93. கள்ளுண்ணாமை |
921. | உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் |
| கட்காதல் கொண்டொழுகு வார். |
|
மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல, மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். |
922. | உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான் |
| எண்ணப் படவேண்டா தார். |
|
மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம். |
923. | ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் |
| சான்றோர் முகத்துக் களி. |
|
கள்ளருந்தி மயங்கிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள். |
924. | நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் |
| பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. |
|
மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும். |
925. | கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து |
| மெய்யறி யாமை கொளல். |
|
ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும். |