176. ஓய்மான் நல்லியக்கோடன் ஓய்மான் என்பது ஓய்மா நாட்டை யுடையவன் என்று பொருள் படும். திண்டிவனத்தைச் சார்ந்த நாடு முற்காலத்தில் ஓய்மானாடென வழங்கிற்று. இதன்கண் மாவிலங்கை, வேலூர், எயிற்பட்டினம், கிடங்கில், ஆமூர் என்ற வூர்கள் சிறப்பாகக் கூறப்படுகின்றன. நல்லியக் கோடன் மாவிலங்கையில் இருந்து கொண்டு இந்நாட்டை யாட்சிபுரிந்து வந்தான். இவனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனாரும் புறத்திணை நன்னாகனாரும் பாடியுள்ளனர். இடைக்கழி நாடு ஓய்மானாட்டுக்குக் கிழக்கே கடற்கரைப் பகுதியாகும். இதனை இக்காலத்தும் இடைக்கழி நாடென்றே கூறுவர். கிடங்கிலில் இடிந்து சிதைந்த அகழியும் கோட்டையும் உண்டு. ஓய்மான் நல்லியக்கோடற்குப் பின் வந்தவன் ஓய்மாய் வில்லியாத னென்பானாவன். அவனை நல்லியாதனென்றும் கூறுவர்.
நல்லியக்கோடனுடைய குணம் செயல் கொடைநலம் முதலிய பலவும் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனாரால் சிறுபாணாற்றுப் படையில் அழகுறக் கூறப்பட்டுள்ளன. செய்ந்நன்றி யறிதலும் சிற்றினமின்மையும், இன்முக முடைமையும் இனியனாதலும், அஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையும். ஆணணி புகுதலும் அழிபடை தாங்கலும், கருதியது முடித்தலும் காமுறப் படுதலும், ஒருவழிப் படாமையும் ஓடிய துணர்தலும், அரிவைய ரேத்த அறிவுமடம் படுதலும், அறிவு நன்குடைமையும், வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்(சிறுபாண்.207-17) பிறவும் இவனுடைய சிறப்புப் பண்புகளாக நத்தத்தனாரால் குறிப்பிடப்படுகின்றன. தன்னை யடைந்த இரவலரைத் தானே நேர் நின்று உண்பித்தலும், பகை மன்னரை வென்று அவர் தரும் திறைப் பொருளைக் கொண்டு நயவர் பாணர் முதலியோர்க்களித்து, அவர் வறுமை தீர்த்தலில் இவன் பெருவிருப்ப முடையவன். நனமா விலங்கை மன்ன ருள்ளும், மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள், உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்என்றும், பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை நல்லியக் கோடன்என்றும், குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச், செல்லிசை நிலைஇய பண்பின் நல்லியக்கோடன்என்றும் பாராட்டுவர். இதனால் இவன் ஓவியர் குடியிற் பிறந்தவன் என்றும் அறியலாம். ஓவியர் மா நாடென்பது, ஓய்மா நாடென மருவியது போலும்.
நல்லியக்கோடன் மாவிலங்கையில் இருந்து ஆட்சிபுரிந்து வருகையில் புறத்திணை நன்னாகனார் என்னும் சான்றோர் இவனைக் காணப்போந்தார். அக்காலத்தே வேங்கடத்தைச் சூழ்ந்த நாட்டிலுள்ளதாய கரும்பனூர் சென்று, அங்கேயிருந்த கரும்பனூர் கிழானைப் பாடிப் பரிசில பெற்றுப் பன்னாள் தம் மனைக்கண்ணேயிருந்து இரத்தலை நினையாதிருந்த இவர், தன்பால் வரக் கண்ட நல்லியக்கோடன் இவர்க்கு மிக்க பரசில் நல்கிச் சிறப்பித்தான். அதனால் வியப்பு மிகக்கொண்ட நன்னாகனார், தன் ஊழை வியந்து வாழியெற் புணர்ந்த பாலே எனப் பாராட்டி, பெருமா விலங்கைத் தலைவனான நல்லியக்கோடன் வறியவர் தொடுக்கும் புகழ்மாலை சூடுபவன்; அவனை நீ புரவலனாகப் பெற்றனை; இனி உனக்குக் குறைவில்லை என்றுரைத்து, பாரியது பறம்பிலுள்ள சுனைத் தெண்ணீர் தேடிச் சென்று கொள்ளவேண்டாமல் ஓரூரின்கண்ணே கிடைக்குமாயின் வேண்டும்போது எடுத்துக் கொள்ளலாமென நெகிழ்ந் தொழிபவரைப் போல, நல்லியக்கோடன் நம் நாட்டவனாதலின், வேண்டும்போது சென்றுகண்டு கொள்ளலாமெனப் பன்னாட்களைக் கொன்னே கழித்துக், கழிந்தவற்றைநினைந்து எனது நெஞ்சம் இரங்குகின்றது; அது வேண்டா, இனி இன்றேபோல் என்றும் அவன் தொடர்பு பெற்று இனிதிருக்கலாம் என்று கூறும் கருத்தால் இப்பாட்டைப் பாடியுள்ளார்.
புறத்திணை நன்னாகனார் தெண்டைநாட்டவர். புறத்திணைப் பாட்டுக்கள் பாடுவதில் சிறந்திருந்தமைபற்றிச் சான்றோர் இவரைப் புறத்திணை நன்னாகனார் எனச் சிறப்பித்திருக்கின்றனர். இவர் இவன் காலத்தும் இவற்குப் பிறபோந்த வில்லியாதன் காலத்தும் இருந்தவர். இவரது ஆழ்ந்த புலமைநலம் இப்பாட்டின்கண்ணும் பிறவற்றினும் இனிது விளங்கக் காணலாம். | ஓரை யாயத் தொண்டொடி மகளிர் கேழ லுழுத விருஞ்சேறு கிளைப்பின் யாமை யீன்ற புலவுநாறு முட்டையைத் தேனா றாம்பற் கிழங்கொடு பெறூஉம் | 5 | இழுமென வொலிக்கும் புனலம் புதவிற் | | பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை உடையை வாழியெற் புணர்ந்த பாலே பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் | 10 | ஓரூ ருண்மையி னிகந்தோர் போலக் | | காணாது கழிந்த வைகல் காணா வழிநாட் கிரங்குமென் னெஞ்சமவன் கழிமென் சாயல் காண்டொறு நினைந்தே. (176) |
திணையுந் துறையு மவை. ஓய்மான் நல்லியக்கோடனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
உரை: ஓரை ஆயத்து ஒண்டொடி மகளிர் - விளையாட்டுத் திரட்சிக் கண் ஒள்ளிய வளையையுடைய மகளிர்; கேழல் உழுத இருஞ் சேறு கிளைப்பின் - கேழற்பன்றி யுழுத கரிய சேற்றைக் கிளறின்; யாமை ஈன் புலால் நாறு முட்டையை - அதன்கண்ணே யாமை ஈனப்பட்ட புலால் நாறு முட்டையை; தேன் நாறு ஆம் பல் கிழங்கொடு பெறூஉம் - தேனாறும் ஆம்பலினது கிழங்குடனே பெறும்; இழும் என ஒலிக்கும் புனலம் புதவின் பெருமா விலங்கைத் தலைவன் - இழுமென்னும் அனுகரணமுண்டாக முழங்கும் நீர் வழங்கும் வாய்த்தலைகளையுடைய பெரிய மாவிலங்கை யென்னும் ஊர்க்குத் தலைவன்; சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை உடையை - சிறிய யாழையுடைய வறியோர் தொடுக்கும் புகழ் மாலை சூடும் நல்லியக்கோடனைத் துணையாக நீயுடையை யாதலான்; எற்புணர்ந்த பாலே வாழி - என்னைப் பொருந்திய விதியே நீ ஒரு குறையுடைய யல்லை வாழ்வாயாக; பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர் - பாரியது பறம்பின்கண் குளிர்ச்சியையுடைய சுனையிடத்துத் தெளிந்த நீர்; ஓரூர் உண்மையின்- போய்த் தேடிக்கொள்ள வேண்டாமல் ஓரூரின் கண்ணே யுண்டாதலின்; இகந்தோர் போல - அதனை யாம் வேண்டியபொழுது உண்கின்றோமென்று நெகிழ்ந்திருந்தாரை யொப்ப; காணாது கழிந்த வைகல் - அவனைக் காணாதொழிந்த நாட்கள்; காணா வழி நாட்கு இரங்கும் - எனக்கு நாட்களாய்க் கழிந்தனவல்லவென்று உட்கொண்டு அவனொடு தொடர்ந்த நட்பு இன்றேபோல இடையறாது செல்ல வேண்டுமென்று பின்வருநாளைக்கு இரங்கா நின்றது; என் நெஞ்சம் - என்னுடைய நெஞ்சம்; அவன் கழி மென் சாயல் - அவனது மிக்க மெல்லியசாயலைக் காணுந்தோறும் நினைந்து எ-று.
என் நெஞ்சம் அவன் சாயலைக் காணுந்தோறும் நினைந்து வழிநாட்கிரங்கும்; என்னைப் புணர்ந்த விதியே, நீ நல்லியக்கோடனை யுடையை யாதலால், நீ என்ன குறையையுடைய; நீ வாழ்வாயாக வெனக் கூட்டி வினை முடிவு செய்க.
இல்லோர் சொன்மலையென்பதற்கு இல்லோர் சொல்லைச் சூடுமென்றும், எற்புணர்ந்த பாலேஎன்றோதி, என்னை அவனொடு கூட்டிய விதியே யென்றும், வழிநாட் கிரங்கும்என்பதற்கு, இன்னும் இவனொடு தொடர்ந்த நட்பு இடையற்றுக் கழியுங் கொல் என்று இரங்குமென்றும் உரைப்பாரு முளர்.
விளக்கம்: ஓரை, விளையாட்டு. விளையாட்டு மகளிர் சேற்றைக் கிளறியவழி, யாமை முட்டையும் ஆம்பற்கிழங்கும் தாமே வெளிப்படப் பெறுவர் என்றது, ஓய்மானாட்டவர் பெருமுயற்சியின்றியே அரிய பொருள்களைப் பெறும் நல்வளமுடைய ரென்றவாறு. யாமை தன் முட்டையைமறைவிடத்தே யீன்று புதைத்து விடுமென்றும், அம்முட்டை வட்டுப்போ லிருக்குமென்றும் கூறுப. வாய்த்தலைகளில் கதவமைத்து நீரை அளவறிந்து செலவிடுபவாதலின், விட்டவழிப் பெருகிவரும் நீரினது முழக்கத்தை விதந்த, இழுமென வொலிக்கும் புனலம் புதவுஎன்றார். பிறரும், புனலம் புதலின் மிழலை (புறம்.24) என்பது காண்க. நல்லியக் கோடனை யுடையையென்று ஊழினைப் பாராட்டிக் கூறியது, அவனால் வேண்டுவனற்றைக் குறைவறப் பெறுமாறு விளக்குதலின், நல்லியக் கோடனை யுடையையாகலான்,நீ ஒரு குறையை யுடையையல்லையென்றார். பாரி பறம்பிலுள்ள சுனைநீர் மிக்க தட்பமும் சுவையும் பெறற்கருமையு முடையதாகலின் சான்றோரால் கைவண் பாரி தீம்பெரும் பைஞ்சுனை(அகம்.78) என்றும், பாரி பறம் பிற்பனிச்சுனைத் தெண்ணீர்(குறுந்.196) என்றும் பாராட்டப்படும். உள்ளூரிற் பெறப்படும் அரிய பொருள் ஒருவர்க்கு அரிதாகாது மிக எளிதாய்க் கருதப்படுவதுபற்றி, ஒரூ ருண்மையின் இகந்தோர் போலஎன்றார். காணும் நாளில் நல்லியக் கோடனது சாயலின் நலனைக் கண்டு கண்டு இதனைப் பெறாது பல நாட்கள் வீணே கழிந்தனவே என்றும், இனிவரும் நாட்களினும் இந்நலன்இடையறாது உளதாக வேண்டுமே யென்றும் எழும் நினைவால் இரக்க உண்டாகலின், காணாது கழிந்த வைகல் காணாஎன்றும், என் நெஞ்சம் வழிநாட் கிரங்கும் என்றும் கூறினார். இது, வாராக்காற் றுஞ்சா வரிற் றுஞ்சா ஆயிடை, ஆரஞருற்றன கண்(குறள்-1179) என்றாற்போல ஆராமை குறித்துநின்றது. சாயல், மென்மை, இஃது ஆண்பாற்கும் உரித்தென்பது, நீரினும் இனிய சாயற் பாரிவேள்(புறம்-105) என்பதனா லறியப்படும். |