1. மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. | இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை ஆவாள்.
| 51 | |
2. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல். | இல்வாழ்க்கைக்குத் தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால். ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
| 52 | |
3. இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென் இல்லவள் மாணாக் கடை? | மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?
| 53 | |
4. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்? | இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?
| 54 | |
5. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்எனப் பெய்யும் மழை. | வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!
| 55 | |
6. தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொல்காத்துச் சோர்விலாள் பெண். | கற்புநெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.
| 56 | |
7. சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை. | மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.
| 57 | |
8. பெற்றால் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. | கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப் பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலக வாழ்வைப் பெறுவர்.
| 58 | |
9. புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. | புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர்முன் காளைபோல் நடக்கும் பெருமித நடை இல்லை.
| 59 | |
10. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு. | மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்றும் கூறுவர்.
| 60 | |
|
|