பக்கம் எண் :

9

திருக்குறள்

பரிமேலழகர் உரை


உரைப்பாயிரம்

இந்திரன் முதலிய இறைவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல் வீடும் நெறி அறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையு மொழியுஞ் செல்லா நிலைமைத்தாகலின், துறவறம் ஆகிய காரணவகையான் கூறப்படுவதல்லது இலக்கணவகையான் கூறப்படாமையின், நூல்களால் கூறப்படுவன ஏனை மூன்றுமே ஆம்.

அவற்றுள் அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழி்தலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.

அவற்றுள் ஒழுக்கமாவது, அந்தணர் முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று, அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.

வழக்காவது, ஒரு பொருளைத் தனித்தனியே 'எனது எனது' என்று இருப்பார், அது காரணமாகத் தம்முள் மாறுபட்டு, அப்பொருள் மேல் செல்வது. அது 'கடன் கோடல்' முதல் பதினெட்டுப் பதத்தது ஆம்.