157. ஏறைக் கோன்

     ஏறைக் கோனை ஏறை யென்றும் வழங்குப. நன்னன், ஏற்றை, அத்தி,
கங்கன், கட்டி, புன்றுரை யெனப்படுவோர் வரிசையுட் காணப்படும் ஏற்றை
வேறு, ஏறைக் கோன் வேறு. இவனைப் “பெருங்கல் நாடனெம் மேறைக்குத்
தகுமே”என்றதனால், ஏறை யென்பது இயற் பெயராதல் விளங்குகிறது.
ஆண் மக்கட்கு ஆற்றல் பொருளாக ஏற்றை யென்றும் ஏறையென்றும்
பெயர்கள் அக்காலத்து வழங்கின வென்று இதனால் அறியலாம். இவன்
குறிஞ்சிநிலத்துக் குறவர்க்குத் தலைவன்; வில்லும் வேலும் வல்லவன்;
காந்தட்பூவாற் றொடுத்த கண்ணி சூடுபவன்; தனக்குரியோர் பிழை செய்யின்
அதனைப் பொறுத்தலும், பிறர்க்குண்டாகிய வறுமை கண்டு நாணுதலும்,
படையாளுமிடத்துப் பழிபடாமையும், வேந்தர் அவைக்களத்துப்
பெருமிதமுற்று விளங்குதலும் ஏறைக் கோனுடைய சீரிய பண்புகளாகும்.
இவனைக் குறமகள் இளவெயினி யென்பார் இப்பாட்டால் சிறப்பிக்கின்றார்.

     வேறுநிலத் தலைவர்களும் சான்றோர்களும் கூடிய அவையின்கண்,
சான்றோராகிய குறமகள் இளவெயினி யென்பார் தமது நாட்டுத் தலைவன்
பண்புகளை யெடுத்தோத வேண்டிய நிலையுண்டாயிற்று. அப்போழ்து,
அவர்,“தமர் பிழை பொறுத்தல் முதல் வேந்தர் அவையில் ஓங்க
வீற்றிருந்தல் ஈறாகக் கூறப்படும் பண்புகள் நும்மோர்க்குத் தகுவனவல்ல;
பெருங்கல் நாடனாகிய எம் ஏறைக்கே தகும்”என இப்பாட்டைப்
பாடியிருக்கின்றார்.

    ஏறைக்கோனைத் தலைவனாகக் கொண்ட குறமக்களுள் ஒருவராதலின்,
இளவெயினியார் குறமகள் இளவெயினியார் எனக் குறிக்கப்படுகின்றார்.
முதுவெயினியா ரல்லரென்பது தோன்ற, “இளவெயினி”யென்ற பெயர் சிறந்து
நிற்கிறது. “நும்மோர்க்குத் தகுவனவல்ல”என்றும், “எம் ஏறைக்குத் தகும்”
என்றும் இவர் கூறுவன இவரது உள்ளத்தின் இளமைப் பண்பை
வற்புறுத்துகின்றன. இளவெயினனார் என்னும் சான்றோர் ஒருவரும்
குறமகள் குறி யெயினியார் என்னும் சான்றோர் ஒருவரும் நற்றிணைப்
புலவர் வரிசையுட் காணப்படுகின்றனர். இவ் விளவெயினியாரே
நற்றிணையில் வரும் குறியெயினியாராகலாம் என்றும், இப் புறப்பாட்டு
இளமைக் காலத்தும், நற்றிணைப் பாட்டுப் பிற்காலத்தும் பாடப்
பட்டிருக்கலாமென்றும், நற்றிணைப் பாட்டில், இவர் “நின்குறிப் பெவனோ
தோழியென் குறிப்பு, என்னொடு நிலையா தாயினும் என்றும், நெஞ்சு
வடுப்படுத்துக் கெடவறியாதே”(நற்.357) என்று பாடிய சிறப்பால்
குறிப்பெயினியார் என்று பெயர் பெற்றிருக்க வேண்டுமென்றும், அப்
பெயர் ஏடெழுதினோரால் குறியெயினியாரென வெழுதப்பட்டிருக்க
வேண்டுமென்றும் நற்றிணை யுரைகாரர் கூறுகின்றார்.

 தமர்தற் றப்பி னதுநோன் றல்லும்
பிறர்கை யறவு தானா ணுதலும்
படைப்பழி தாரா மைந்தின னாகலும்
வேந்துடை யவையத் தோங்குபு நடத்தலும்
5நும்மோர்க்குத் தகுவன வல்ல வெம்மோன்
 சிலைசெல மலர்ந்த மார்பிற் கொலைவேற்
கோடற் கண்ணிக் குறவர் பெருமகன்
ஆடுமழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை
எற்படு பொழுதி னினந்தலை மயங்கிக்
10கட்சி காணாக் கடமா னல்லேறு
 மடமா னாகுபிணை பயிரின் விடர்முழை
இரும்புலிப் புகர்ப்போத் தோர்க்கும்
பெருங்க னாடனெம் மேறைக்குத் தகுமே.
 (157)

     திணையுந் துறையு மவை. ஏறைக் கோனைக் குறமகள்
இளவெயினியார்  பாடியது.

     உரை: தமர் தன்  தப்பின் அது நோன்றலும் - தனக்குச்
சிறந்தார்  தன்னைப்  பிழைப்பின்   அது  பொறுத்தலும்;  பிறர்
கையறவு  தான்   நாணுதலும் - பிறருடைய  மிடிமைக்குத்   தான்
நாணுதலும்; படைப் பழி தாராமைந்தின னாகலும் - படையிடத்துப்
பிறர்     பழிக்கப்படாத    வலியையுடையனாதலும்;    வேந்துடை
அவையத்து    ஓங்குபு    நடத்தலும்     -    அரசுடைத்தாகிய
அவைக்களத்தின்கண் மேம்பட்டு நடத்தலும்; நும்மோர்க்குத்  தகுவன 
வல்ல -
நும்மான்  மதிக்கப்படும் தலைவர்களுக்குத்   தகுவனவல்ல; 
எம்மோன் -  எம்முடைய தலைவன்;  சிலை  செல  மலர்ந்த
மார்பின் -  வில்லைப் பூரணமாக வலித்தலான் அகன்ற மார்பினையும்;
கொலை வேல் - கொல்லும் வேலினையும்; கோடல் கண்ணிக் குறவர்
பெருமான் - காந்தட் பூவாற் செய்த கண்ணியினையுமுடைய குறவர்க்குத்
தலைமகன்;   ஆடு  மழை  தவிர்க்கும்  பயம்   கெழு மீமிசை -
இயங்குகின்ற   முகிலைத்  தனது  உயரத்தால்  தடுக்கும்   பயன்
பொருந்திய மலையினது உச்சிக்கண்; எற்படு பொழுதின் - ஞாயிறு
படுகின்ற காலத்தில்; இனம் தலை மயங்கிக் கட்சி காணாக் கடம்
- இனத்தினின்றும் தலை மயங்கித் தான் சேரும் சேக்கையைக்
காணாத காட்டின்கண்; மான் நல் லேறு மடமான் நாகு பிணை
பயிரின் - மானினது நல்ல கலை மடப்பத்தினையுடைய மானாகிய
இளம் பிணையைப் பயிரான் அழைப்பின்; விடர் முழை இரும் புலிப்
புகர்ப்   போத்து  ஓர்க்கும்  -  அவ்வோைசையை  விடராகிய
முழையின்கண் கிடக்கின்ற பெரும் புலியாகிய புகர் நிறத்தினையுடைய
ஏறு செவி தாழ்த்துக் கேட்கும்; பெருங்கல் நாடன் எம் ஏறைக்குத்
தகும் - பெரிய மலைநாடனாகிய எம்முடைய ஏறைக்கோனுக்குப்
பொருந்தும் எ-று.

     சிலை செல மலர்ந்த மார்பு என்பதற்கு மலை தோற்க மலர்ந்த
மார்பெனினு மமையும். தலைமயங்கி யென்பதனுள், தலை: அசைநிலை.

     விளக்கம்: “குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை”யென்றும்,
“அன்பெனப் படுவது தன்கிளை செறாமை”(கலி.133) என்றும் சான்றோர்
கூறுதலின், தமர் பிழை செய்யின் அதனைப் பொறுப்பது சீரிய பண்பாயிற்று.
“விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற், கேளாது நட்டார்
செயின்”(குறள்.804) என்று  திருவள்ளுவனாரும் கூறுவர். பிறர் வறுமை
கண்டவழி, அதனை முன்பே கண்டு தீர்க்காமை தமது குற்றமாகக் கருதி
நாணுதல் சான்றோர்க் கியல்பதலின், “பிறர் கையறவுதான் நாணுதல்”என்றார்.
அறிவு ஆண்மை பொருள்  படைகளால்   சிறந்தார்க்    கல்லது
வேந்துடையவையின்கண் பெருமிதற் தோன்றாதாகையால், வேந்துடை
யவையத் தோங்குபு நடத்தலை விதந்தோதினார். எம்மை  யுடையோன்
என்பது எம்மோன் என  நின்று தலைவற்காயிற்று.  விற்பயிற்சியால்
மார்பகலுதலும், அதன் அகலம் வலிய வில்லை நன்கு வளைத்தற்கு
ஏதுவாதலும் கண்டு, “சிலைசெல மலர்ந்த மார்பு”என்றார். தன்னாட்டுமலை
நீர் சுமந் தேகும் முகிலைத் தடுத்துத் தன்பால்  நீரைப் பெய்வித்துக்கொள்ள,
தான், தனக்கஞ்சி   வாழும் பகைவேந்தர்  பிறர்   துணை  வேண்டி
முயல்வதனைக்  குறிக்கொண்டு நோக்கும் நாடும் காவற்சிறப்பும்
ஏறைக்கோனுக் குண்டென்பதை உள்ளுறுத் துரைத்தார்.