107.வேள் பாரி இப் பாட்டின்கண், ஆசிரியர் கபிலர், நாட்டிற் புலவர் பலரும் பாரி, பாரி யெனப் பாரி யொருவனையே புகழ்கின்றனர்; இவ்வுல குயிர்களைப் புரத்தற்கண் பாரி யொருவனேயன்றி மாரியும் உண்டே; இஃதென்ன வியப்பு என வியந்து கூறியுள்ளார். பாரி பாரி யென்றுபல வேத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி யொருவனு மல்லன் மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே. (107) |
திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.
உரை:பாரி பாரி என்று - பாரி பாரி யென்று சொல்லி; பல ஏத்தி - அவன் பல புகழையும் வாழ்த்தி; ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் - அவ்வொருவனையே புகழ்வர் செவ்விய நாவையுடைய அறிவுடையோர்; பாரி ஒருவனும் அல்லன் - பாரியாகிய ஒருவனுமே யல்லன்; மாரியும் உண்டு-; ஈண்டு உலகு புரப்பது - இவ்விடத்து உலகத்தைப் பாதுகாத்தற்கு எ-று.
உலகு புரத்தற்கு மாரியு முண்டாயிருக்கப் பாரி யொருவனைப் புகழ்வர் செந்நாப் புலவ ரெனப் பழித்தது போலப் புகழ்ந்தவாறு.
விளக்கம்:ஒருவர் புகழ்வர் என்றவிடத்துப் பிரிநிலை யேகாரம் தொக்கது செந்நாப் புலவர் என்றார், பிறர் புகழின் அது பொருளாகக் கொள்ளப்படா தென்றற்கு. மக்களுட் பிறர் இல்லையாயின், உலகு புரக்கும் தொழி லொப்புமையால் மாரியுண்டன்றோ; அதனைப் புகழ்தற்கென்னை என்பதாம். உறுமிடத் துதவாது(புறம். 143) போதலும் மாரிக்கு இயல்பு; அச் சிறுமை யியல்பு பாரிபால் என்றும் இல்லாமையால் செந்நாப் புலவர் பாரி யொருவனையே புகழ்ந்தன ரென வறிக. |