39. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இக் கிள்ளி வளவனை இப் பாட்டின்கண் மாறோக்கத்து நப்பசலையார், வளவ, நின்னைப் பாடுங்கால் நின் ஈகையைப் புகழ்வதும் புகழாகாது, அது நின் முன்னோர் செய்கை; பகைவரை யடுதலும் புகழன்று, நின் முன்னோர் தூங்கெயி லெறிந்தவர்; முறை செய்தலும் புகழன்று, நினக்குரிய உறந்தையில் அறம் நிலை நிற்பது; சேரரது வஞ்சி நகரை யலைக்கும் நின் வென்றி யான் பாடும் திறமன்று என்று பாராட்டுகின்றார். | புறவி னல்லல் சொல்லிய கறையடி யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக் கோனிறை துலாஅம் புக்கோன் மருக ஈதனின் புகழு மன்றே சார்தல் | 5. | ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறல் | | தூங்கெயி லெறிந்தநின் னூங்கணோர் நினைப்பின் அடுதனின் புகழு மன்றே கெடுவின்று மறங்கெழு சோழ ருறந்தை யவையத் தறநின்று நிலையிற் றாகலி னதனால் | 10. | முறைமையின் புகழு மன்றே மறமிக் | | கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோட் கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ யாங்கன மொழிகோ யானே யோங்கிய வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட் | 15. | டிமயஞ் சூட்டிய வேம விற்பொறி | | மாண்வினை நெடுந்தேர் வானவன் றொலைய வாடா வஞ்சி வாட்டுநின் பீடுகெழு நோன்றாள் பாடுங் காலே. (39) |
திணையும் துறையும் அவை. அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
உரை: புறவின் அல்லல் சொல்லிய - புறவினது வருத்தத்தைக் களைய வேண்டி; கறை யடி யானை வான் மருப் பெறிந்த - பொருந்திய அடியினையுடைய யானையினது வெளிய கோட்டாற் கடைந்து செறிக்கப்பட்ட; வெண் கடைக் கோல் நிறை துலாம் புக்கோன் மருக - வெளிய கடையினையுடைய கோலாகிய நிறுக்கப்படும் துலாத்தின்கண்ணே துலை புக்க செம்பியனது மரபினுள்ளா யாதலான்; ஈதல் நின் புகழும் அன்றே - இரந்தோர்க்குக் கொடுத்தல் நினக் கியல்பாவதல்லது புகழு மல்லவே; ஒன்னார் சார்தல் உட்கும் - அசுரர்க்குப் பகைவராகிய தேவர்கள் கிட்டுதற்கு வெருவும்; துன்னரும் கடுந்திறல் - அணுகுதற்கரிய மிக்க வலியையுடைய; தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின் - ஆகாயத்துத் தூங்கெயிலை யழித்த நின்னுடைய முன்னுள்ளோரை நினைப்பின்; அடுதல் நின்புகழும் அன்றே - ஈண்டுள்ள பகைவரைக் கொல்லுதல் நினது புகழும் அல்லவே; கெடு வின்று - கேடின்றி, மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறம் நின்று நிலையிற் றாகலின் - மறம் பொருந்திய சோழரது உறையூர்க்கண் அவைக்களத்து அறம் நின்று நிலைபெற்ற தாதலால்; முறைமை நின் புகழும் அன்றே - முறைமை செய்தல் நினக்குப் புகழு மல்லவே; அதனால்-; மறம் மிக்கு எழு சமம் கடந்த - மறம் மிக்கு எழுந்திருந்த போரை வென்ற; எழு உறழ்திணி தோள் - கணைய மரத்தோடு மாறுபடும் தசை செறிந்த தோளினையும்; கண்ணார் கண்ணிக் கலியமான் வளவ - கண்ணிற் கார்ந்த கண்ணியையும் மணம் செருக்கிய குதிரையையுமுடைய வளவ; யாங்கனம் மொழிகோ யான் - எவ்வாறு கூறுவேனோ யான்; ஓங்கிய வரை அளந் தறியா - உயர்ந்த எல்லையளந் தறியப்படாத; பொன் படு நெடுங் கோட்டு இமயம் சூட்டிய ஏம விற்பொறி-பொன் படுகின்ற நெடிய சிகரங்களையுடைய இமயமலையின்கட் சூட்டப்பட்ட காவலாகிய விற் பொறியையும்; மாண்புனை நெடுந்தேர் வானவன் தொலைய - மாட்சிமைப்பட்ட தொழில் பொருந்திய நெடிய தேரையுமுடைய சேரன் அழிய; வாடா வஞ்சி வாட்டும் - அவனது அழிவில்லாத கருவூரை யழிக்கும்; நின் பீடு கெழு நோன்றாள் பாடுங்கால் - நினது பெருமை பொருந்திய வலிய தாளைப் பாடுங் காலத்து எ-று.
நின்னைப் பாடுங்கால் என்பார், அவனது சிறப்புத் தோன்றத் தாம் பாடுங்கால் என்றார். தாளை முயற்சி யெனினு மமையும். நிறை துலாம் புக்கோன் மருக, நீ அவன் மருகனாதலால், ஈதல் நின் புகழு மன்று; தூங்கெயி லெறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், அடுதல் நின் புகழுமன்று; உறந்தை யவையத்து அறம் நின்று நிலையிற்றாதலின், முறைமை நின் புகழுமன்று; அதனால், கலிமான் வளவ, நின் தாள் பாடுங்கால் யான் யாங்கன மொழிகோவெனக் கூட்டுக. அதனால் யாங்கன மொழிகோவென வியையும். மருக வென்புழி ஆதலானென்பது ஆற்றலாற் போந்த பொருளெனக் கொள்க. கறையடி யென்பதற்கு உரல் போலும் அடியென்பாரு முளர்.
விளக்கம்: சொல்லிய என்புழிச் சொல்லுதல் களைதல் என்னும் பொருளது; ஒக்கல் ஒக்கஞ் சொலிய (புறம்.327) எனப் பிறரும் கூறுதல் காண்க. நின் புகழ் - நினக்குப் புகழ் என நான்கனுருபு விரித்துக் கொள்ளப்பட்டது. கடுந் திறல்: கடுமை: மிகுதி. ஊங்கணோர் - முன்னோர். கெடுவின்று என்புழிக் கெடுவென்பது முதனிலைத் தொழிற் பெயர்; கெடுவாக வையா துலகு (குறள்.117) என்றாற் போல. ஏழு சமம் - மறத்தீக் கிளர்தலால் எழுந்து வீறிட்டுச் செய்யும் போர். வரை - எல்லை. ஏம விற்பொறி - காவலாகிய விற்பொறி; சேரமான் தன்னரசு காவலாகிய ஆணை செல்லுதற் கெல்லையாக இட்ட பொறியாதலால், ஏம விற்பொறி என்றார். வானவன் சேரன்; சேரரை வானவ ரென்றும் வான வரம்ப ரென்றும் வழங்குப; இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் என்று ஈண்டுக் கருதப்படுகின்றான். சீனர் தம்மை வானவர் என்று கூறிக்கொள்வது கொண்டு, சேரர் பண்டு சீனநாட்டிலிருந்து குடியேறியவரென முடிபு செய்வது, வரலாறறியாதார் தவறுடைக் கூற்றாகும். பாடுதற்குச் சிறப்புடையது தாள் எனஅறிக; வாய்வாள் வளவன் வாழ்கெனப், பீடுகெழு நோன்றாள் பாடுகம் பலவே (புறம்.393) எனப் பிறரும் தாளே பாடுதல் காண்க. |