7. சிறுமைநோ னாதோன் பெருமைவேண்டல் பொய். (ப-பொ.) பிறர்க்குத் தான்செய்யும் பணிவினைப் பொறாதோன் தனக்குப் பெருமை வேண்டுதல் பொய். பிறர் தனக்குச் செய்யும் பணிவினைப் பொறாதோன் என்று பாடபேதம் உண்டு. (ப-ரை.) சிறுமை - அடக்கத்தை, நோனாதோன் - அனுசரிக்கப் பொறாதவன், பெருமை - பெருமையை, வேண்டல் - வேண்டுதல், பொய் - பொய்யாம். நோன்றல் - பொறுத்தல் (இதற்கு எதிர்மறை நோனாமை) : உற்ற நோய் நோன்றல்" (திருக்குறள்) என வருகின்றது. பெருமையை விரும்புகின்றவன் பிறரிடம் பணிவாக அடங்கி நடப்பான். "பெருமை பெருமித மின்மை" என்றது திருக்குறள். 8. பெருமைநோ னாதோன் சிறுமைவேண்டல் பொய். (ப-பொ.) பிறர்க்குத் தான் அரியனாம் பெருமை வேண்டாதான் தனக்குச் சிறுமைக்குணம் வேண்டுதல் பொய். (ப-ரை.) பெருமை - பிறர் தன்னை அரியனாகக் கொள்ளும் பெருமையை, நோனாதோன் - வேண்டாதவன், சிறுமை - இழிகுணத்தை, வேண்டல் - விரும்புதல், பொய் - பொய்யாம். பிறர் தன்னை அரியனாக மதித்தலை விரும்பாதவன் இழிகுணத்தை விரும்பான். "பெருமை பெருமிதமின்மை" ஆதலால், பெருமித மில்லாதவன் இழிகுணத்தை விரும்புவதில்லை. 9. பொருணசை வேட்கையோன் முறைசெயல் பொய். (ப-பொ.) பொருணசையால் வரும் வேட்கையை உடையான் முறைசெய்தல் பொய். நசை - இச்சை. வேட்கை - ஆசைப்பெருக்கம். முறை - நீதி. (ப-ரை.) பொருள் நசை - பொருளில் விருப்பத்தால் வரும், வேட்கையோன் - பேராசையுடையவன், முறைசெயல் - நீதியை மேற்கொண்டு நடத்தல், பொய் - பொய்யாம்.
|