107.வேள் பாரி

     இப் பாட்டின்கண், ஆசிரியர் கபிலர், “நாட்டிற் புலவர் பலரும்
‘பாரி, பாரி’ யெனப் பாரி யொருவனையே   புகழ்கின்றனர்; இவ்வுல
குயிர்களைப் புரத்தற்கண்  பாரி  யொருவனேயன்றி  மாரியும்  உண்டே;
இஃதென்ன வியப்பு ”என வியந்து கூறியுள்ளார்.
 
பாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.    
(107)

     திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

     உரை:பாரி பாரி என்று - பாரி பாரி யென்று சொல்லி; பல
ஏத்தி - அவன் பல புகழையும் வாழ்த்தி; ஒருவற் புகழ்வர் செந்நாப்
புலவர் - அவ்வொருவனையே புகழ்வர் செவ்விய நாவையுடைய
அறிவுடையோர்; பாரி ஒருவனும் அல்லன் - பாரியாகிய ஒருவனுமே
யல்லன்; மாரியும் உண்டு-; ஈண்டு உலகு புரப்பது - இவ்விடத்து
உலகத்தைப் பாதுகாத்தற்கு எ-று.

     உலகு புரத்தற்கு மாரியு முண்டாயிருக்கப் பாரி யொருவனைப்
புகழ்வர் செந்நாப் புலவ ரெனப் பழித்தது போலப் புகழ்ந்தவாறு.

     விளக்கம்:ஒருவர் புகழ்வர் என்றவிடத்துப் பிரிநிலை யேகாரம்
தொக்கது செந்நாப் புலவர் என்றார், பிறர் புகழின் அது பொருளாகக்
கொள்ளப்படா தென்றற்கு. மக்களுட் பிறர் இல்லையாயின், உலகு புரக்கும்
தொழி லொப்புமையால் மாரியுண்டன்றோ; அதனைப் புகழ்தற்கென்னை
என்பதாம். “உறுமிடத் துதவாது”(புறம். 143) போதலும் மாரிக்கு இயல்பு;
அச் சிறுமை யியல்பு பாரிபால் என்றும் இல்லாமையால் செந்நாப் புலவர்
பாரி யொருவனையே புகழ்ந்தன ரென வறிக.