31. சோழன் நலங்கிள்ளி கோவூர் கிழார் என்னும் சான்றோர் இப்பாட்டின்கண் இச் சோழனைப் படுகின்றார். கோவூர் தொண்டை நாட்டிலுள்ளதோர் ஊர். இவ்வூரிற் பிறந்த சான்றோராகிய இவர், சிறந்த நல்லிசைப் புலமை யுடையராதல் ஒருபுறமிருக்க, இவர் செய்த அருஞ் செயல்கள் சில குறிக்கத் தகுவன. சோழன் நெடுங்கிள்ளி யென்பவன், ஆவூரிலும் உறையூரிலும் சோழன் நலங்கிள்ளியின் தம்பியாலும் அந் நலங்கிள்ளியாலும் முற்றுகையிடப் பட்டு அடைபட்டு அஞ்சிக் கிடந்தான். நெடுங்கிள்ளி, நலங்கிள்ளியின் தாயத்தாரில் ஒருவன். அக்காலத்தே இச் சான்றோர் அவற்கு அறிவுறுத்தும் வீர வுரைகள் இன்பந் தருவனவாகும். ஒருகால் அந்த நெடுங்கிள்ளி இளந்தத்த னென்னும் புலவனைச் சோழன் நலங்கிள்ளியின் ஒற்றனெனப் பிறழக் கருதிக் கொல்ல நினைத்தானாக, அதனை யுணர்ந்த இக் கோவூர் கிழார் தகுவன கூறி உய்வித்தார்; கிள்ளிவளவ னென்பான் மலையமான் மக்களைப் பற்றி யானைக் காலிலிட்டுக் கொல்ல நினைப்ப, இச் சான்றோர். சிறுவர்களின் இயல்பு கூறி, அவன் நினைவை மாற்றினார்.
இத்தகைய சான்றோர் இப்பாட்டின்கண், சோழன் நலங்கிள்ளியின் வென்றி நலத்தைச் சிறப்பித்து, வேந்தே, நீ நல்லிசை வேட்டம் வேண்டிப் பாசறையில் இருப்பதற்கே விழைகின்றாய்; நின் யானைப் படை, பகைவர் அரண்களைச் சிதைத்தும் அடங்காவாய் மைந்துற்று நிற்கின்றன; போரெனிற் புகலும் நின் மறவர், பகைவர் நாடு காடிடையிட்டு நெடுந் தூரத்திலுள்ளதெனவறிந்தும் செல்லுதற் கஞ்சார்; இவ்வாற்றால், குணகடற் கரையையுடைய நீகுடகடல் அடைந்து பின் அங்கிருந்தே வடபுலம் நோக்கி வருவாயெனநினைந்து, வடபுலத்தரசர் இரவெல்லாம் உறக்கமின்றிக் கிடக்கின்றனர் எனப் பாடிப் பாராட்டுகின்றார். | சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும் அறத்து வழிப்படூஉந் தோற்றம் போல இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை உருகெழு மதியி னிவந்துசேண் விளங்க | 5. | நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப் | | பாசறை யல்லது நீயொல் லாயே நுதிமுக மழுங்க மண்டி யொன்னார் கடிமதில் பாயுநின் களிறடங் கலவே போரெனிற் புகலும் புனைகழன் மறவர் | 10. | காடிடைக் கிடந்த நாடுநனி சேய | | செல்வே மல்லே மென்னார் கல்லென் விழவுடை யாங்கண் வேற்றுப்புலத் திறுத்துக் குணகடல் பின்ன தாகக் குடகடல் வெண்டலைப் புணரிநின் மான்குளம் பலைப்ப | 15. | வலமுறை வருதலு முண்டென் றலமந்து | | நெஞ்சுநடுங் கவலம் பாயத் துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே. (31) |
திணை: வாகை. துறை: அசரவாகை; மழபுல வஞ்சியுமாம். அவனைக் கோவூர் கிழார் பாடியது.
உரை: சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் - சிறப்புடை முறைமையால் பொருளும் இன்பமும்; அறத்து வழிப் படூஉம் தோற்றம்போல - அறத்தின் பின்னே தோன்றும் காட்சி போல; இரு குடை பின் பட-சேர பாண்டியருடைய இரண்டு குடையும் பின்னாக; ஓங்கிய ஒரு குடை உரு கெழு மதியின் நிவந்து சேண் விளங்க - ஓங்கிய நினது ஒன்றாகிய வெண் கொற்றக்குடை நிறம் பொருந்திய கலை நிறைந்த திங்கள் போல ஓங்கிச் சேய்மைக்கண்ணே விளங்க; நல்லிசை வட்டம் வேண்டி - நல்ல புகழ் வேட்கையை விரும்பி; வெல் போர்ப் பாசறை யல்லது ஒல்லாய் நீ - வெல்லும் போரினைச் செய்யும் பாடிவீட்டின் கண்ணே யிருத்தலல்லது நின்னகரின்கண் இருத்தலை உடம்படாய் நீ; நுதி முகம் மழுங்க மண்டி-கோட்டினது நுனை முகந் தேய மடுத்து; ஒன்னார் கடி மதில் பாயும் நின் களிறு அடங்கல - பகைவரது காவலையுடைய மதிலைக் குத்தும் நின்னுடைய யானைகள் அடங்கா; போரெனில் புகலும் புனை கழல் மறவர் - பூசலென்று கேட்பின் விரும்பும் அணிந்த வீரக் கழலையுடைய மறவர்; காடு இடைக் கிடந்த நாடு - காடு நடுவே கிடந்த நாடு; நனி சேய - மிகவும் தூரிய வாதலால்; செல்வே மல்லேம் என்னார் - யாம் போவேமல்லேமென்று கருதார் ஆதலான்; கல்லென் விழவுடை ஆங்கண் - ஓசையுண்டான விழாவினையுடைய அவ்விடத்து; வேற்றுப் புலத்திறுத்து - பகைப் புலத்தின்கண்ணே தங்கிவிட்டு; குண கடல் பின்ன தாக - கீழ் கடல் பின்னதாக; குட கடல் வெண்டலைப் புணரி - மேல் கடலினது வெளிய தலையையுடைய திரை; நின் மான் குளம்பு அலைப்ப - நினது குதிரையினது குளம்பை யலைப்ப; வலம் முறை வருதலுமுண்டென்று - வலமாக முறையே வருதலு முண்டாமென்று; அலமந்து - சுழன்று; நெஞ்சு நடுங்கு அவலம் பாய - நெஞ்சம் நடுங்கும் அவலம் பரப்ப; துஞ்சாக் கண்ண வடபுலத்தரசு - துயிலாத கண்ணையுடையவாயின வடநாட்டுள்ள அரசுகள் எ-று.
அவம்பாய வென்பதூஉமாம்.
விளக்கம்: உலக வாழ்க்கையில் மக்களால் நெறியறிந்து எய்துதற்கரிய சிறப்புடைய பொருள், அறம் பொருளின்ப மூன்று மாதலால், பொரு ளின்பங்களை, சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் என்றார். சேர பாண்டியர் இருவர் குடைக்கும் பொருளின்ப மிரண்டும் உவமம். நல்லிசை வேட்ட மென்புழி, வேட்டம், வேட்கை யுணர்த்தி நின்றது; உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோரே (புறம்.214) எனப் பிறரும் கூறுதல் காண்க. தூரிய - தூரமுடைய. புணரி - அலை; வெண்டலைப் புணரி (புறம்.2) என வருதல் காண்க. ஒவ்வொரு திசையினும் வென்றி நிலைநாட்டி வரும் முறைமையால் வடதிசையினும் அது நிலைநாட்டற்கு வருவான் என்றற்கு, வலம் முறை வருதலுமுண்` டென்றஞ்சினர். பாய்தல் - பரத்தல். |