போவது
நோக்க நீ விரிந்த பெரிய மனமுடையனாகத் தோன்றுகின்றாய்; நீ குறித்துச்
செல்லும் வள்ளலோ பின்றையோ, நாளையோ வாவென மொழிபவ னல்லன்”
என்றாராக, அவன், தான் இதற்கு முன்பும் அவன்பாற்   சென்று
பரிசில்பெற்றுவந்தமை   தெரிவித்து,  இனி அவ்வாறு  பெற  முடியுமோ
என  மையல்   நோக்கம்   கொண்டான். அவற்கு மருதன் இளநாகனார்,
“அவன் கிளியீடு வாய்த்தாற் போல்பவன்; அவன் பாற் செல்லும் நின்னை
முன்னே வந்து போன பழைய பாண னெனத் தெரிந்துரைப்பார் யாவருளர்?
நீ இன்னே இனிது செல்க” என இப்பாட்டின்கண் குறித்துரைத்துள்ளார்.

 ஆனினங் கலித்த வதர்பல கடந்து
மானினங் கலித்த மலைபின் னொழிய
மீனினங் கலித்த துறைபல நீந்தி
உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்
5சிதாஅ ருடுக்கை முதாஅரிப் பாண
 நீயே பேரெண் ணலையே நின்னிறை
மாறி வாவென மொழியலன் மாதோ
ஒலியிருங் கதுப்பி னாயிழை கணவன்
கிளிமரீஇய வியன் புனத்து
10மரனணி பெருங்குர லனைய னாதலின்
 நின்னை வருத லறிந்தனர் யாரே.    (138)

     திணை : அது. துறை : பாணாற்றுப்படை. அவனை மருதன்
இளநாகனார் பாடியது.

     உரை : ஆனினம் கலித்த அதர்பல கடந்து - பெற்றத்தினது
இனம்  மிக்க  வழிபலவும்   வந்து;  மான்  இனம் கலித்த மலை
பின்னொழிய - மான்  திரள் மிக்க மலை பின் கழிய; மீனினம்
கலித்ததுறைபல நீந்தி - மீனினம் தழைத்த துறை பலவற்றையும்
நீந்தி;  உள்ளி   வந்த - நினைத்து   வந்த; வள்ளுயிர்ச் சீறியாழ் -
வள்ளிய ஓசையை யுடைத்தாகிய சிறிய யாழையும்; சிதாஅர் உடுக்கை
முதா அரிப் பாண - சிதாராகிய உடையையுமுடைய மூத்த பாணனே;
நீ  பேரெண்ணலை - நீதான்    அவன்பாற்     சில    கருதிப்
போகின்றமையின்   பெரிய  எண்ணத்தையுடைய;  நின்   இறை -
நின்னுடைய தலைவன்;மாறி  வா என மொழியலன் - இப்பொழுது
போய்ப் பின்னொரு நாட் பரிசிற்கு வாவென்று சொல்லான்; ஒலியிருங்
கதுப்பின்  ஆயிழை   கணவன் - தழைத்த  கரிய  கூந்தலையுடைய
ஆயிழைக்குத் தலைவன்; கிளி  மரீஇய  வியன்  புனத்து - கிளி
மருவியஅகன்ற புனத்தின் கண்; மரன் அணி பெருங் குரல்
அனையன் ஆதலின் - மரப்பொதும்பின்கண்    வைத்த    பெரிய
கதிரை யொப்பனாதலின்; நின்னை வருதல் அறிந்தனர் யார் - நீ
அவன்பாற் பரிசில்பெற்று வருதற்கண் நின்னைப் பழைய பாணன்
என்று அறிவார்யார் எ-று.

     “நின்னை வருதல் அறிந்தனர் யார்” என்றதன் கருத்து, நின்னை
யறிவாரும் அறியாத தன்மையையாவை யென்பதாம். அறிவார் யாரென்பது
அறிந்தனர் யாரெனக் காலமயக்கமாயிற்று. நினக்கு அவன் பரிசில்
தப்பாமல் தருமென்பான் “நின்னிறை” யென்றான். “கிளி மரீஇய
வியன்புனத்து மரனணிபெருங்குரலனையன்” என்றது, கிளியீடு வாய்த்தாற்
போல்வனென்னும் வழக்குப்பற்றி நின்றது.

      விளக்கம் : துறை: நீர்த் துறை. முதுமையையுடைய பாணனை முதா
அரிப்  பாணன் என்றார்;  முதிர்ந்த  காயை  முதாரிக்காய் என்பது போல.
பெருங்கொடை  வேந்தர்  பலர் இருப்பவும், நாஞ்சில் வள்ளுவனை நயந்து
சேறலின், “பேரெண்ணலை” யென்றார். எண்ணல் எண்ணம். அறிந்தனர் யார்
என்றவிடத்து, அறிதற்குரிய நின்னைப் பழைய பாணன் என்று அறிவார் யார்
என்பது வருவிக்கப்பட்டது. பரிசில் பெற்றவழி இப் பாணனது
பண்டைநிலை, பெற்ற  செல்வத்தால்  மறைந்து போமென்பது எய்த
“அறிந்தனர் யார்” என்றதன்  கருத்து  “நின்னை  யறிவாரும்  அறியாத
தன்மையை யாவையென்பதாம்”  என்றார்.  அறிவார்   யார்   என
எதிர்காலத்தில் கூறற்பாலதனை இறந்த காலத்திற் கூறியது காலமயக்கம்.
இது தெளிவுபற்றி வந்தது. பண்டும் பரிசில் தந்து சிறப்பித்துள்ளதோடு
இப்போதும் அது தருதற்குச் சமைந்திருத்தலின், “நின்னிறை” என்றான்;
எனவே, அவன் பரிசில் பெறுவது தப்பாதாயிற்று. கிளியீடு வாய்த்தாற்போல
வென்பது பிற்காலத்தே “இல்லார்க்குக் கிழயீடு வாய்த்தாற் போல” என
வழங்குவதாயிற்று.