5. சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்
சேர லிரும்பொறை

     இச் சேர   வேந்தன்   இரும்பொறைக்  குடியிற்  பிறந்தவன்.
ஒள்வாட்கோப்பெருஞ்சேரல் என்பது இவன தியற்பெயர். இவன் தன்
அரசியலைக்   கொங்குநாட்டுக்   கருவூர்வரையில்   நிலவச்செய்து
அந்நகர்க்     கண்ணே    அரசுகட்டிலேறி    முடிசூடிக்கொண்ட
சிறப்புப்பற்றி,கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரலிரும்பொறை
யென வழங்கப்படுகின்றான். இவன் சிறந்த மெய்ப்பொலி வுடையவன்.
தன்னைக் கண்டார்க்கு நலஞ்

செய்யும்  இவனது தோற்றச்  சிறப்பு. நரிவெரூஉத்தலையார் என்னும்
சான்றோர்க்குற்ற  மெய்வேறுபாடு  இவனது   காட்சியால்   நீங்கிப்
பண்டைய நலத்தை யடைந்தது என்று கூறுவர். பண்டைய நல்லுடம்பு
பெற்ற அச்சான்றோர் பாடியது இப்பாட்டு.

     இதன்கண்,  அவர்   கோப்பெருஞ்  சேர  லிரும்பொறையைக்
கண்டு  அவனது  தோற்றப்  பொலிவை  வியந்து தனக்குச் செய்தது
போலப்  பிறர்க்கும்  இன்பம்  செய்யும்   இயல்பு   குன்றாதிருப்பது
காரணமாக,  இத்தோற்றப்  பொலிவு  செல்வக்குறைவாலும்  சிற்றினச்
சேர்க்கையாலும்   மக்கள்பால்    அளியின்மையாலும்   குன்றுமென
நினைந்து, “பெரும,நீ  கானக  நாடனாதலால்,   செல்வக்குறைவிலை;
ஆதலால்,  நீ  நிரயங்கொள்ளும் சிற்றினத்தைச் சேராது நாட்டினைக்
குழவி    வளர்ப்பாரைப்    போலப்      பாதுகாப்பாயாக”   என
அறிவுறுத்துகின்றார்.

 எருமை யன்ன கருங்கல் லிடைதோ
றானிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும
நீயோ ராகலி னின்னொன்று மொழிவல்
5. அருளும் அன்பும் நீக்கி நீங்கா
 

நிரயங் கொள்பவரோ டொன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே. (5)

     திணை: பாடாண்டிணை. துறை: செவியறிவுறூஉ :  பொருண்
மொழிக்   காஞ்சியுமாம்.   சேரமான்  கருவூரேறிய  ஒள்வாட்
கோப்பெருஞ்   சேர லிரும்   பொறையைக்    கண்டஞான்று
நின்னுடம்பு   பெறுவாயாகென,  அவனைச்  சென்று   கண்டு
தம்முடம்பு  பெற்றுநின்ற  நரிவெரூ  உத்தலையார்   பாடியது.

     உரை: எருமையன்ன  கருங்கல் இடைதோறு - எருமை
போலும் வடிவையுடைய  கரிய  கற்பொருந்திய  இடந்தோறும்;
ஆனிற் பரக்கும் யானைய - பெற்றம்போலப் பரக்கும் யானையை
யுடையவாய;  முன்பின்  கான் அக நாடனை - வலியையுடைய
காட்டிற்குள்ளாகிய நாட்டினையுடையாய்; பெரும-; நீ ஆகலின்
- நீ இங்ஙனம் பகைவரான் அணுகப்படாத இயல்பாகிய பெருஞ்
செல்வத்தை யுடையனாதலால்; நின் ஒன்று மொழிவல் -நினக்கு
ஒரு காரியஞ் சொல்லுவேன் அதனைக் கேட்பாயாக;  அருளும்
அன்பும்   நீக்கி - அருளையும்  அன்பையும்  நீக்கி;  நீங்கா
நிரயங் கொள்பவரோடு ஒன்றாது - பாவஞ்செய்தாரை நீங்காத
நரகத்தைத்  தமக்கு  இடமாகக் கொள்பவரோடு பொருந்தாது;
காவல்  -  நீ  காக்கப்படும் தேயத்தை; குழவி கொள்பவரின்
ஓம்பு மதி -குழவியை வளர்ப்பாரைப் போலப் பாதுகாப்பாயாக;
அளிது  அது -  அளிக்கத்தக்க  தொன்று அக்காவல்; பெறல்
அருங்குரைத்து - அது பெறுதற் கரிது; எ-று.

     காவல் என்றது ஆகுபெயர். நாடனை: ஐகாரம் முன்னிலைக்கண்
வந்தது.ஓவும் ஓரும் அசைநிலை. அருளாவது ஒன்றின் துயர் கண்டாற்
காரணமின்றித்  தோன்றும்  இரக்கம்.  அன்பரது  தன்னால்  புரக்கப்
படுவார்மேல்   உளதாகிய   காதல்.  இனி,   ஓகாரத்தைப்   பிரித்து
வினாவாக்கிக்  கோப்பெருஞ்சேர  லிரும்பொறையைக்  கண்டஞான்று
நின்னுடம்பு  பெறுவாயெனத்  தம்முடம்பு  பெற்றமை  தோன்ற நீயோ
வென வினாவினாராக்கி யுரைப்பாரு முளர்.

     காவல்       குழவி     கொள்பவரின்     ஓம்பென்றமையால்
செவியறிவுறூஉவும்,அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயங்கொள்பவரோ
டொன்றா   தென்றமையால்    பொருண்மொழிக்    காஞ்சியுமாயிற்று.

     விளக்கம் : பல   எருமைகட்கிடையே விரவி  நின்று மேயும்
பசுக்கூட்டம்போலக் கருங்கற்பாறைகட்கிடையே விரவி யானைக்கூட்டம்
காணப்படுகிற தென்பதை, “எருமை யன்ன கருங்கல் லிடைதோ, றானிற்
பரக்கும்  யானைய” என்றார். இது வடிவுவமம். பரக்கும்-பரந்து சென்று
மேயும். முன்பு-வலி. கான் அக நாடு-காட்டின் அகத்ததாகிய நாடு; காடு
சூழ்ந்த  நாடென்பதாம்.  கானக  நாடனை  நீயோ  வென்பது, காட்டிற்
குள்ளாகிய    நாட்டினையுடையோன்   நீதானோ  வென்று   பொருள்
கொள்ளவும்  இடந்  தருதலின்,  ஓகாரத்தைப்   பிரித்து   நீ   கானக
நாடனையோ என வினாவினாராக்கி யுரைப்பாரு  முளர் என்றுரைத்தார்.
கோப்பெருஞ்  சேர  லிரும்பொறையைக்  காணில்  உடம்பு பெறுவை
யெனச்   சான்றோர்    தமக்குரைத்தவாறே,    நரிவெரூஉத்தலையார்
அவனைக்   கண்டு   தம்முடம்பைப்  பெற்று  அதனால் உண்டாகிய
வியப்பால்,    சான்றோரால்    உரைக்கப்பட்ட  கானக  நாடனாகிய
கோப்பெருஞ்    சேர   லிரும்பொறை    நீயோ   என்றா   ரெனப்
பொருள்கொள்வாரு   முண்டு   என்பதாம்.   காவலென்னுந் தொழில்
காக்கப்படுந்  தேயத்துக்காயினமையின்  ஆகுபெயர்  என்றார். குழவி
கொள்பவரின்  என்புழிக்  கொள்ளுதல் வளர்த்துக் கொள்ளுதல் இன்:
உவமப்பொருட்டு.

     இனி,  இப்பாட்டை  வாயுறைவாழ்த்தாகக்  கொண்ட நச்சினார்க்
கினியர்  “இதனுள்  நிரயங்  கொள்பவரோ   டொன்றாது   காவலை
யோம்பென  வேம்புங் கடுவும்போல வெய்தாகக் கூறி  அவற்  குறுதி
பயத்தலின் வாயுறை வாழ்த்தாயிற்” றென்றார்.

     கானக  நாடென்றது,  காவலும் செல்வமும் உடைய நாடென்பது
படநிற்றலின்,  அதற்கேற்ப “ ஆகலின்”  என்றவிடத்து   “இங்ஙனம்
பகைவரானணுகப்படாத”  என்பது  முதலிய   சொற்களைப்  பெய்து
கூறினார். இவை இசை யெச்சம்.