63. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்,
சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி

     இவ்விரு பெரு வேந்தரும் போர்க்களத்திற்பட்டு வீழ்ந்தது கண்டு,
கழாத்தலையார் இரங்கியதுபோல, ஆசிரியர் பரணரும் அமர்க்களம் போந்து
இருவரையும்கண்டு“ஒருவரையொருவர்வஞ்சியாதுநின்றுவென்றிபெறுவேம்”
என்று போரில் மண்டிய இவர்தம் வீழ்ச்சி மண்ணாளும் மன்னர்க்கு ஒரு நல்ல
வுண்மை யுணர்த்தும் என்ற கருத்தால், இப் பாட்டின்கண், “இவர்கள் பால்
எத்துணையோ யானைப்படைகள் இருந்தன; அவை யாவும் அம்பால் துளங்கி
விளைத்தற்குரிய வினையின்றி யழிந்தன; குதிரைகளோ மிக்க புகழ்
படைத்தவை யெனினும் தம்மைச் செலுத்தும் மறத்தகை மைந்தரோடு
பட்டொழிந்தன; தேரேறி வந்த வீரரனைவரும் கேடகம் தாங்கிய கையோடே
வீழ்ந்தழிந்தனர். இவர் தம்வெற்றி முரசங்களும் கிழிந் தொழிந்தன; நெடுவேல்
மார்பில் பாய்ந்ததால் வேந்தரும் வீழ்ந்து பட்டனர். இவர்தம் அகன்றலை
நாடுகள் இனி என்னாம்” என இரங்கிப் பாடியுள்ளார்.

எனைப்பல் யானையு மம்பொடு துளங்கி
விளைக்கும் வினையின்றிப் படையொழிந் தனவே
விறற்புகழ் மாண்ட புரவி யெல்லாம்
மறத்தகை மைந்தரொ டாண்டுப்பட் டனவே
5.தேர்தர வந்த சான்றோ ரெல்லாம்
தோல்கண் மறைப்ப வொருங்குமாய்ந் தனரே
விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம்
பொறுக்குந ரின்மையி னிருந்துவிளிந் தனவே
சாந்தமை மார்பி னெடுவேல் பாய்ந்தென
10.வேந்தரும் பொருதுகளத் தொழிந்தன ரினியே
என்னா வதுகொ றானே கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவன் முக்கித் தண்புனற் பாயும்
யாண ரறாஅ வைப்பிற்
15.காமர் கிடக்கையவ ரகன்றலை நாடே. (63)

     திணையும் துறையும் அவை. அவரை அக்களத்திற் பரணர்
பாடியது.

      உரை: எனைப் பல் யானையும் - எத்துணையும் பலவாகிய
யானையும்; அம்பொடு துளங்கி - அம்பால் கலங்கி; விளைக்கும்
வினையின்றிப் படை யொழிந்தன - இனிமேலுண்டாக்கும் போரின்றிப்
படையிடத்துப் பட்டன; விறற் புகழ் மாண்டபுரவி யெல்லாம் - வெற்றிப்
புகழ் மாட்சிமைப்பட்ட குதிரையெல்லாம்; மறத்தகை மைந்தரொடு -
ஆண்மைக்கேற்ற வீரப் பாட்டுக் கூற்றையுடைய மேலாட்களுடனே;
ஆண்டுப் பட்டன - அக்களத்தே பட்டன; தேர் தர வந்த சான்றோர்
எல்லாம் - தேர் கொடுவர வந்த போரிற் கமைந்தோ ரெல்லாம்; தோல்
கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனர் - தாம் பிடித்த பரிசை தம் கண்
மறைப்பச் சேரப் பட்டனர்; விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்
- வாரால் விசிக்கப்பட்டுத் தொழில் மாட்சிமைப்பட்ட மயிர் சீவாது
போர்க்கப்பட்ட கண்ணையுடைய முரச மெல்லாம்;பொறுக்குநர்
இன்மையின் - பரிப்பார் படுதலான்; இருந்து விளிந்தன - இருந்து
கெட்டன; சாந்தமை மார்பில் நெடு வெல் பாய்ந்தென - சாந்தமைந்த
மார்பின்கண்ணே நெடிய வேல் பாய்ந்தெனவாக; வேந்தரும் பொருது
களத்து ஒழிந்தனர் - அரசரும் பொருது அக்களத்தின்கண்ணே
மடிந்தனர்; இனி என்னாவது கொல்தான் - இனி என்ன வருத்த
முறுவதோ தான்; கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் -
கழனிக்கண் ஆம்பற்றண்டாற் செய்த வளையணிந்த கையினையுடைய
மகளிர்; பாசவல் முக்கி - செவ்வி யவலை முக்கி; தண் புனல் பாயும் -
குளிர்ந்த புனற்கண்ணே பாயும்; யாணர் அறாஅ வைப்பின் புதுவருவா
யறாத ஊர்களையுடைய; காமர் கிடக்கை - அழகிய கிடையையுடைய ;
அவர் அகன்றலை நாடு - அவரது அகன்ற விடத்தையுடைய நாடு எ-று.

     அன்னோ என்னவாதுகொல் என்று பாடமோதுவாரு முளர். நாடு தான்
என்னாவதுகொல் எனக் கூட்டுக. நாடென்று மொருமை நோக்கி,
என்னாவதுகொல் என ஒருமையாற் கூறப்பட்டது.

     விளக்கம்: வெற்றியால் உளதாகும் புகழை “விறற்புகழ்”என்றார்.
அறப்போர் செய்தற்குரிய குணங்களால் அமைந்தோரைச் “சான்றோர்”
என்பது மரபு; “மெய் சிதைந்து சாந்தெழில் சிதைத்த சான்றோர்
பெருமகன்” (பதிற். 67) என்று பிறரும் கூறுதல் காண்க. மயிர்க்கண்
முரசம் “கொல்லேற்றுப் பைந்தோல், சீவாது போர்த்த மாக்கண்
முரசம்” (மதுரை.732-3) சீவுதல், மயிரை நீக்குதல். சீவாது போர்த்த
முரசினை மயிர்க்கண் முரசம் என்றலை, “தழங்கு குரல் மயிர்க்கண்
முரசினோரும்” (நற்.93) என்பதனாலு மறிக. முக்குதல், உண்ணுதல்.
“தத்திங்கந் தத்திங்கம் கொட்டு வாளாம், தயிருஞ் சோறுந் தின்பாளாம்,
ஆப்பஞ் சுட்டால் தின்னு வாளாம், அவலிடிச்சால் முக்குவாளாம்”
என்று மகளிர் கைக்குழந்தைகட்குப் பாடிக் காட்டும் பாட்டிலும்
முக்குதல் இப் பொருளில் வருதல் காண்க.