164.குமணன்

     தம்பியாகிய இளங்குமணன் தம் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு
தன்னையும் கோறற்குச் சூழ்ந்ததறிந்து குமணன், நாட்டின் நீங்கிக்
காட்டையடைந்து வாழ்ந்து வந்தான். அக்காலத்தே பெருந்தலைச் சாத்தனார்
வறுமையுற்று,  அவன்பாற்   பரிசில்   பெற  முதிரத்துக்கு வந்தார்; வந்தவர்,
நாட்டில்  நிகழ்ந்திருக்கும்   செய்தி   யறிந்து   ஏமாற்ற மடைந்தாராயினும்,
இளங்குமணன் மனவன்மை யில்லாதவன் என்பதைச் சூழ்ந்தறிந்து உடன்பிறந்தார்
இருவர்க்கிடையே நிலவிய பகைமையைப் போக்கி ஒற்றுமையுளதாக்குதற்கு
முயல்வாராயினர். வேறு நெறி யொன்றும் புலப்படாமையால் காட்டில் குமணன்
இருக்குமிடத்தை யறிந்து அவன்பாற் சென்று சேர்ந்தார். ஆங்கே அவர்க்குத் தம்
கருத்தைப் புலப்படாமையால காட்டில் குமணன் இருக்கு மிடத்தை யறிந்து
அவன்பாற் சென்று சேர்ந்தார். ஆங்கே அவர்க்குத் தம் கருத்தைப் புலப்படுத்தாது
தம்பால்நின்று வருத்தும் வறுமைத் துன்பத்தை யெடுத்துக் குமணற்கு விளங்க வோதி,
“வேந்தே, நீ வயிரியர் வறுமை தீர்க்கும் குடிப்பிறந்தவன்; வறுமையுற்று வாடும்
என் மனையாள் துன்பத்தைக் காணமாட்டேனாய் நின்னை நினைந்து போந்தேன்;
என் நிலை இதுவாகும்; இந்நிலையில் யான் நின்னை வளைத்துக் கொண்டு
ஏதேனும் பரிசில்பெற் றல்லது மீளேன்”என இப்பாட்டின் கட் குறித்துரைக்கின்றார்.

 ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப்
பாஅ லின்மையிற் றோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
5

 

சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி
நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென்
மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண
என்னிலை யறிந்தனை யாயி னிந்நிலைத்
10

 

தொடுத்துங் கொள்ளா தமையலெ னடுக்கிய
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணமை முழவின் வயிரியர்
இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே.
  (164)

     திணை:அது. துறை: பரிசில் கடாநிலை. தம்பியால் நாடு
கொள்ளப்பட்டுக் காடுபற்றியிருந்த குமணனைப் பெருந்தலைச்
சாத்தனார் பாடியது.

     உரை:ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் - அடு தலை
மிகவும் மறந்த புடை யோங்கிய அடுப்பின்கண்; ஆம்பி பூப்ப -
களாம்பி பூப்ப; தேம்பு பசி உழவா - உடம்பு மெலியும் பசியான்
வருந்தி; பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி - பாலின்மையால்
தோலாந்தன்மையுடனே திரங்கி; இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை -
துளை தூர்ந்த பொல்லாத வறிய முலையை; சுவைத்தொறு அழூஉம்
தன் மகத்துமுக நோக்கி - வறிதே சுவைக்குந்தோறும் அழுகின்ற தனது
பிள்ளையது முகத்தைப் பார்த்து; நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக்கண்-
நீரால் நிரம்பிய ஈரிய இமையையுடைய குளிர்ந்த கண்ணையுடைய;
என் மனையோள் எவ்வம் நோக்கி - என் மனைவியது வருத்தத்தைப்
பார்த்து; நினைஇ நிற்படர்ந்திசின் - இந்த வருத்தம் தீர்த்தற்குரியாய்
நீ யென நினைந்து நின்பால் வந்தேன்; நற்போர்க் குமண - நல்ல
போரையுடைய குமண; என் நிலை அறிந்தனை யாயின் - எனது
வறுமை நிலையை நீ யறிந்தாயாயின்; இந்நிலை - இவ்வாறு
வறுமையுற்று நின்ற நிலைமைக்கண்; தொடுத்துங் கொள்ளா
தமையலென் - வளைத்தாயினும்பரிசில் கொள்ளாது விடேன்;
அடுக்கிய பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ் - பலவாக
அடுக்கப்பட்ட பண்ணுதலமைந்த நரம்பினையுடைய தோலாற்
போர்க்கப்பட்ட நல்ல யாழையும்; மண்ணமை முழவின் - மார்ச்சனை
நினைந்த மத்தளத்தினையுமுடைய; வயிரியர் இன்மை தீர்க்கும் குடிப்
பிறந்தோய் - கூத்தரது மிடியைக் கெடுக்கும் குடியின்கட்
பிறந்தோயாதலால் எ-று.

     அடுதலை மிகவும் மறத்தலால் தேய்வின்றி உயர்ந்த அடுப்பென்றாராம்.
குமண, நீ இன்மை தீர்க்கும் குடிப்பிறந்தோ யாதலால், இந்நிலை தொடுத்தும் 
கொள்ளாது அமையலென் எனக் கூட்டுக.

     விளக்கம்:தேம்பு பசி - உடல் மெலிந்து கெடுதற்கு ஏதுவாகிய பசி.
இப் பசியால் சாத்தனாருடைய மனைவியிடத்துப் பால் இலதாயிற்று. பொல்லா
வறுமுலை யென்றார், பெற்ற சேய்க்குப் பயன்படாது பாலின்மையால் மிக்க
மனநோயைத் தருதல்பற்றி. சேய் துயரும், தாய் துயரும் கண்ட யான்
வேறொருவரையும் நினையாது நின்னையே நினைந்தேன். என்பார்,
“நினைஇ நிற்படர்ந்திசினே”என்றார். நற்போர்க் குமண வென்றது, தன் பசி
நோயைப் போக்குதற்கு இன்றியமையான் என்பது சுட்டி நின்றது. “வயிரியர்
இன்மை தீர்க்கும் குடிப்பிறந்தோய்”என்றது, என போலும் புலவர் வறுமை
தீர்ப்பதும் நினக்குக் கடனா மென்பதாம். எனவே, யான் நின்னை
வளைத்துக்கொண்டு போதற் குரிமையு முண்டென்று கூறுவார், “தொடுத்துங்
கொள்ளாதமையலென்”என்றார்.