நாணுக் கருமத்தால் நாணுதல் -நன்மக்கள் நாணுவது தீய வினைகள் செய்ய வெட்கிப் பின் வாங்குதல்; பிற திருநுதல் நல்லவர் நாணு - அஃதன்றித் தனித்து வெளிச் செல்லுதல் , அறியாத ஆடவரொடு உரையாடல், ஆடவருள்ள அவையிற் பேசுதல் முதலிய பிறவற்றிற்கு வெட்கப் படுதலும் கூச்சப் படுதலும் , அழகிய நெற்றியையுடைய குலமகளிர்க்கேயுரிய நாண்களாம். 'திருநுதல் நல்லவர்' என்பது பாராட்டுப் பற்றிய புகழ்ச்சிச் சொல். பிற ' திருநுதல் நல்லவர் நாணு' என்றதனால் ஏனையது நன்மக்கள் நாண் என்பதும், ' நாணுதல் ' என்றதனால் கருமத்தின் இழிவும் பெறப்பட்டன. நாணும் வினைப்பன்மை பற்றிப் 'பிற ' என்றார் இக்குறளின் பிற்பகுதிக்கு, "அஃதல்லாத நாணம் அழகிய நுதலினாலே நல்லாராகிய கணிகையர் நாணத்தோடு ஒக்கும் என்றவாறு". என்றுரைத்தார் மணக்குடவர். இனி அற்றமறைத்தல் முதலியன பொதுமகளிர் நாணோ டொக்குமென்றுரைப்பாரு முளர். அவர்க்கு நாண் கேடு பயக்குமென விலக்கப்படாமையானும், அவர் பெயராற் கூறப்படாமையானும் , அஃதுரையன்மை அறிக. என்று பரிமேலழகர் கூறியிருப்பது சரியே. இதனால் நாணின் இலக்கணங் கூறப்பட்டது.
|